Wednesday 21 January 2015

நிதித்யாஸனம் - மஹா பெரியவா

ஞான வழியில் லக்ஷ்ய ஸித்தியை அடைவிக்கிற முடிவான நேர்-ஸாதனத்திற்கு நிதித்யாஸனம் என்று பெயர், இது த்யான யோகத்தைச் சார்ந்ததுதான். உயிரோடு உறவு கொண்டாடி ஆத்ம ஸமர்ப்பணம் செய்வதான பக்தி யோகத்தையும், கரைத்துக் கொண்ட த்யான யோகமாகத்தான் அதை அப்யஸிக்க வேண்டும். விவேக சூடாமணியில் இதை ஆசார்யாள் ஸ்பஷ்டமாகத் தெரிவித்திருக்கிறார். தாம் மட்டும் அப்படிச் சொல்லவில்லை, வேதத்திலேயே அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாந் முமுக்ஷோ: முக்தேர்-ஹேதூந் வக்தி ஸாக்ஷாச்-ச்ருதேர்கீ:

அடிப்படை ச்ரத்தை, அதோடு பக்தி யோகம், த்யான யோகம் இரண்டையும் கலந்து பண்ணுவதே - த்யான யோகத்திலேயே பக்தி பாவத்தையும் கரைத்துப் பண்ணுவதே - முமுக்ஷுவாக இருப்பவன் முக்தியைப் பெறுவதற்கான ஹேது/உபாயம், இப்படி சாக்ஷாத் வேத வாக்யமே சொல்கிறது என்று சங்கராசார்யார் கூறி இருக்கிறார். கைவல்ய உபநிஷத் என்னும் க்ருஷ்ண யஜுர் வேதத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. இதன் ஆரம்பமே, 'ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாதவைஹி' என்பதுதான். ப்ரம்ம சூத்ர பாஷ்யத்திலும் ஆசார்யாள் இதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ப்ரம்ம ஸுத்ரத்தில் ப்ரஹ்மானுபவத்தை உண்டாக்கும் ஸாதனத்திற்கு 'ஸம்ராதனம்' என்று பெயர்.ஆராதனம், ஆராதனை என்ற மாதிரியே அர்த்தம் கொடுப்பது 'ஸம்ராதனம்' என்ற வார்த்தை. பக்தி வழிபாட்டைத்தான் பொதுவாக ஆராதனை என்று கூறுகிறோம்.இங்கே ஞான வழிபாட்டை 'ஸம்ராதனம்' என்று கூறியிருக்கிறார். இவ்வார்த்தையை ஆசார்யாள் விளக்கி பாஷ்யம் பண்ணும் போது 'பக்தி-த்யான-ப்ரணிதானாதி அநுஷ்டானம்'என்றே சொல்லியிருக்கிறார். 'ப்ரணிதானம்' என்றால் ஸமாதி, ஸமாதானம் போன்ற்றைப் போல 'பரிபூர்ணமாக ஒருமுகப்படுத்திச் சேர்த்து வைப்பது' என்று அர்த்தம். அந்தஃகரணத்தைப் பூர்ணமாக ஒருமுகப்படுத்தி த்யானம் செய்வதுதான் அந்த ஸாதனம் என்றே தோன்றும். ஆனால் அதே ஆசார்யாளே இங்கே பக்தியை முதலில் போட்டுஅப்புறமே த்யானத்தைச் சொல்லி இரண்டிலும், இரண்டாலும் ப்ரணிதானம் பண்ண வேண்டும் என்கிறார்.

பிரம்ம ஸுத்ரத்தில் ஒரு இடத்தில் ஒருவன் தான் பெற்றுக்கொண்ட உபதேசத்தை விடாமல் பல ஆவிருத்தி மனனம் செய்ய வேண்டும் - அதாவது ஆலோசனை பண்ணி, அலசி-அலசி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று வருகிறது. இங்கே மூல ஸுத்ரத்தில் பக்தி பாவத்துடன் செய்கிற உபாஸனையோ அல்லது ஞான ஸாதனை பற்றியோ ஏதுமில்லை, பொதுவாக ஆவிருத்தி பண்ணனும் என்று மட்டும் இருக்கிறது. இதற்கு முன்னாலும், பின்னாலும் வரும் ஸுத்ரங்களைக் கொண்டு பார்த்தால், ஞான மார்க்கத்தில் மஹாவாக்ய உபதேசம் பெற்ற பிறகு முமுக்ஷு பண்ண வேண்டிய மனனம்தான் இங்கே சொல்லியிருப்பது என்று தெளிவாகிறது. ஆசார்யாள் இதை மிக தெளிவாக பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஆனால் இந்த ஸுத்ரத்தின் முடிவில் தொகுத்துச் சொல்லும் போது அவராகவே உபாஸனா மார்க்கத்தைப் பற்றியும் சொல்லி, அறிவது, உபாஸிப்பது என்ற இரண்டையும் வித்யாஸப்படுத்தாமல் ஒன்றாகவே உபநிஷதங்களில் சில இடங்களில் சொல்லியிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்