Tuesday 26 March 2013

'ரிடையர்'ஆனவர்களுக்கு மஹா பெரியவா விடுக்கும் வேண்டுகோள்



''நாங்கள் 'ரிடையர்'ஆன கிழங்களாச்சே! தொழிலை விட்டு விட்டவர்களாச்சே! எங்களால் என்ன உதவி பண்ண முடியும்?'' என்கிறீர்களா? உங்களால் முடியாதா? உங்களால்தான் ஜாஸ்தி முடியும் என்று உங்களைத்தான் இத்தனை நாழி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் உங்களைப் பட்டுப் போன மரம் என்று நினைக்க வேண்டாம். மனஸ் வைத்தால் நீங்கள்தான் இந்த தேசத்தை தேவலோகமாக்கக் கூடிய கல்பக வ்ருக்ஷங்கள் என்று நான் நினைக்கிறேன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்தால் கிழத்தனத்தின் பலஹீனமும் ஓய்ச்சலும் இல்லாமல் யுவர்களைவிட உத்ஸாஹமாகப் பண்ணலாம். கிழவன் நானே சொல்கிறேன்.

மற்றவர்கள் ஆஃபீஸ் காரியம் போக மிஞ்சிய கொஞ்சம் போதில்தான் பொதுத்தொண்டு பண்ண முடியுமென்றால் ரிடையரான நீங்களோ புல் டைமும் ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிற பாக்யம் பெற்றிருக்கிறீர்கள். ஆஃபீஸுக்குப் போய்வந்த காலத்தில் உங்களுக்குக் குடும்ப பொறுப்பும் அதிகம் இருந்தது. இப்போது அதுகளைக் கூடியவரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். அநேகமாக ரிடையர் ஆகிற வயஸில் ஒருத்தனுக்கு நேர் பொறுப்பு உள்ள பிள்ளைகளின் படிப்பு, பெண்ணின் விவாஹம் முதலான கார்யங்கள் முடிந்திருக்கும். அதற்கப்புறமும் பேரன் படிப்பு, பேத்தி கல்யாணம் என்றெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. ரிடையரானவர்களும் குடும்ப விசாரம் என்று அழுது கொண்டிருந்தால், மற்றவர்களும் இதையே நினைத்துக் கொண்டு ப்ரலாபிக்க வேண்டியதுதான். ஓரளவு வயஸான பிற்பாடாவது விவேக வைராக்யாதிகளைப் பழக வேண்டாமா? கொஞ்சமாவது வானப்ரஸ்தாச்ரமிகளைப் போல, வீட்டுப் பொறுப்புக்களை அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள வோண்டும். உத்யோக காலம் முடிந்த பின் சொந்த பிஸினஸ் பண்ணலாமா, ஃபாக்டரி வைக்கலாமா, ஃபார்ம் வைக்கலாமா, எக்ஸ்டென்ஷனுக்கு 'ட்ரை' பண்ணலாமா என்று தவித்துக் கொண்டிருக்காமல், தன்னைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும். ஸ்வயோபகாரமில்லாமல் பரோபகாரமில்லை என்றனே! அதனால், இதற்கு முன்னால் தெரிந்து கொண்டு, அவற்றின்படி இதுவரை பண்ணாத அநுஷ்டானங்களை இப்போதாவது பண்ண ஆரம்பிக்க வேண்டும்.

இதெல்லாம் பண்ணினாலும் உச்சிப்பொழுதுக்கு அப்புறம் நிறைய அவகாசம் இருக்கும். அதில் பரோபகாரங்கள் பண்ண வேண்டும். இருக்கிற ஓய்வை நன்றாகப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு ஸத் விஷயங்களைத் தாங்கள் படித்தும் கேட்டும் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் அவற்றை எடுத்துச் சொல்வது பெரிய உபகாரம்.

அது தவிர நீங்கள் எந்தத் தொழில் செய்தீர்களோ, அதை நாலு ஏழை இளைஞருக்கு ஃப்ரீயாகச் சொல்லிக் கொடுத்து அநத் உத்யோகத்துக்கான பரீக்ஷைகளுக்கு அவர்கள் போகிறதற்கு உதவி செய்யுங்கள். கொஞ்சம் வசதியாகப் பென்ஷன் வாங்குகிறவர்களாயிருந்தால், இப்படி வித்யாதானம் செய்வது மாத்திரமில்லாமல் அவர்களில் ஓரிரண்டு பேருக்காவது அன்னதானமும் சேர்த்துப் பண்ணுங்கள். சொந்தக் குடும்பத்துக்கு சொத்துச் சேர்த்து வைத்தால் மட்டும் போதாது. வெளி மநுஷ்யாள் இரண்டு பேர் வயிறும் குளிரப் பண்ணுங்கள். இப்படி ஆதரவில்லாதவர்களுக்கு ஸமூஹத்திலேயே திருட்டு, புரட்டு எவ்வளவோ குறையும். இல்லாமையால்தான் (வசதியிருக்கிறவர்களுக்கு மனமில்லாமையாலுந்தான்!) அநேகர் ஏமாற்றுக்காரர்களாகவும் திருடர்களாகவும் ஆகிறார்கள். 

