Saturday 18 May 2013

'தர்மம் பண்ணுவதில் ஒத்திப்போடாதே, எப்போதும் யமன் உன் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டேயிருக்கிறான்"


எது வேத தர்மம்?

மேல் நாடுகளில் பெரிதாக ஸ்தாபன ரீதியில் institutionalise செய்து பரோபகாரப் பணிகள் செய்கிறார்கள். இப்படித் தனி ஸ்தாபனங்கள் இல்லாமலே தனி மனிதர்களாகவும், ஸங்கமாகவும் பொதுநலப்பணி புரிவது நமது வைதிக தர்மத்துக்கு ஆதாரமான ஓர் அம்சமாக ஆதியிலிருந்து இருந்து வந்திருக்கிறது.

'இன்ஸ்டிட்யூஷனலைஸ்' செய்யாமல் தன்னியல்பாக நம் வாழ்முறையிலேயே கண்ணுக்குத் தெரியாமல், ஒட்டிக்கொண்டு பரோபகாரம் நடைபெறுதில் ஒரு உத்தமமான அம்சம் என்ன என்றால் இங்கேதான் அஹங்காரம் தலைதூக்கவே இடமில்லாமலிருக்கிறது. 'இன்ஸ்டிட்யூஷன்' என்றால் office-bearer s (அதில் பதவி வகிப்பவர்கள்) எலெக்ஷ்ன், போட்டா போட்டி, ப்பளிஸிடி எல்லாமும் வந்துதான் சேரும். அதனால்தான் நான் ஸங்கமாகச் செய்ய வேண்டிய அநேகப் பணிகளைச் சொல்கிறபோதுகூட, இதற்காகத் தனி ஆர்கனைஸேஷனும் office-bearer s-உம் வேண்டாம். ஏற்கனவே இருக்கிற வார வழிபாட்டுக் கழகம், பாவை கமிட்டி, பஜனை கோஷ்டி, ஸத்ஸங்கம் ஏதாவது ஒன்றின் மேற்பார்வையிலும் பொறுப்பிலும் இந்தப் பணிகளையும் கொண்டுவந்து விடுங்கள் என்கிறேன். 

ரொம்பப் பெரிசாக திட்டம் போடவேண்டாம், அவசியத்துக்கு அதிகமாக வசூல் பண்ணவேண்டாம் என்றெல்லாம் நான் எச்சரிப்பதற்கும் காரணம், இப்படிப் பெரிசாகக் கால் வைத்தால் முதலில் இதைச் செய்யும் நம் ஸ்தாபனத்துக்கு பப்ளிஸிடி தேடவேண்டிவரும். அது அப்படியே வழுக்கி விட்டு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருக்கிற நமக்கும் self-publicity தேடிக்கொள்கிற சபலத்தில் கொண்டுவிடும். ஆண்டு விழாவில் நாம் வரவேற்பு சொல்ல மாட்டோமோ, வந்தனோபசாரம் சொல்ல மாட்டோமோ, வருகிற முக்கியஸ்தர்களுக்கு மாலையாவது போடமாட்டோமா, ஃபோட்டோவிலாவது தெரியும்படி நிற்கமாட்டோமா என்று இப்படியெல்லாம் மனஸை அலையச்செய்யும். 

அதாவது அஹங்காரத்தை அழித்துக்கொள்ளவே ஏற்பட்ட பொதுத்தொண்டு, நேர்மாறாக அஹங்காரத்தை விருத்தி செய்கிறதாக விபரீத ரூபம் எடுத்துவிடும். தான் இருக்கிற இடமே தெரியாமல், தன் காரியம் மட்டுமே தெரிவதுதான் தொண்டின் லக்ஷணம். இதனால்தான் ' தர்மே க்ஷரதி கீர்த்தநாத் ' என்று சொல்கிறது. அதாவது, பாபம் பண்ணிவிட்டேன் என்று ஒருத்தன் வெளியில் சொன்னாலே எப்படி அவனுடைய பாபம் நசித்துவிடுமோ, அப்படி ''தர்மம் பண்ணுகிறேன்'' என்று தண்டோரா போட்டுக்கொண்டால் அதனால் ஒருத்தனுக்குக் கிடைக்கிற புண்யமும் நசித்துவிடுமாம்! ஸம்ஸ்க்ருதத்தில் subtle -ஆக (நுட்பம் மிக்கதாக) ''தர்ம த்வஜன்'' என்பார்கள். தர்ம த்வஜன் என்றால் தர்மக்கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவன் என்று அர்த்தம். இது பாராட்டுகிற டைட்டில் மாதிரி தொனித்தாலும் இதற்கு உள்ளர்த்தம் ''போலி தர்மவான்'' என்பதே! தன் தர்மத்தை உசத்திக் காட்டுவதாலேயே அதை இவன் போக்கிக் கொண்டுவிடுகிறான் என்பது தாத்பர்யம்!

'இன்ஸ்டிட்யூஷனலைஸ்' பண்ணுவதுபற்றிச் சொல்ல வந்தேன்.

மேல்நாடுகளில் Orphan-home (அநாதை இல்லம்) என்று தனியாக வைக்கிறார்களென்றால், நம் சாஸ்த்ரப்படி ஒவ்வொரு இல்லத்திலும் அநாதைக்கும் அதிதிக்கும் இடமுண்டு. மேல் நாட்டுக்காரர்களின் வீட்டுக்குள் அநாதைகளோ அதிதிகளோ நுழையக்கூட முடியாமல் நாய் கட்டியிருக்கும்! அவன் வாழ்க்கையோடு, ரத்தத்தோடு அதிதி ஸத்காரமும், அநாதை பராமரிப்பும் ஒட்டாமல் அவைபாட்டுக்கு மெகானிகலாக ஸ்தாபன ரீதியில் நடக்கும். (எல்லாரும் இப்படி என்று நான் சொல்லவில்லை. எந்த தேசத்திலும் உத்தமர்கள், பரோபகாரிகள், த்யாகிகள் உண்டு. அப்படியே ஸ்வயநலக்காரர்களும் உண்டு. பொதுவாகச் சொன்னேன்.) 

மேல்நாட்டானைக் காப்பியடித்து, '' அதிதி தேவோ பவ '' என்ற கொள்கையைக் கொண்ட நம் தேசத்திலும் வீட்டு வாசல்களில் ''நாய் ஜாக்கிரதை!'' போர்டு தொங்குவதைப் பார்த்தால் வேதனையாயிருக்கிறது. ''வா வா'' என்று வழிப்போக்கர்களைக் கூப்பிட்டுப் படுக்க வைத்துக்கொள்ளவே 'திண்ணை' என்பது நம்முடைய வைதிகமான க்ருஹ சில்பத்தில் இருந்தது. இப்போது அதெல்லாம் போச்சு. இப்படியே அன்றன்றும் வைச்வதேவ பலியில் தெருவில் போகிற எவனோ பஞ்சமன் சாப்பிடக்கூட ஒரு பங்கு அன்னம் போடப்பட்டு வந்த இந்த தேசத்தில் இம்மாதிரி அநுஷ்டானங்களை 'ஸ¨பர்ஸ்டிஷன்' என்று தள்ளி வைத்து விட்டதும் மனஸுக்கு க்லேசமாயிருக்கிறது.

மேல்நாட்டு மோஸ்தரில் இங்கேயும் தனி மநுஷ்யனின் குடும்பம் தனக்கே என்று ஆனபிறகு, இங்கேயும் அங்கே மாதிரி ஸமூஹப் பணிகளை இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்வதாகவும் என்பதாக ராஜாங்கமே அநாதையில்லம், வயஸானவர் பென்ஷன் என்றெல்லாம் நடத்துவதுமாக ஆகிவிட்டது. இன்றைய ஸெட் அபிபில் இதுவுமில்லாவிட்டால் நிராதரவானவர்களின் பாடு ரொம்பவும் கஷ்டமாகத்தான் ஆகிவிடும். ஆனாலும் பூர்வத்தில் ஒவ்வொருவரும் வஸுதைவ குடும்பகம் (லோகம் முழுக்க ஒரு குடும்பம்) என்ற அன்பான எண்ணத்தோடு தாங்களே ஆதரவற்றவர்களைத் தாங்கி தரித்த முறையோடு பார்த்தால் இப்போது ராஜாங்க ரீதியில் ஆபீஸாக ஸமூஹ காரியங்களை நடத்துவது இரண்டாம் பக்ஷம்தான்.

சுருக்கமாக வேத தர்மம் என்பது நம்மிடத்தில் இருக்கும்படியான எல்லா சக்திகளும் ஈஸ்வர சக்தியில் துளித்துளிதான். இந்த சக்திகளை ஈஸ்வரனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். நாவினாலே அவன் நாமாவைச் சொல்வது, மனஸினாலே த்யானம் பண்ணுவது, சரீரத்தாலே பூஜை பண்ணுவது என்று எல்லாம் ஈஸ்வர ஸம்பந்தமாக்க வேண்டும். பூஜை என்பதில் கர்மாவைச் செய்வதும், கடமையைச் செய்வதும் அடக்கந்தான். ஆசார்யாள் முடிவாக உபதேசித்த ஸோபான பஞ்சகத்தில் கர்மாவைப் பண்ணுவதுதான் ஈஸ்வர பூஜை என்று நிர்த்தாரணம் செய்திருக்கிறார். ஸ்வதர்மப்படி அவரவருக்கு ஏற்பட்ட கர்மாவோடு, ஸர்ஜனங்களுக்கும் ஏற்பட்ட ஸாதாரண தர்மங்களைச் சேர்ந்த ஒரு முக்யமான கர்மா இந்தப் பரோபகாரம் என்பது.