நான் சொல்கிறது எல்லோருக்கும்தான் என்றாலும் ப்ராம்மணர்களில் வசதியுள்ள பென்ஷனர்களுக்கு இதைக் குறிப்பாகச் சொல்கிறேன். மற்ற ஸமூஹங்களில் நிராதரவான இளைஞர்களை ஆதரிக்க அந்தந்த ஸமூஹத்தில் வசதியுள்ளவர்கள் நிரம்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ப்ராமணர்களுக்குத்தான் அந்த 'ஸ்பிரிட்' இல்லை. காலேஜ் அட்மிஷன், உத்யோகம் பெறுவது எல்லாவற்றிலுமே கம்யூனல் ஜீ.ஓ. வந்த நாளாக ப்ராம்மணப் பசங்கள் அதிகக் கஷ்ட தசையில் இருக்கிற இப்போதும் அந்த ஸமூஹத்தில் ஸெளகர்யமுள்ளவர்கள் இதை கவனிக்காமலிருப்பது நியாயமில்லை.

ஒரு காலத்தில் ப்ராம்மணப் பசங்களை காலேஜ் அட்மிஷன், அப்பாயின்ட்மென்ட் எல்லாவற்றிலும் ஸர்க்கார் கழித்துக் கட்டுவதைப் பார்த்து நான் ஸந்தோஷப்பட்டதுகூட உண்டு. ஆமாம், ஸந்தோஷந்தான் பட்டேன்!ஏனென்றால், ''இவன் தனக்கான வேத வித்யையையும், எளிய வாழ்க்கையையும் விட்டுவிட்டுப் பணமே குறியாக துராசாரத்தில் இறங்கியிருப்பதற்கு இந்த இங்கிலீஷ் படிப்பும், உத்யோகமும்தானே காரணம்?இவனாக இதுகளை விடாவிட்டாலும், மற்றவர்களும் ஸர்க்காரும் சேர்ந்து இவனுக்கு இதுகள் கிடையாது என்று விரட்டி அடிப்பதால், இப்போதாவது வேறு வழியில்லை என்று அத்யயனத்துக்குத் திரும்பி, உள்ளதே போதும் என்று த்ருப்தனாக ப்ராம்மண லக்ஷணப்படி க்ராமத்தோடு இருந்துகொண்டு ஸிம்பிகளாக வாழ ஆரம்பிப்பானல்லவா?'' என்று மனப்பால் குடித்துத்தான் ஸந்தோஷப்பட்டேன்.

ஆனால் நடந்தது என்ன என்றால், இவனுக்கு மேல் படிப்பில்லை, அழுக்குப்படாத உத்யோகமில்லை என்றதும், இவன் தன் ப்ராசீன ஜீவித முறைக்குத் திரும்பாமல், இன்னம் படுமோசமாகத் துராசாரத்திலேயே இறங்க ஆரம்பித்து விட்டான். ஸினிமாவில் சேர்வது, மிலிடரியில் சேர்ந்து மது மாம்ஸாதிகளைச் சாப்பிடுவது, ஹோட்டலில் சேர்ந்து கொஞ்சம்கூட ஆஹார சுத்தமில்லாமல் தின்பது என்றெல்லாம் ஆரம்பித்து விட்டான். இதைப் பார்த்த பின்தான் எனக்கு இதைவிட இவனை வேறு விதத்தில் இங்கிலீஷ் படிப்பும் லௌகிகமான தொழிலும் பெறும்படிப் பண்ணிவிட்டு, அதோடு கூடத்தான் முடிந்த மட்டும் ப்ராம்மண தர்மங்களை அநுஷ்டிக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இதில்தான் பென்ஷனர்களின் ஸஹாயத்தைக் கேட்கிறேன்.