அதனால் நாக்கால் நாமா சொல்கிறதோடு ஜனங்களுக்கு நல்லதாக, மதுரமாக நாலு வார்த்தை சொல்லவேண்டும். மனஸால் த்யானம் பண்ணுவதோடு, 'லோகமெல்லாம் க்ஷேமமாயிருக்கணும்' என்று ஒவ்வொரு நாளும் நாலு க்ஷணமாவது அன்போடு நினைக்க வேண்டும். சரீரத்தால் பூஜை, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் செய்வதோடு கொஞ்ச நேரமாவது வெட்டியோ கொத்தியோ வேறு தினுஸிலோ ஒரு பொதுத்தொண்டு பண்ணவேண்டும். திரவ்யத்தையும் இப்படியே தேங்காய், பழம், புஷ்பம் வாங்குவதோடு தான தர்மத்துக்கும் கொஞ்சமாவது செலவழிக்க வேண்டும். இவற்றையும் ஈஸ்வர ப்ரீதிக்காக ஈஸ்வர பூஜையாக நினைத்தே செய்ய வேண்டும். இதுவே நம் பூர்விகர்கள் போன வழி. அதாவது தெய்வகார்யம், ஸமூஹ கார்யம் இரண்டில் ஒன்றையும் விடாமல் பண்ண வேண்டும்.

பரோபகாரம் நம் மதத்தில் சொல்லப்படவில்லை என்ற தப்பான பிரசாரத்தை நம்பக்கூடாது. குழந்தையாக இருக்கிறபோதே 'ஸுபாஷிதம்','நீதி சாஸ்திரம்' என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிலேயே பரோபகாரத்தைப் பற்றிய அநேக போதனையிருக்கிறது. ' பரோபகாரார்த்தம் இதம் சரீரம் ' - 'உலகத் தொண்டு பண்ணவே இந்த உடம்பு வாய்த்திருக்கிறது' என்று அப்போதே கற்றுக் கொடுத்து விடுவார்கள். இன்னொன்றும் சொல்வதுண்டு, ' பரோபகாராய ஸதாம் விபூதய :' - 'நன்மைகளின் ஸகல சக்திகளும், உடைமைகளும் பரோபகாரத்துக்காகவே ஏற்பட்டவைதான்' என்று அர்த்தம். இதை இரண்டு விதத்தில் சொல்லி இளமனஸில் ஆழமாகப் பதிப்பிப்பார்கள். ஒன்று: பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் மரம் பழுக்கிறது ( பரோபகாரார்த்தம் பலந்தி வ்ருக்ஷா: ); பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் ஆறுகள் ஜலத்தைச் சுமந்து ஓடுகின்றன (பரோபகாரார்த்தம் வஹந்தி நத்ய:); பிறருக்குப் பயனாவதற்கேதான் பசுக்கள் பால் கொடுக்கின்றன (பரோபகாரார்த்தம் துகந்தி காவ:); அப்படியே இந்த மநுஷ்ய காயம் ஏற்பட்டிருப்பதும் பிறருக்கு உதவும் பொருட்டே (பரோபகாரார்த்தம் இதம் சரீரம்). இன்னொன்று: இப்போது சொன்னதையே இன்னும் கொஞ்சம் நயத்தோடு சொல்வது - மரம் தன் பழத்தைத் தானே சாப்பிட்டுக் கொள்வதில்லை (காதந்தி ந ஸ்வாது பலாநி வ்ருக்ஷா:); ஆறு தன் ஜலத்தைத் தானே குடித்துக் கொள்வதில்லை (பிபந்தி நத்ய: ஸ்வயமேவ நாம்ப:); மேகம் தன் மழையாலுண்டாகிற பயிரைத் தானே சாப்பிடுவதில்லை(பயோதரா: ஸஸ்யமதந்தி நைவ); இதேபோல ஸஜ்ஜனங்களின் (நல்லோரின்) எல்லாத் திறமைகளும், செல்வமும் பரோபகாரத்திற்குத்தான்(பரோபகாரய ஸதாம் விபூதய : ) .

படிக்கிற காலத்திலேயே, ''உன்னை சாச்வதமாக உயிர்வாழ்கிற தேவஜாதியாக நினைத்துக்கொண்டு கல்வியையும் பொருளையும் நிறுத்தாமல் மேலே மேலே ஸம்பாதித்துக்கொண்டே போ'' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, அதே மூச்சில், அந்த ஸ்லோகத்திலேயே, ''தர்மம் பண்ணுவதில் மட்டும் அப்புறம் என்று ஒத்திப்போடாமல், எப்போதும் யமன் உன் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டேயிருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடனே பண்ணிவிடு'' என்று சொல்லிக் கொடுத்தார்கள்:

அஜராமரவத் ப்ராஜ்ஞ : வித்யாம் அர்த்தம் ச ஸாதயேத் |
க்ருஹீத இவ கேசேஷ§ ம்ருத்யுநா தர்மம் ஆசரேத் |

வியாஸர் பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ச்லோகங்களில், ஸுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம். உடனே அவர் ''ஒன்றிரண்டு ச்லோகம் எதற்கு? இந்தப் பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி மொத்தமிருக்கிற கோடிப் புஸ்தகங்களின் ஸாரத்தையும் அரை ச்லோகத்திலேயே சொல்கிறேன்'', ''ச்லோகார்தேந ப்ரவக்யாமி யதுக்தம் க்ரந்த கோடிஷூ|'' என்று ஒரு ச்லோகத்தின் முதல் பாதியாகச் சொல்லிவிட்டு மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்தைச் சொன்னாராம்:

'' பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் ||''

இருக்கிற அத்தனைகோடி தத்வம் என்னவென்றால், ''புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு'' என்பதுதான் - என்று இதற்கு அர்த்தம்.

பாபம் எது என்று தெரிந்துகொண்டு அதை விலக்குவதற்கும், புண்யம் எது என்று தெரிந்துகொண்டு அதைப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பதே இருக்கிறது. இங்கே நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில் முதன்மையாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர அபகாரம்தான் பாபம் என்று சொல்கிறாரென்றால், அதற்கப்புறம் நம் மதத்தில் பரோபகாரத்துக்கு இடமுண்டா என்ற வாதத்துக்கே இடமில்லை.

'ஆத்மாத்தமாக, ஒருத்தன் தனக்குப் பண்ணிக் கொள்வதைப்பற்றித்தான், வேத மதத்தில் நிறைய இருக்கிறது. பிறத்தியாருக்குப் பண்ணுவதைப்பற்றி இல்லை' என்று சில பேர் criticise பண்ணினாலும் இப்படி இவன் ஸ்வய உபகாரம் பண்ணிக்கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாலன்றி இவன் செய்கிற பரோபகாரத்துக்கு effect இருப்பதில்லை என்பதால்தான், தன்னுடைய spiritual power (ஆத்ம சக்தி) -ஐக் கொண்டு ஒருத்தன் 'ஸோஷல் ஸர்வீஸ்' பண்ணணும்; அந்த 'ஸோஷல் ஸர்வீஸா'லேயே இந்தப் 'பவரை'விருத்தி செய்து கொள்ளணும் என்பதாக இரண்டையும் கைகோர்த்துக் கொண்டு, ஒன்றால் மற்றது புஷ்டி பெறுகிற ரீதியில், நம்முடைய மதத்திலே அமைத்துக் கொடுத்திருக்கிறது.

வேத தர்மத்தைப் பூர்ண ஜீவசக்தியுடன் ப்ரகாசமாகத் தூண்டிவிட்ட ஆசார்யள் வினா-விடை ரூபத்திலே 'ப்ரச்நோத்தர ரத்நமாலிகா' என்று அநுக்ரஹித்திருக்கிறார் அதிலே ஒரு கேள்வி:

'' கிம் மநுஜேஷ§ இஷ்டதமம் ?''

''மநுஷ்யனாகப் பிறந்தவன் விரும்ப வேண்டியவற்றில் தலை சிறந்தது எது?'' என்பது கேள்வி.

'' ஸ்வ பர ஹிதாய உத்யதம் ஜந்ம '' என்பது இதற்குப் பதில். 'ஸ்வஹிதம்'- தனக்கு நன்மையானது அதாவது ஸ்வயோபகாரம் இதோடு 'ப்ரஹிதம்' என்கிற பரோபகாரம். இரண்டுக்காகவும் பாடுபடும் வாழ்க்கைதான் மநுஷ்யன் வேண்டத் தக்கவற்றில் உச்சியானது என்று பதில் சொல்கிறார். இங்கே ஆசார்யாள் நவீனர்களின் 'க்ரிடிஸிஸ' த்துக்கு ஆணி அடித்தாற்போல் விடை சொல்லியிருக்கிறார்.

இதே க்ரந்தத்தில் இன்னோரிடத்தில் சந்திர கிரணத்துக்கு ஸமானமான மனிதர்கள் ஸஜ்ஜனங்களே என்கிறார். சந்திர கிரணம் லோகத்துக்கெல்லாம் தாப சமனம் தருகிறது. சந்திரனுக்கு இப்படி உலகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்து, இதற்காக அது ப்ரயத்தனப்படவேண்டும் என்று இல்லை. தன்னியல்பாகவே அது லோக ஹிதத்தை உண்டாக்குகிறது. அதேபோல லஜ்ஜனங்கள் என்கிற ஸாதுக்கள் ''ஸோஷல் ஸர்வீஸ் பண்ணணும்'' என்று அரிப்புப் பட்டுக்கொண்டு, தண்டாரோ போட்டுச் செய்யணும் என்றே இல்லை. அவர்கள் தங்களுடைய 'நேச்சர்'படி இருப்பதே, நடப்பதே லோகஹிதமாக, பரோபகாரமாகத்தானிருக்கும். இதையேதான் ஸஜ்ஜனங்களுக்கெல்லாம் சிகரமாகப் பரம சாந்தர்களாக, மஹாந்தர்களாக இருக்கப்பட்ட ஜீவன் முக்தர்களின் லக்ஷணமாகவும் (ஆசார்யாள்) ''விவேக சூடாமணி''யில் சொல்கிறார். இங்கே 'சந்திர கிரணம் மாதிரி' என்றவர் அங்கே ''வஸந்த காலம் மாதிரி'' என்கிறார்.

வஸந்தவத் லோகஹிதம் ச்ரந்த:

வஸந்தகாலம் போல உலக நலனைப் பண்ணியபடி உலாவுகிறார்களாம் மஹான்கள். வஸந்தம் என்று ஒன்று கண்ணுக்குத் தெரிகிறதோ? சந்திரனாவது தெரிகிறது. மஹான்கள் தங்களை இப்படிக் காட்டிக் கொள்வதுகூட இல்லை! ஆனாலும் வஸந்தம் வந்தால் தன்னால் தென்றல் ஹிதமாக வீசுகிறது. புஷ்ப ஜாதிகள், மல்லிகை முக்யமாக, எங்கே பார்த்தாலும் மலர்ந்து கம்மென்று வாசனை வீசுகின்றன. மா முதலான பழங்கள் குலுங்க ஆரம்பிக்கின்றன. சிசிர ருது என்கிற பின்பனிகாலத்தில் இலையை உதிர்த்துவிட்டு நின்ற மரமெல்லாம் வஸந்தம் வந்ததும், அதற்குப் பச்சைக்கொடி காட்டுகிறதுபோல பச்சைப்பசேல் என்று தளிர் விடுகின்றன இப்படித்தான் இந்த சரீரத்திலிருக்கும்போதே 'தான் பிரம்மம்' என்று தெரிந்துகொண்டுவிட்ட ஜீவன்முக்தனும்கூட un conscious -ஆக (தன்னுடைய புத்தி பூர்வமாக இல்லாமலே) , unnoticed ஆக (தன்னைக் காட்டிக் கொள்ளாமலே) லோக ஹிதத்தை உண்டாக்குகிறான் என்று இப்படி இருந்து காட்டிய ஆசார்யாளே, unself- conscious ஆக (தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்கிறோம் என்ற நினைப்பேயில்லாமல்) சொல்லியிருக்கிறார்!

''பொதுவாகவே ஹிந்து மதத்தில் பரோபகாரம் கிடையாது. அதிலும் அந்த மதத்தில் உள்ள அத்வைதத்தில் லோகமே மாயை; ஆத்மாவைத் தவிரப் பிறத்தியானென்றே இல்லை' என்று சொல்லித் துளிக்கூடப் பரோபகார ப்ரக்ஞைக்கு இடமேயில்லாமல் அடைத்து விட்டிருக்கிறது'' என்று ஒரு criticism இருந்தாலும், அத்வைத ஆசார்யாளே அத்வைத ஸித்தியை அடைந்து விட்டவனும் லோக ஹிதத்துக்காகத்தான் உலகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறான் என்கிறார்.

பகவானும் (ஸ்ரீ கிருஷ்ணரும்) ஜீவன்முக்தர்களான ஜனகாதியர்கூட 'லோக ஸங்க்ரஹ'த்துக்காக கார்யம் பண்ணிக்கொண்டு தானிருக்கிறார்கள் என்று (கீதையில்) சொல்கிறார். 'ஸங்க்ரஹம்' என்றால் அன்போடு வழிகாட்டி உசத்துவது. தன்னில்தானே ஸகல ஸாதனைகளுக்கும் லக்ய ஸ்தானமாயிருந்தபோதிலும், தான் பண்ண வேண்டிய ஸாதனையோ, அடைய வேண்டிய லக்ஷ்யமோ எதுவும் இல்லாதபோதிலும், பகவானான தாமும் லோகத்தார் எப்படி வாழவேண்டும் என்ற 'ஐடிய'லை அவர்களுக்குக் காட்டிகொடுப்பதற்காகவே ஓயாமல் ஒழியாமல் கார்யங்கள் பண்ணிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். எதுவும் ஸாதிக்க வேண்டாத பகவானும் பரோபகாரத்தை ஸாதிக்கிறார்! இதையேதான் ''ப்ரச்னோத்தர ரத்நமாலிகா''விலும் (ஆசார்யாள்) , ''கிம் ஸாத்யம்?''- ''ஸாதிக்கத் தக்கது என்ன?'' என்று கேட்டு, ''பூத ஹிதம்''-''உயிர்க்குலத்துக்கு நன்மை செய்வது''என்று பதிலாகக் கொடுக்கிறார்.

'டாப் லெவ'லில் இருப்பவனுக்கே பரோபகாரத்தைச் சொன்ன அத்வைத ஆசார்யாள் ஸாதாரண மநுஷ்யனுக்கும் அந்த லெவலுக்கு ஏறுகிற வழியில் இதை அங்கமாகச் சொல்லித்தானிருக்கிறார். ''பணம் ஸம்பாதிக்கிறாயா? ஸம்பாதித்துவிட்டுப்போ. ஆனால் அதை தார்மிகமாக ப்ரயோஜனப்படுத்தினாயானால் அதுவே உன் சித்தத்தைப் பரிசுத்தி பண்ண உதவும்''-

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேந விநோதய சித்தம்

என்று 'பஜகோவிந்த' த்தில் சொல்கிறார். அதிலேயே ஆத்ம ஸம்பந்தமாக, பகவத் ஸம்பந்தமாக, ''கீதையைச் சொல்லு, ஸஹஸ்ரநாமம் சொல்லு, விடாமல் லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவை த்யானம் பண்ணு, ஸத்ஸங்கத்திலேயே மனஸை ஈடுபடுத்து''

என்றெல்லாம் சொல்லிவிட்டு, முடிவாக ''ஏழை எளியவர்களுக்குத் தான தர்மம் பண்ணு'' என்று பரோபகாரத்தோடு முடிக்கிறார்:

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் |
த்யேயம் ஸ்ரீபதிரூபம் அஜஸ்ரம்

நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீநஜநாய ச வித்தம் ||

ஆனதால் வேத தர்மம் (லோகம், ஜீவன் எல்லாம் மாயை என்கிற அத்வைதமும்கூட) ஜீவாத்ம கைங்கர்யங்களை ஈஸ்வர ஸம்பந்தத்துடனே சேர்த்துச் சேர்த்து எல்லாரும் பண்ணியைக வேண்டுமென்று கொடுத்திருப்பதைப் புரிந்து கொண்டு அப்படியே செய்ய வேண்டும். நம் பூர்விகர்கள் போனவழி அதுதான். அதிலேயே நாமும் போய் அத்வைத த்ருஷ்டியில் எல்லா உயிர்களையும் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்துத் தொண்டு செய்து ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்துத் தொண்டு செய்து ஈஸ்வர ப்ரஸாதத்தை அடைய வேண்டும்.

ஸர்வேஜநா : ஸுகிநோ பவந்து |
லோகா : ஸமஸ்தா : ஸுகிநோ பவந்து |

Thursday 16 May 2013

40 - 50 வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இப்போதுபோல் நோய்நொடி எல்லாம் இல்லை.



ஏகப்பட்டதாகப் பரோபகாரங்களைச் சொல்லிக் கொண்டே போயிருக்கிறேன். பொதுவாகப் பரோபகாரம் என்றே நினைக்காத சில விஷயங்களைக்கூட இந்தப் பெரிய 'லிஸ்ட்'டில் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன்.

இம்மாதிரி இன்னொன்று அவனவனும்:தன் உடம்பையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக்கொள்வதே பெரிய பரோபகாரம்தான். துர்ப்பழக்கங்களால் ஒருத்தன் வியாதியை ஸம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்புறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ண முடியும்? இது மட்டுமில்லை. இவனுடைய வியாதி பிறத்தியாருக்குப் பரவக்கூடும். அதனால் நம் அஜாக்ரதையால், துர்ப்பழக்கத்தால் வியாதியை வரவழைத்துக்கொள்கிறபோது பர அபகாரமும் பண்ணிவிடுகிறோம். நம்மை மீறி வந்தால் அது வேறே விஷயம்.

இந்தக் காலத்தில் எல்லோரும் நோயும் நொடியுமாக அவஸ்தைப்படுகிற மாதிரி நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இல்லை. காரணம் என்னவென்றால் இப்போது அநேகருக்கு மனஸில் நெறியில்லாமல் இருப்பதும், அநேக துராசாரங்கள் வந்திருப்பதும்தான். '' சாஸ்த்ராய ச ஸுகாய ச '' என்பார்கள் - அதாவது சாஸ்த்ர ப்ரகாரம் நெறியோடு, ஆசாரத்தோடு இருப்பதுதான் ஸெளக்யமாக, ஆரோக்கியமாக இருக்கவும் உதவுவது என்று அர்த்தம். இப்போது எச்சில் தீண்டல் பார்காததாலேயே அநேக வியாதிகள், தொத்து நோய்கள் பரவிக்கொண்டு வருகின்றன. இப்படி வியாதிக்குக் காரணமாயிருக்கிற அநாசாரத்தை ஃபாஷன் என்ற பெயரில் ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறோம்!

சரீர வியாதிதான் தொத்துகிறது என்றில்லை. எண்ணங்களும் பிறத்தியாரை பாதிக்கவே செய்கின்றன. இப்போது ஸயன்ஸில்கூடச் சொல்கிறார்கள், 'மூளை எண்ணங்களாக வேலை செய்வதுகூட ஒரு எலெக்ட்ரிக் கரென்ட்தான்; சிந்தனா சக்திக்குப் (thought-power) பிறரையும் பாதிக்கிற தன்மை இருக்கிறது' என்று. அதனால் நாம் சரீரத்தையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதாலும் பிறரின் தேக மன ஆரோக்கயங்களுக்கு உபகாரம் பண்ணியவர்களாக (அபகாரம் பண்ணாதவர்களாகவாவது) ஆகிறோம்.

நேராக மூளையை சுத்தப்படுத்திக் கொள்கிறேன் என்று உட்காருவதைவிட, நான் சொன்ன அநேக தினுஸான பரோபகாரங்களை - எல்லாவற்றையுமோ, சிலவற்றையோ நிறையச்செய்து கொண்டிருந்தாலே, தானாகச் சித்தம் சுத்தமாகிவிடும்.

பரோபகாரம் சித்தசுத்திக்கு உதவ வேண்டுமானால் அதற்கு உயிர்நிலை அஹங்காரம் என்பது லவலேசங்கூட இல்லாமல் தொண்டு செய்வதுதான். 'நாம் பெரியவர்; உபகாரம் பண்ணுகிறோம்' என்ற நினைப்பை தலையெடுக்கவே விடக்கூடாது. கொஞ்சம் அப்படி நினைத்தாலும் அது உபகாரம் பண்ணுவதன் பலனை - சித்த சுத்தியை - சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும். இரண்டாவது, (அதிலேயே இதுவும் அடக்கம்தான்) ப்ரதி ப்ரயோஜனத்தை துளிக்கூட எதிர்பார்க்கக்கூடாது. உபகாரம் செய்தால் நமக்கு ஸித்திக்கிற சித்த சுத்தியேதான் பெரிய ப்ரயோஜனம்.

அவரவரும் தம் நிலையில் தம் வருமானம், குணம், சரீர வசதி, ஆற்றல் இவைகளுக்கு ஏற்றபடி எவ்விதங்களில் பரோபகாரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்யவேண்டும். உடம்பிலே எந்த அவயவத்துக்குத் துன்பம் வந்தாலும் கண் அழுகிறது அல்லவா? அதைப்போல், உலகத்தில் எங்கே, யாருக்குத் துன்பம் உண்டானாலும் நாம் மனம் கசிந்து, ஒவ்வொருவரும் நம்மாலான உதவியைச் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் பெருமைக்காகச் செய்வது எதுவும் இல்லை. பிறத்தியாரின் வற்புறுத்தலுக்காகவும் செய்ய வேண்டியதில்லை. லோகம் முழுக்க பகவத் ஸ்வரூபம் என்று மனஸில் வாங்கிக்கொண்டால், தன்னால், ஸ்வபாவமாக, பிறர் துயரத்தை நிவ்ருத்தி செய்வதில் ஈடுபடுவோம். இதிலே நமக்கு ச்ரமம் வந்தால்கூட, அது ச்ரமமாகவே தெரியாது. எத்தனை த்யாகம் செய்தாலும் அதுவே பரமானந்தமாக இருக்கும். இப்படி த்யாகம் பண்ணுவதற்கு எல்லையே இல்லை. உபகரிக்கப்பட்டவன் முகத்தில் மகிழ்ச்சி தவழப் பார்க்கிறோமே, அந்த ஆனந்தத்துக்கு எத்தனை த்யாகமும் ஈடாகாது என்றுதான் தோன்றும்.

Sunday 12 May 2013

' இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' - (பகுதி 1 - ஆவி பிரியும் காலத்தில்)



உயிர் போனபிறகு உடம்புக்குப் பண்ண வேண்டிய கார்யத்தைச் சொன்னேன். உயிர் போகிற சமயத்தில் செய்யவேண்டிய பணி ஒன்றும் இருக்கிறது. இதைவிட ஒரு ஜீவனுக்குச் செய்யக்கூடிய பெரிய பரோபகாரம் எதுவுமில்லை. அது என்ன?

க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், ''உடம்பு போனாலும் ஆத்மா சாகிறதில்லை. அதனால் ஒரு பெரிய தர்மத்தை உத்தேசித்து நீ யுத்தம் பண்ணவேண்டிய கடமை, ஸ்வதர்மம் இருக்கிறபோது, 'பந்துமித்ரர்களைக் கொல்லமாட்டேன்' என்று பின் வாங்குவது ஸரியில்லை'' என்று உபதேசம் பண்ணினார். அந்த உபதேசந்தான் பகவத்கீதை. 

ஸரி, ஆத்மா செத்துப்போகவில்லை. உடம்பு போன பிறகு அது என்ன ஆகிறது? எல்லா உ.யிர்களும் உடனே பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடுகிறதா? க்ருஷ்ண பரமாத்மா அப்படிச் சொல்லவில்லை. அந்த உயிர் அதன் கர்மத்தைப் பொறுத்து இன்னோர் உடம்பில் புனர்ஜன்மம் எடுக்கிறது என்றுதான் சொல்கிறார். 'மஹா புண்யசாலிகள் ஸ்வர்க்கத்துக்குப் போய்ப் புண்யப்பலனை அநுபவித்து விட்டு, அது தீர்ந்ததும் மறுபடியும் இந்த பூமியிலேயே மநுஷ்யர்களாகப் பிறக்கிறார்கள் (9.21) ; த்வேஷமும், க்ரூரமும் பிறப்பெடுக்குமாறு நானே தள்ளுகிறேன்' (16.19) என்றெல்லாம் சொல்கிறார். அப்படியானால் இந்த ஜனன மரண சக்கரத்திலிருந்து மீட்சியே இல்லையா? இருக்கிறது. அதையும் சொல்கிறார்.

பக்தி யோகத்தாலோ ஞான யோகத்தாலோ தன்னை உபாஸிப்பவர்களை மறுபடி இந்த லோகத்துக்குத் தள்ளாமல் பரமாத்மாவான தன்னிடமே அடக்கம் பண்ணிக்கொண்டு விடுவதாக பகவான் சொல்கிறார். பக்தன் ஞானியாகிவிட்டால் செத்துப்போன அப்புறம்தான் பரமாத்மாவிடம் ஐக்யமாகவேண்டும் என்றில்லை. அவன் இந்த லோகத்தில் இருக்கிற மாதிரி பிறத்தியாருக்குத் தோன்றும்போதே மோக்ஷத்தில்தான் இருந்து கொண்டிருப்பான். ஸகல துக்கங்களிலிருந்தும் விடுபட்ட ஸதானந்த நிலைதான் மோக்ஷம். இப்படி பக்தியோகம், ஞானயோகம் அப்யாஸம் பண்ணுவதற்கு பகவான் அத்யாயம் அத்யாயமாக வழி சொல்லிக் கொடுத்துக்கொண்டே போகிறார். ஆனால் இந்தமாதிரிப் பண்ணி ஜயித்து மீளுகிறவன் எங்கேயாவது கோடியில் ஒருத்தன்தான் இருப்பான். இதையும் அவரே சொல்கிறார். 'மநுஷ்யர்களில் ஆயிரத்தில் ஒருத்தன்தான் ஸித்திக்கு முயற்சியே பண்ணுவான். அதிலும் அபூர்வமாக எவனோதான் முயற்சியில் ஜயித்து என்னை வந்தடைகிறான்' என்கிறார் (7.3) .

இப்படியானால் என்ன பண்ணுவது? எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்குவழி இருக்கிறதே, அந்தமாதிரி ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்கு short-cut இல்லையா?

ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார் 'ஒருத்தன் செத்துப்போகிற ஸமயத்தில் எதை நினைத்துக்கொண்டு உடலை விடுகிறானோ, அதையே மறுஜன்மாவில் அடைகிறான். என்னையே ஸ்மரித்துக்கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ. அவன் என்னை அடைந்துவிடுகிறான்' என்று சொல்லி '' நாஸ்தி அத்ர ஸம்சய :'' - ''இதில் ஸந்தேஹமே இல்லை'' என்று 'காரன்டி'கொடுத்திருக்கிறார்!

'ரொம்ப ஸுலபமான வழியாக இருக்கே வாழ்க்கை முழுக்க எப்படிக் குட்டிச்சுவராக நடத்தினாலும், அந்திம ஸமயத்தில் மட்டும பகவானை நினைத்துக் கொண்டால் போதுமாமே! அதனாலேயே இந்த ஜனன-மரணச் சக்கரத்திலிருந்து தப்பித்துக்கொண்டு விடமுடியுமாமே!' என்று தோன்றுகிறது.

ஆனால் பகவான் இங்கே 'பொடி' வைத்துப் பேசுகிறார். 'கடைசிக் காலத்தில் என்னை நினைத்துக் கொண்டு' என்பதற்கு ' அந்தகாலே மாம் ஸ்மரன் ' என்று சொன்னால் போதும். ஆனால் பகவான் அப்படிச் சொல்லவில்லை. 'அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரன்' என்று ஒரு ' ச ' வும் ' ஏவ ' வும் போட்டு ஸம்ஸார நிவ்ருத்தி இத்தனை ஸுலபமில்லையப்பா என்று ஆக்கியிருக்கிறார்! இந்த ' ச ' வுக்கும் ' ஏவ ' வுக்கும் என்ன அர்த்தம்?'அந்த காலே ' ச ' என்றால் 'சாகிற ஸமயத்திலும்' என்று அர்த்தம். 'மாம் ' ஏவ ' என்றால் 'என்னை' என்று மட்டும் அர்த்தமில்லை; 'என்னை மட்டுமே' என்று அர்த்தம்.

அவரை மட்டுமே அந்திமத்திலும் 'ஸ்டெடி'யாக ஸ்மரிக்க வேண்டும். அப்போதுதான் மோக்ஷம். நம் மனஸ் லகான் இல்லாத குதிரையாக ஓடுகிற ஓட்டம் நமக்குத் தெரியும். ஏதோ இந்த க்ஷணம் அது அப்படியே பரமாத்மாவிலேயே தோய்ந்து விட்டாற்போல இருக்கும். பார்த்தால் அடுத்த க்ஷணமே அது பிய்த்துக் கொண்டு ஏதாவது குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். நமக்கே ஆச்சர்யமாக, தாங்கமுடியாத வ்யஸனமாக இருக்கும் - 'அவ்வளவு நல்ல சாந்த நிலையில் இருந்தோமே; இது எப்படி அங்கேயிருந்து அறுத்துக்கொண்டு கிளம்பிற்று? என்று. இங்கிலீஷில் fraction of a second என்கிறார்களே, அதுமாதிரி, ஒரு ஸெகண்டில் வீசம் பாகங்கூட இந்த மனஸ் ஒன்றில் நிலைத்து நிற்க மாட்டேன் என்கிறது. எனவே, 'மாம் ஏவ ஸ்மரன்'- பகவானை மாத்திரமே நினைப்பது - என்பது ரொம்பக் கஷ்டம்தான்.

சாகத்தான் போகிறோம் என்று முதலில் தெரியவேண்டும். அதற்கப்புறம் அதற்காக பயந்து நடுங்காமல், புத்தியை நன்றாகத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெளிவோடு, இந்த க்ஷணம் உயிர் போகிறது என்றால்கூட அந்த ஒரு க்ஷணத்திலாவது ஐகாக்ரியத்தோடு (ஒரு முகமான சிந்தனையோடு) பகவானை மட்டுமே நினைக்க வேண்டும். அப்படி ஒரே க்ஷணத்தில் ப்ராணன் போய்விட்டால் நல்லது. பகவானை விட்டு ஸ்மரணை நகராதபோதே உயிரைவிட்டு, அவனிடமே போய்ச்சேரலாம். ஆனால் இப்படி யாரும் சாகக்காணோமே! குண்டு போட்டுச் சுட்டால்கூட ஒரு ஐந்து பத்து நிமிஷத்துக்கு அப்புறம்தானே உயிர் போகிறது அத்தனை நாழி -அந்த ஐந்து, பத்து நிமிஷமும் ப்ராண ப்ரயாணத்தின் மஹா அவஸ்தைகளை மறந்து பகவானை ஸ்டெடியாக நினைத்துக்கொண்டு அப்படியே ப்ராணனை அதன் மூலத்தில் கரைக்கிறது ஸாத்யமா? 'எலக்ட்ரிக் ஷாக்' மாதிரி அடித்து உடனே சாவு instantaneous வருகிறது என்றால், அந்த 'இன்ஸ்டன்ட்'டில் பகவான் நினைவு வந்துவிட்டால் போதும். ஆனால் வரவேண்டுமே! வராவிட்டால்? பயம் வரக்கூடாதே! அல்லது, அப்படியே உணர்ச்சி மரத்துப்போய் ப்ரக்ஞையில்லாமலும் சாகக்கூடாதே!

உடனே ப்ராணண் போகாமல் எந்த க்ஷணமும் போகலாம் என்று அது பாட்டுக்கு இழுத்துப் பறித்துக் கொண்டிருந்தால், அத்தனை நாழியும் (அது நாள் கணக்கில் கூட இருக்கலாம்) பகவானையே நினைத்தாக வேண்டும்; அல்லது நினைக்கிறதற்குக்கூட அவகாசம் தராத விதத்தில் மஹா பீதியையே துளியூண்டு நாழிகைக்குள் தருகிற விதத்தில் - எலெக்ட்ரிக் ஷாக் மாதிரி அடித்துச் சாவதானாலும், அந்த fraction of a second -லும் பகவத் ஸ்மரணை பூர்ணமாக ரொம்பிக்கொண்டு வந்து நிற்க வேண்டும்.

இது தானாக, அந்த ப்ராணாவஸ்தை ஸமயத்தில் கைகூடுகிற விஷயமா? இல்லை. அதனாலேதான் 'அந்த காலே ச' என்று ஒரு 'ச' போட்டார். இதைப்பற்றி மேலேயும் சொல்கிறார்.

வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும்.

இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகிறது என்கிறார்கள். குறிப்பாக வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம், ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் ''போ, போ'' என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸ்த்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான - 'ஏகம் ஸத்'தான - பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான். இந்த நல்ல வாஸனையை 'வா, வா' என்று-சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக்கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும். அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பி விட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டால் அது இருந்து இடம் தெரியாமல் போகிறது.

கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும் மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.

ஆனாலும் அந்திமத்தில் நினைப்பதற்கு ஏன் இந்த முக்யத்வம்? இப்படி அந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் நான் இங்கே எடுத்துக்கொண்ட பரோபகாரம் என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

'மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன? இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது' என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். 'இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக்கொண்டிருக்க வேண்டும்? இதற்கு ஒரு முடிவு கிடையாதா?' என்று கேட்டால், 'ஞானியாகிவிட்டால் ப்ரம்ம நிர்வாணம் அடைந்து விடலாம். என்னிடமே பக்திபண்ணிக் கொண்டிருந்தால் என்னை நினைத்துக் கொண்டே உயிரை விட்டால்கூடப் போதும். அப்புறம் இன்னொரு சட்டை போட்டுக்கொள்ள வேண்டாம்' என்கிறார்.

'சாவு ஒன்றும் பெரிய விஷயமில்லை; சட்டை கிழிகிற மாதிரிதான்' என்று சொல்லிவிட்டு, 'சாகிற ஸமயத்தில் என்னை நினைத்தால் என்னிடமே வந்து அடுத்த ஜன்மா இல்லாமல் ஆக்கிக் கொள்ளலாம்' என்று சொன்னால், சாவு ஒரு பெரிய விஷயம் மாதிரிதானே இருக்கிறது? அந்த ஸமயத்தில் நினைப்பதற்கு என்ன இத்தனை முக்யத்வம்!                  (தொடர்ச்சி பகுதி 2 ல்)

' இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' - (பகுதி 2 - ஆவி பிரியும் காலத்தில்)



ஆத்மா என்ற மாறாத ஸத்யத்தின் நிலையிலிருந்து பார்க்கிறபோது சரீரமும் சாவும் துச்சம்தான்; அவை ஒன்றுமே இல்லை. ஆனால் நாம் மாறாத ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாகத்தானே இருக்கிறோம்? நமக்குத் தெரிந்தது மாறிக்கொண்டே இருக்கிற இந்த மனஸும், மாறிக்கொண்டே இருக்கிற இந்த ப்ரபஞ்சமும்தானே? சாவு உண்டாகி அடுத்த ஜன்மா ஏற்படுகிறபோது இந்த ஜன்மாவிலே இந்த ப்ரபஞ்சத்திலே நமக்கு இருந்த தொடர்புகளெல்லாம் துண்டித்துப்போய், வேறு புதுத் தொடர்புகள் உண்டாகின்றன. இதே இடத்தில் இதே குடும்பத்தில் நாம் மறுபடியும் பிறந்தால்கூட நமக்கு அது தெரியப்போவதில்லை. ஆனால் இப்படி இங்கேயேதான் பிறப்போம் என்று சொல்ல முடியாது. வேறே சூழ்நிலையில், வேறு தினுஸான மதத்தில், நாகரிகத்தில், ஸம்ப்ரதாயத்தில் போய்ப் பிறந்தாலும் பிறப்போம்.

ஆத்மா மாறாதது என்றாலும் நமக்கு அது தெரியாத விஷயம். மனஸின் ஆட்டங்கள்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம். அந்த மனஸின் வளர்ச்சி - அது நல்ல வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி, கெட்ட வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி - பெரிய அளவுக்கு சூழ்நிலையினால் உருவாக்கப்படுகிறது. இந்த ஆயுஸ் பூராவும் நாம் ஒருமாதிரி சூழ்நிலையில் பழகி வளர்ந்து விட்டோம். குறிப்பிட்ட ஸம்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு விட்டோம். குறிப்பிட்ட ஸம்ப்ரதாயங்களை அநுஸரித்து அவற்றில் ஒட்டிக் கொண்டு விட்டோம். இதெல்லாம் சாவோடு கத்தரித்துப் போகிறது என்பதைப் பார்க்கிறபோது, (சாவு ஆத்மாவைக் கொஞ்சம்கூட பாதிப்பதில்லை என்றாலும்) ஆத்மாவாக இருக்கத் தெரியாத நம்மை ரொம்பவும் பாதிக்கத்கதானே செய்கிறது?'அடுத்த ஜன்மாவில் எந்த மாதிரிப்பிறவி ஏற்படுமோ? எந்த மாதிரிச் சூழ்நிலையில் பிறப்போமோ?' என்று பெரிய கேள்வியாகத்தானே இருக்கிறது? ' இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' என்று பெரிய பெரிய மஹான்களே பயப்பட்டிருக்கிறார்களே!

இதனால் பகவான் ஒரு ஜீவனுடைய தொடர்புகள் அடியோடு மாற இருக்கிற அந்த மரண ஸமயத்தில் ''ஐயோ, பாவம்! இந்த ஜீவன் மறுபடியும் ஜன்மா இல்லாமல் பண்ணிக்கொள்ளாமலேயே உயிரை விடுகிறது. இப்பொழுது முழுக்க வேறு தினுஸான சூழ்நிலையில் பிறந்து, 'அடியைப் பிடிடா பாரதபட்டா' என்று ஆத்மாபிவிருத்திக்கான கார்யத்தை இது ஆரம்பித்தாக வேண்டும். இந்த ஜன்மாவின் கர்மாதான் அடுத்த ஜன்மாவிலும் துரத்திக்கொண்டு வரும் என்பது வாஸ்தவமானாலும், அடுத்த ஜன்மாவில் சூழ்நிலை வேறுதானே? அதிலே இது பழைய கர்மாவைக் கழித்துக்கொண்டு மேலே போகுமா அல்லது இன்னும் கெட்ட கர்மாவைப்பண்ணி வீணாகுமோ?' என்று பரம கருணையோடு நினைப்பான போலிருக்கிறது. இப்படி பகவானே இரக்கப்பட்டுத்தான் ரொம்பவும் பெரிய மனஸோடு, ''ஸரி, இந்தச் சாகிற ஸமயத்தில் இது நம்மை நினைத்துவிடட்டும். அது போதும். இதற்கு மறுபடியும் ஜன்மா இல்லாமல் நாமே எடுத்துக்கொண்டு விடலாம்''என்று பெரிய 'கன்ஸெஷன்' தந்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப்பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீக்ஷை வைத்துக் கொள்ளலாம்.

அதாவது:

அன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. 'நித்யப் பிரளயம்' என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் 'சாகிற'போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு 'சாக' முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸவாமியோ, முருகனோ - எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், 'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?' என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறேங்கேயாவதுதான் போய் விழும்; அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடமால் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.

ஆக வாழ்நாள் பூராவும் எதிலே ரொம்பவும் ஈடுபாடு இருக்கிறதோ, அதுதான் அந்திமத்திலும் ஒருத்தனை இழுக்கும். வாழ்நாள் முழுவதும் பகவத் சிந்தனையோடு இருந்தால்தான் கடைசியிலும் அது ஸித்திக்கும். ஸரி, அது தானாகவே ஸித்தித்துவிட்டுப் போகிறது. ஒருவன் ஜீவியகாலம் முழுவதும் ஈஸ்வர பக்தி பண்ணிக்கொண்டேயிருந்தால், கடைசியில் இவன் படுக்கையில் விழும்போதும் தானே, 'ஆடோமாடிக்'-ஆக அதே ஸ்மரணந்தான் இருக்கப்போகிறது. ஆனதால் ''ஸர்வகாலத்திலும் என்னை நினை'' என்று சொன்ன க்ருஷ்ண பரமாத்மா ''அந்திமத்திலும் என்னை நினை'' என்று ஒன்றைச் சேர்த்திருக்க வேண்டாமே? ஸர்வகால ஸ்மரணை தானாக அந்திமத்திலும் வந்துவிட்டுப் போகிறது!

இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி ( short-cut ) சொன்னமாதிரி இருக்கிறது. 'ஒருத்தன் அந்திமத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்' என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.

யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே களேவரம்
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித :

இப்படிச் சொல்கிறபோது, வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் ஸரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப்பின் அடைந்து விடுவான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் இருக்கிறது.

வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுவரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால் இப்படியில்லாமல், அஸாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று ப்ரணன் போகிறபோது நினைப்புக்கு வந்துவிட்டால்? இப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு ஸ்வாமி கொடுத்துவிடுகிறார். 'இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!' என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்யத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.

வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற ஸமயத்திலே ஈஸ்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப 'ஷார்ட்-கட்'தானே?

ஆனால் வாழ்நாள் முழுக்க நினைத்ததுதானே அந்திமத்தில் வரும்? அதெப்படி வேறு ஒரு நினைப்பு அப்போது வரும்? இது எப்படி 'ஷார்ட்-கட்'? சும்மாவுக்காக 'ஷார்ட்-கட்' மாதிரி பகவான் ஏமாற்றுகிறாரா?

இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது; அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்!

இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது-அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால் அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா "சுரீல்" என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்; அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ''ஹர ஹர மஹாதேவா'', ''ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே'' என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலைபாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால், அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான ( effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட, நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ? உயிர்கொண்டு போம் பொழுது?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்(கு) உற்றார் ஆர்உளரோ ?

என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective -ஆக ''கடைசியில் எதெதை நினைத்தாலும் அத்தை அடைகிறான்'' என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.

எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

கடைசிகால ஈஸ்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால் கூடப் பாவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்; நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.

புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா?இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.

இந்த மஹா பெரிய தர்மத்தை, ஈடில்லாத உபகாரத்தை, முதலில் சொன்னேனே, வாவழிபாடு, ஜீவாத்ம கைங்கர்யம், மற்ற பரோபகாரங்களுக்காக ஸங்கமாகச் சேரவேண்டும் என்று, இந்த ஸங்கத்துக்காரர்கள் தவறாமல் செய்ய வேண்டும். 

Thursday 9 May 2013

இது தான் அஸ்வமேதம்


பரோபகாரத்தைப் பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பித்தபோது, 'நம் எல்லோராலும் அஸ்வமேத யாகம் பண்ணமுடியுமா?'என்று ஒரு கேள்வி கேட்டேன். அப்புறம் 'எதற்காக அஸ்வமேதம்?'என்று கேட்டேன். '' ஹயமேத ஸமர்ச்சிதா '' - ''அஸ்வமேதத்தால் விசேஷமாக வழிபடப்படுபவள்''என்று அம்பாளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஆன அம்பிகையின் பூர்ண அநுக்ரஹத்தைப் பெறுவதற்காகவே அஸ்வமேதம் செய்யவேண்டும் என்று பதில் சொன்னேன்.ஆனால் இந்தக் கலிகாலத்தில், ரொம்பவும் நியமங்கள் தேவைப்படும் அஸ்வமேதம் செய்வது அஸாத்யமாயிற்றே, இதற்கு என்ன பண்ணவது என்று கேட்டேன். பரோபகாரங்களில் ஒன்றை பண்ணினால் அதுவே அஸ்வமேதத்துக்கு ஸமானம் என்று சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது என்றும் ஆகையால் இந்தப் பரோபகாரத்தைப் பண்ணிவிட்டால் நாம் அம்பாளின் பூர்ணாநுக்ரஹத்தைப் பெற்றுவிட முடியும் என்று இதற்கு பதில் சொன்னேன். அப்புறம் பரோபகாரங்கள், ஜீவகாருண்யப் பணிகள் பலவற்றைப் பற்றிக் கதை அளந்துகொண்டே போனேன். ஆனால் இதுவரை அஸ்வமேதத்துக்கு ஸமமான பலனைத் தருகிற அந்த ஒரு பணியைச் சொல்லவில்லை. மற்ற எல்லாவற்றையும்விட உயர்ந்ததான அந்தப் பணி எல்லாவற்றையும்விட உயர்ந்ததான அந்தப் பணி என்னவென்றால் அதுதான் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம்.

அநாத ப்ரேத ஸம்ஸ்காராத்
அஸ்வமேத பலம் லபேத்
என்பது சாஸ்த்ர வசனம்.

பர-உபகாரமாக, செத்துப்போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே, நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து, நமக்கும் உபகாரம் பண்ணிக்கொள்கிறோம்.

டாக்டர் ஒருத்தர் கேட்டார், ''Uncl aim ed bodies ஆகச் சில அநாதைப் பிரேதங்கள் கிடைப்பதிலும் ஒரு உபகாரம் இருக்கிறது. இந்தமாதிரிப் பிணங்களைத்தான் நாங்கள் போஸ்ட்-மார்ட்டம் பண்ணி, பரிசோதனைக்காக உறுப்புக்களை எடுத்துக்கொள்ள முடிகிறது. மெடிகல் காலேஜ், மெடிகல் எக்ஸிபிஷன் முதலானவற்றில் anatomy (தேக இயல்) -ஐ விளக்க இந்தப் பிரேதங்கள்தான் உதவுகின்றன. இவற்றையும் உங்கள் ஜீவாத்ம கைங்கர்யக்காரர்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டால் மெடிகல் லயன்ஸ் அபிவிருத்தி என்ன ஆவது?''என்று கேட்டார். அப்படியானால் டாக்டர்கள் வேண்டுமானால் தாங்கள் போன பிற்பாடு தங்கள் சரீரத்தைப் போஸ்ட் மார்டத்துக்குக் கொடுத்துவிடலாம் என்று பதில் சொன்னேன். சாஸ்த்ரோக்தமாக இதில் கொஞ்சம் தோஷமிருந்தாலும், இதிலே ஒருத்தன் மனமறிந்து, மனப்பூர்வமாகச் செய்கிற தியாகம் இருப்பதால் தோஷ நிவ்ருத்தி என்று வைத்துக்கொள்ளலாம். அதோடுகூட, முன்னே, அவனவன் தன் தொழிலில் ஏற்படுகிற தோஷம் போக அந்தத் தொழிலாலேயே தியாக ரூபமாக உதவி செய்ய வேண்டுமென்றேனே, அதில் மேலும் ஒருபடியாக, தொழிலால் பிறருக்கு உபகரித்து மட்டுமில்லாமல், சாவிலும் தன் தொழிலுக்கு மூலமான வித்யைக்கே உபகரித்ததாகவும் இது இருக்கும்.

'இதர மதஸ்தர்கள் ஜெயிலிலும், ஆஸ்பத்திரியிலும், நடுத்தெருவிலும் ஸம்பவிக்கும் அநாதை மரணங்களில் ஒன்றுகூட விட்டுப்போகாமல், தங்கள் தங்கள் மதப்படி ஸம்ஸ்காரம் செய்கிறார்கள்;இப்படிப்பட்ட ஹிந்து ப்ரேதங்கள் மாத்திரம் பெரும்பாலும் ஸர்க்கார் சிப்பந்திகளாலேயே ஒருவிதமான சடங்கும் இல்லாமல் புதைக்கப்படுகின்றன'என்கிற பாபமும், அவமானமும் நம்மைச் சேராமலிருக்க இப்போதாவது எல்லா ஊர்களிலும் தகுந்த ஏற்பாடு பண்ணியாக வேண்டும்.

தர்மத்தை நமக்கெல்லாம் நடத்திக்காட்ட வந்த ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியே இந்த ப்ரேத ஸம்ஸ்காரத்தை விசேஷமாகச் செய்து காட்டியிருக்கிறார். ஜடாயு மாதிரியான ஒரு பக்ஷிக்குக்கூட அவரே ஸம்ஸ்காரம் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லை, வாலியையும் பரம வைரியான ராவணனையுங்கூட அவர் வதைத்தவுடன் அங்கதனையும் விபீஷணனையும் கொண்டு அவர்களுக்கு ஒரு குறைவுமில்லாமல் தஹனம் பண்ணச் செய்திருக்கிறார். ஏனென்றால் அந்த சரீரங்களுக்குள் இருந்த மனஸ்தான் அவற்றை துஷ்டத்தனமாக நடத்திற்று. உயிரோடுகூட அந்த மனஸ் வெளியேறிய அப்புறம் ஸ்வயமாகக் கெடுதல் இல்லாத, பகவானுடைய அத்புத ஸ்ருஷ்டியான அந்த உடம்புகளுக்கும் உரிய மரியாதையைச் செய்வதில் ராமரே கண்ணும் கருத்துமாக இருந்து, யதோக்தமாக ஸம்ஸ்காரம் பண்ணுவித்திருக்கிறார். க்ருஷ்ண பரமாத்மாவும் கௌரவர்கள் உள்பட எல்லாருக்கும் குருக்ஷேத்ரத்தில் அந்திம ஸம்ஸ்காரம் பண்ணுவித்து, அப்புறம் த்ருதராஷ்ட்ரனையும் பாண்டவர்களையும் கங்காதீரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் தர்ப்பணாதிகள் செய்வித்திருக்கிறார்.

ஆனதால், அநாதை ப்ரேத ஸம்ஸ்கார விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது நம்முடைய ஹிந்து ஸமூஹத்துக்கு உள்ள பெரிய தோஷம் - மன்னிக்க முடியாத தோஷம். இனிமேலாவது இதற்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்.

அநாதையாக ஒருவன் செத்துப்போனதாகத் தெரிந்தால், அவன் என்ன ஜாதியாக இருந்தாலும், தீண்டாதவனாக இருந்தாலும், அவனுடைய குலாசாரப்படி, அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, யதோக்தமாக ஸம்ஸ்காரம் செய்வதற்குப் பொருளுதவி பண்ண வேண்டும். இதற்காகப் பலர் சேர்ந்து பணம் போட்டு மனஸாரப் பணி புரிய வேண்டும். ஏகதேசமாகச் செய்ய சக்தியுள்ள தனிகர்கள் இதைப் பெரிய தர்மம் என்று புரிந்துகொண்டு விசேஷமாக உதவி செய்ய வேண்டும். அநேக தர்ம ஸ்தாபனங்கள், ட்ரஸ்ட்டுகள் நம் ஹிந்து ஸமூஹத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களும் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம் உத்தமமான கைங்கர்யம் என்று 'ஸ்பெஷல் இன்டரெஸ்ட்'எடுத்துக்கொண்டு, இதற்காக தாராளமாகப் பொருளுதவி செய்ய வேண்டும்.

Monday 6 May 2013

ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு- மஹா பெரியவா

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.


''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, 'ஸம்ஸ்காரம்'பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?'' என்று கேட்கலாம்.

சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி' என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

'ஸம்ஸ்காரம்'என்றால் 'நன்றாக ஆக்குவது' என்று அர்த்தம். ('நன்றாக ஆக்கப்பட்ட'பாஷைதான் 'ஸம்ஸ்க்ருதம்'.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் - அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

'தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்' என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு - என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை 'பம்ப்' பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும் மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை - என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு 'பர்பஸ்' இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம். 

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் 'நிஷித்தம்' என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ''தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?''- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் - என்று வசனமே இருக்கிறது. '' தேஹோ தேவாலய : ப்ரோக்தா '' - உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ' காயமே கோயிலாக ' என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ''முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்'' என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று 'டிஸ்போஸ்' பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ''அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்'' என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டி செய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.

இதிலே ஒரு வித்யாஸம். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை அவன் பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா? அதனால் அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.

'உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்; போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்; ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?' என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்பிப்பிக்ப்பட வேண்டும்; உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது; அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது!


உற்றமும் சுற்றமும், எளிய வாழ்க்கை மற்றும் வைதிக முறைகள் வளர உபகாரம்

உற்றமும் சுற்றமும்

ஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுப காரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக எவனும் கடன்படுகிற மாதிரி நாம் விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட பந்துக்களின் சுபாசுப கார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து வந்தார்கள். 'பரோபகாரம்' என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு முன்னால், 'பந்துத்வ'த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை.

அப்போது 'கிழவர் பராமரிப்பு இல்லம்'' விதவை விடுதி' என்றெல்லாம் வைக்க வேண்டிய அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம்? பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்ததுதான். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தைப் பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா தாத்தா என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும்! தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும்கூட வெறும் 'ஷோ'வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள் அல்லது பேப்ரில் போடுகிற மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள் குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.

அவிபக்த குடும்பமுறை (Joint- family system ) போனபின் அண்ணன் தம்பி என்பதே போய்விட்டது. முன்பெல்லாம் இப்படி ஜாயின்ட்-ஃபாமிலியாக இருக்கும்போது, தாயார்-தகப்பனார், சிற்றப்பா பெரியப்பாமார்கள், அவர்களுடைய பத்னிகள், பிள்ளைகள், மாட்டுப்பெண்கள், பேரக்குழந்தைகள் என்று ஒரு வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் இருக்கிறபோது, அநாதரவான தூர பந்துக்கள் நாலைந்து பேரைக் கூட வைத்துக்கொண்டு சோறு போடுவது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதோ அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் என்று போவதால் கூட ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் வீணாகப்போய், இங்கிலீஷ் ஃபாஷன் வந்ததில், உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப் போய்விட்டன.

முதலில் ஏழையான பந்துக்களைக் கவனிக்க வேண்டும். சுபாசுப கார்யங்களுக்கு நாம் செலவழித்துக்கொண்டு நேரில் போகவேண்டும் என்பது கூட இல்லை. இந்தச் செலவையும் சேர்த்து அந்த வசதி இல்லாத உறவுக்காரனுக்கு அனுப்பி வைத்தால் அவனுக்கு எத்தனையோ உதவியாக இருக்கும்.

கல்யாணத்தில் நாம் பண்ணுகிற ஆடம்பரங்களையெல்லாம், 'வேஸ்ட்'களையெல்லாம் குறைக்க வேண்டும். இப்போது ஒரு கல்யாணம் என்றால் அதற்கு அவச்யமான வைதிக தக்ஷிணைகளுக்குக் கொடுப்பதில்தான் சுஷ்கம் பிடிக்கிறோம்! பாட்டுக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி, நாயனம், பான்ட் ஊர்வலம் என்று வேண்டாத விஷயங்களுக்கு வாரிவிடுகிறோம்.

இது தேவைதானா என்று எல்லோரும் தீவிரமாக யோசித்தாலே போதும், தானாக வெட்டிச் செலவுகள் குறைந்து, பந்துக்களுக்கும், இயலாதவர்களுக்கும் நிறைய பரோபகாரம் செய்யும் மனசு தானா வந்துடும்.


எளிய வாழ்க்கை

'நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும்'என்று நினைப்பது உத்தமமான எண்ணம். ஆனால் எண்ணம் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா? நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? அப்படியே நடந்து, அமெரிக்கா மாதிரி எல்லாரும் 'லக்க்ஷ¨ரியஸாக' வாழ முடிந்தாலும் அது நல்லதுதானா? லௌகிகமான ஸெளக்யங்கள் ஜாஸ்தியாக ஆக, ஆத்மாபிவிருத்திக்கே வழியில்லாமல்தானே ஆகியிருக்கிறது.

எத்தனை போட்டாலும் த்ருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரித்தான் இந்த ஆசை என்பது. அது எவ்வளவு ஸெளகர்யம் இருந்தாலும் த்ருப்திப்படாமல் இன்னும் புதிசு புதிசாக ஸெளக்ய ஸாதனங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கும். அத்ருப்தி, குற்றங்கள் இத்யாதியைத்தான் அமெரிக்காவில் பார்க்கிறோம். ஸெளக்ய ஸாதனங்கள் என்று நினைக்கிறவைகளை விட்டால்தான் சாந்தி கிடைக்கும் என்று அங்கே புத்திசாலிகளாக இருக்கப்பட்டவர்கள் புரிந்துகொண்டுதான் த்யானம், யோகம், பஜனை என்று கிளம்பியிருக்கிறார்கள்.

மநுஷ்யனின் ஆத்மாபிவிருத்திக்கு ப்ரதிகூலமாக வெறும் லௌகிக ரீதியில் செய்கிற எந்த உபகாரமும் உபகாரமேயில்லை, அபகாரம்தான். எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்க்ஷேமம். ஆனதால் மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபகாரம். இதை எப்படிப் பண்ணுவது?

நாம் டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா? ஆகையால் நாமே எளிமையாக வாழ்ந்துகாட்ட வேண்டும். அதாவது, 'நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழவேண்டும்' என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். 'ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழ முடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழவேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்' என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

வயிறு ரொம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றத் துணி, இருப்பதற்கு ஒரு குச்சு வீடு - இம்மாதிரியான அடிப்படை (basic) தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்குமேல் ஆசைக்குமேல் ஆசை, தேவைக்குமேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழவேண்டும்.


வைதிக முறைகள் வளர உபகாரம்

கல்யாணம், உபநயனம் முதலியவற்றில் குறைவில்லாமல் தக்ஷிணை தருவது மட்டுமின்றிப் பொதுவாகவே வைதிகர்களுக்கு உபகாரம் செய்கிற எண்ணம் வளர வேண்டும். இது இல்லாததால்தான் அடுத்த தலைமுறைக்கு வைதிக கார்யம் செய்து வைக்கவே ஆள் கிடைக்காத மாதிரிச் செய்திருக்கிறோம். வேத ஸம்பந்தமான கார்யங்கள் லோகத்தில் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கும்படி பண்ணுவதைவிட ஜன ஸமூஹத்துக்குப் பெரிய பரோபகாரம் எதுவும் இல்லை. இப்போது விநோபா 'பூதான்' என்று சொல்வதற்கு முன்னோடி பழைய காலத்தில் ராஜாக்களும், பிரபுக்களும் வேத வித்துக்களுக்கு நிலம் மானியம் பண்ணினதுதான்.

பரம தரித்ரர்களும் சாஸ்தரப் பிரகாரம் சுபாசுபங்களைச் செய்ய நாம் உபகரிக்க வேண்டும். 'ஷோ' இல்லாமல் சாஸ்த்ரப்படி மட்டும் செய்வதற்கு நிறையச் செலவே இராது.

என் பரோபகார லிஸ்ட் நீண்டுக்கொண்டே வருகிறது. அதிலே ஒவ்வொரு 'லொகாலிடி'யிலும் பரம ஏழைகளும் சொற்ப வாடகையில் பெறுமாறு ஒரு கல்யாண மண்டபம், ஒரு அபர காரிய ஸ்தலம் (உத்ர க்ரியைகள் செய்யுமிடம்) ஏற்படுத்துவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


Saturday 4 May 2013

தனக்குத் மிஞ்சித் தர்மம் - மஹா பெரியவா


'' தனக்கு மிஞ்சித் தர்மம்'' என்பதற்கு நான் புது வியாக்யானம் செய்கிறேன்: எது உயிர் வாழ்வதற்கு அத்யாவச்யமோ, எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities -க்குத் தேவயானதைத் தான் 'தனக்கு' என்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 'தனக்கு' என்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும். 

ஸொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக்கொள்ளாவிட்டால்தான், தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக்கும். முடிவில்லாமல் தனக்கென்று ஆடம்பர போக்யங்களைப் (லக்ஷ்ரிகளை)  பெருக்கிக் கொண்டே போய்விட்டு, ''தனக்கு மிஞ்சித் தர்மம் பண்ண எதுவுமே இல்லை'' என்று கைவிரித்தால் அது நியாயமில்லை. 

ஆனதால், தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் ''தனக்கு மிஞ்சித் தர்மம்''. ''தர்மம் பண்ணியே ஆகவேண்டுமே! வேதத்தில் 'தர்மம் சர' என்றும், படிப்பு ஆரம்பத்திலேயே அவ்வை 'அறம் செய விரும்பு' என்றும் சொல்லியிருப்பதைச் செய்தேயாக வேண்டுமே!

ஆனதால், நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகவும் செலவைக் கட்டுப்படுத்திக்கொண்டு 'தனக்கு மிச்சும்'படிப் பண்ண வேண்டும்'' என்றே இந்த வசனத்தை அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்* அப்படிச் செய்தால் எவனுமே தர்மத்துக்காகச் சேமித்துத்தான் ஆகவேண்டும் என்றாகும். அதாவது, எவனுமே கடன்படமாட்டான்! இது ஒரு பெரிய ஸ்வய உபகாரம்!

இப்போது ஸர்க்காரே கடன் வாங்குவதாக ஆகிவிட்டிருக்கிறது! அதே வழியில் வேண்டாத வஸ்துக்களையெல்லாம் ஜனங்களும் அத்யாவச்யமாக்கிக் கொண்டால் எல்லாரும் கடனாளியாக வேண்டியதுதான். கடன் வாங்காமலிருப்பதே பெரிய உபகாரம். ஏனென்றால் நாம் கடன் வாங்கிச் செலவழிக்கிறபோது, நாம் தர்மம் பண்ண முடியாது என்பதோடு மற்றவர்களையும் கடன் வாங்கி டாம்பீகம் செய்யத் தூண்டுகிறோம். பிறத்தியாருக்கும் ஸாத்யமில்லாத ஆசைகளைக் கிளப்பிவிடுகிற விதத்தில் எவனொருத்தனும் டாம்பீகமாக வாழ்கிறதுதான் பெரிய ஸமூஹ த்ரோஹமான கார்யம். அநாதியான நம் சாஸ்த்ரங்களிலிருந்து நேற்று காந்தி வரையில் சொல்லி வந்த எளிய வாழ்க்கையை (simple living ) வசதியுள்ளவர்களும் மேற்கொண்டால் எந்தக் கம்யூனிஸமும், வர்க்கப் போராட்டமும் வரவே வராது. எளிய வாழ்க்கையால் இவன் நிறைய மிச்சம் பிடித்து தர்மமும் பரோபகாரமும் செய்வது ஒரு பக்கம்; இதைவிட முக்யமாக மற்றவர்களுக்கு ஆசை,

அஸ¨யை, கடன் இவற்றை ஏற்படுத்தாமல் இருக்கிறானே, இதுதான் பெரிய உபகாரம். 'வரவே சிறுத்து, செலவே பெருகினால் அது திருடு' என்றே ஆன்றோர் மொழி இருக்கிறது. கடன் வாங்கின பணம் இன்னொருத்தனுடையதுதானே? அந்தப் பணம் தனக்கு வருமா, வருமா என்று இவன் திருப்பிக் கொடுக்கிற வரையில் அவன் திருட்டுக் கொடுத்துவிட்டது போல அவஸ்தைப் பட்டுக் கொண்டுதானே இருப்பான்? அதனால்தான் இதைத் திருடு என்றே சொல்லியிருக்கிறது. ''கடன் பட்டார் நெஞ்சம்'' மட்டுமில்லாமல் ''கடன் கொடுத்தார் நெஞ்ச''மும் கலங்கும்படியாக இப்படி இரண்டு சாராருக்கும் அபகாரம் பண்ணுகிற இரவல் பழக்கத்தை விடுவதே பெரிய உபகாரந்தான்.

சரீர ஸாதனை, ஆத்ம ஸாதனை, மற்றும் ஸ்திரீயின் பங்கு குறித்து மஹா பெரியவா உபதேசம்


ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ மாடுமாதிரி தேஹத்தால் அலைந்து திரிந்து, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்துவிட்டு, சாந்தமாக ஸெளக்கியமாக ஈஸ்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலும் பக்தி, தியானம் எதுவுமே இல்லாமலும் ஜீவனை விட்டானென்றால் அவன் மநுஷ்ய ஜன்மா எடுத்தே ப்ரயோஜனமில்லைதான். ஆனால் செய்ய வேண்டிய நிலையில் சரீர உழைப்புப் பண்ணியேயாக வேண்டும். பொதுவாக இப்பபோது ஜனங்கள் இருக்கிற லோகாயதமான, அபக்வமான ஸ்திதியில் அவர்களில் பெரும்பாலார் நீண்ட காலத்துக்கு சரீரத்தால் உழைத்து உழைத்தே சித்தசுத்தி பெற வேண்டியவர்களாக்காதான் இருக்கிறார்கள்.

மூளையால் மட்டும் வேலை செய்கிறவனுக்கும், பேனா வேலைகாரனுக்கும் சரீரத்தால் உழைப்பவனைப் போல அசந்து தூக்கம் வருகிறதோ?தூக்கம் வராவிட்டால் மனஸ் எங்கேயாவது திரிந்துகொண்டே அழுக்கைச் சேர்த்துக்கொள்கிறது. நன்றாக உழைத்துவிட்டு வந்தவன் இப்படியெல்லாம் கெட்ட சிந்தனைகளில் போகாமல் நன்றாகத் தூங்குகிறான். அதனால் தேஹ பலம், புத்தி பலம் இரண்டும் உண்டாகிறது. தேஹத்தையும் புத்தியையும் 'கனெக்ட்'பண்ணுகிற nervous system -ஐ அவன் பாழ் பண்ணிக்கொள்கிறதில்லை.

சரீர உழைப்பில்தான் ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்றுவிடாமல் அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈஸ்வரபரமான விஷயகங்ளிலும் 'டச்'வைத்துக் கொண்டேயாக வேண்டும். போகப் போக 'டச்'பண்ணினால் மட்டும் போதாது, 'டச்'பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக்கொள்ளவும் ப்ரயத்னப்பட வேண்டும். அத்யாத்ம ஸமாசாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும், இவன் ஆத்மாபிவிருத்தியில் உச்சாணிக் கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதுங்கூட, சரீரப் பணியில் இவன் 'டச்'சை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஜீவன்முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே, நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதி புரிவதுகூடக் கஷ்டமாயிருக்கிறதே, அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனஸில்லை, எண்ணமில்லை, 'ப்ளான்'இல்லை என்று ஆகிறமட்டும், நாமாக உடற்தொண்டை அடியோடு விட்டோமென்று இருக்கவே கூடாது. அதனால்தான் பெரியோர்கள், ''ஒரு கையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப் பண்ணு'' எண்ணுகிறார்கள்.

முதலில் சரீர வேலை ஜாஸ்தி, ஆத்மார்த்த சிந்தனை குறைச்சல் பிறகு இரண்டும் ஸமம்;அப்புறம் ஆத்மார்த்தம் ஜாஸ்தி, சரீர வேலை குறைச்சல் என்று அதாவது எல்லா ஸ்டேஜிலும் இரண்டில் எந்த ஒன்றுமே இல்லை என்று இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கும் அப்புறம் ஈஸ்வரனே நம்மை நடத்தி வைப்பது தெரியும். அந்த ஸ்திதியில் பரமஞானிகளாக இருந்து கொண்டே ஓயாமல் ஒழியாமல் காரியம் பண்ணினவர்களும் உண்டு. லோகமே தெரியாமல் கல்லு மாதிரிக் கிடந்தவர்களும் உண்டு. அங்கே போகிற மட்டும் மெய் வருந்திப் பரோபகார மாக எல்லாரும் உழைக்கத்தான் வேண்டும். பலஹீனர்கள் தவிர மற்ற எல்லாரும் சரீர கைங்கர்யம் நிறையப் பண்ணத் தான் வேண்டும். பலஹீனர்கள் இதற்கு ஈடாக மற்ற தினுசுகளில் பொதுப்பணி செய்ய வேண்டும்.

ஸ்ரமதானம் மாதிரியே எல்லாரும் 'ஸம்பத்தி தான்' என்கிற பண தானமும் துளியாவது பண்ண வேண்டும். எத்தனை குறைச்சல் வருமானமானாலும் அதிலும் ஒரு காலணாவாவது தனக்கென்று இல்லாமல் தர்மத்துக்குப் போகணும். இதிலே ஸ்திரீகளால் ஆகக்கூடியது நிறைய இருக்கிறது. நகை, துணி, ஸினிமாச் செலவு, வரதக்ஷிணை சீர் செனத்தி ஆசை இவற்றால் ஸ்த்ரீகள்தான் புருஷர்களை விட தான தர்மம் முடியாத ஸ்திதியை ஏற்படுத்தி விடுகிறார்கள். ரேஸ், சீட்டு, குடி, ஸிகரெட் முதலான துன்மார்க்கச் செலவுகள் புருஷர்கள்தான் செய்கிறார்களெண்று எனக்குத் தெரியுமானாலும், அவர்களை விடவும் பெண் ஜன்மா எடுத்தவர்கள்தான் எல்லா உயிர்களுக்கும் தாயாக, தியாகிகளாக உபகரிப்பதில் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் சொல்கிறேன் அகமுடையான், பெண்டாட்டி இருவரும் ஒத்துழைத்து, தர்மம் செய்வதற்கென்றே மற்றச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு கொஞ்சமாவது மிச்சம் பிடிக்க வேண்டும். 'இருக்கிறவர்'களும் இதற்கெல்லாம் ஆகிற செலவைச் சேமித்துப் பரோபகாரத்துக்குப் பயனாக்க வேண்டும்.