முதலில் ப்ராம்மணன் தலையில் கைவைத்தது பரவிப் பரவி இப்போது 'ஃபார்வர்ட் கம்யூனிடீஸ்' என்று பேர் வைக்கப்பட்ட செட்டிமார், முதலியார், பிள்ளைமார் என்று ஒவ்வொரு ஸமூஹமாகக் காலேஜ் அட்மிஷன், ஸர்க்கார் உத்யோகம் எல்லாவற்றிலும் பின்னால் தள்ளப்படுவதில் முடிந்திருக்கிறபடியால், இவர்கள் எல்லாரும் எதிர்காலத் தலைமுறைகள் விஷயத்தில் விழிப்போடு ஏற்பாடு செய்ய வேண்டும். பின்தங்கிய வகுப்பினர் என்பவர்களுக்கும் நம்மாலான ஸகல உபகாரமும் செய்யத்தான் வேண்டும். பரோபகாரத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்கிற எண்ணமே தப்பு என்பதுதான் நம் motto -வாக (லக்ஷிய வாசகமாக) இருக்க வேண்டுமாயினும், இந்த படிப்பு, உத்யோகம் ஆகிய விஷயங்களில், சில வகுப்பாருக்கு உரியதையும் புறக்கணித்து ஸர்க்காரே பிற்பட்ட வகுப்பாருக்கு அதிகப்படி சலுகை காட்டுவதால்தான், இந்த விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் கம்யூனல்-பேஸிஸில் (வகுப்பு அடிப்படையில்) பேசியாக வேண்டியிருக்கிறது. என்று சொல்கிறார்களே, அந்த தாழ்த்தப்பட்டவர்களை நியாயமக முன்னேற்றுவதை நான் ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் இப்படிச் சொல்லிக்கொண்டு செய்கிற காரியங்கள் மற்றவர்களை பண்ணித் தாழ்த்தி வைப்பதற்காக ஆகிறபோது இவர்கள் தாங்களாகவே மேலே எழும்புவதற்கு முயற்சி பண்ண வேண்டும் என்கிறேன். இந்த இனத்தில் மட்டும் தங்கள் வகுப்புக்குத் தனியாக உபகாரம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கிறேன்.

அதாவது ஸர்க்காரும் கைவிட்டு, சொந்த ஸமூஹத்திலும் போதிய ஆதரவு இதுவரை பெறாத ப்ராம்மணப் பசங்களுக்குக் குறிப்பாகவும், மற்ற முன்னேறிய வகுப்பினர் எல்லோருக்குமே பொதுவாகவும் இந்த ஸமூஹங்களைச் சேர்ந்த பென்ஷனர்கள் ஒன்று சேர்ந்து ட்யூடோரியல் காலேஜ் வைத்துப் பலவிதமான தொழில்களும் சொல்லிக்கொடுக்க வேண்டும். பென்ஷனர்கள் தங்களுக்குச் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் இவற்றில் ஆசிரியர்களாகச் சொல்லிக் கொடுத்தால் விசேஷம். ஆனாலும், ஒரு காலேஜ் என்று நடத்தினால் இதர செலவுகள், maintenance charges ஆகுமல்லவா?அதனால், அவசியச் செலவுக்கு மட்டும் கட்டுப்படி ஆகிறமாதிரி குறைச்சல் ஃபீஸ் வாங்கலாம். இதன்மூலம் முன்னேறியதாகச் சொல்லப்படும் ஜாதிக்காரப் பிள்ளைகள், இவ்வளவு தூரம் தங்களை பஹிஷ்கரிக்காத ஸென்ட்ரல் ஸர்வீஸ், பாங்கு, கம்பெனிகள் ஆகியவற்றில் வேலைக்குப் போவதற்கோ, ஸ்வதந்திரமாக ஒரு தொழில் செய்து பிழைத்துப் போகவோ வழிசெய்ததாகும். ட்யூடோரியல் காலேஜில் படித்தால் அப்புறம் ப்ரைவேட்டாக அநேக யூனிவர்ஸிடிகளில் பரிக்ஷை எழுதி டிகிரி வாங்கலாமல்லவா? ரெகுலர் காலேஜ்களில்தான் ஸர்க்கார் ஸீட் ரிஸர்வேஷன் வைத்து இவர்களை விரட்டுகிறதே!  அதனால்தான் இந்த யோசனை.

பல துறைகளில் அநுபவஸ்தர்களான பெரியவர்கள் ரிடையராகி ஓய்வில் இருக்கிறீர்களல்லவா? நீங்கள் ஒன்று சேர்ந்து கணிதம், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மற்றும் புது ஸயன்ஸ்கள், என்ஜினீயரிங், அக்கவுன்டன்ஸி. இன்னம் இப்போது ஏற்பட்டிருக்கிற அநேக டெக்னலாஜிகல் ஸப்ஜெக்ட்கள், வீவிங் (நெசவு) போன்றவை கூடத்தான், ஸங்கீத வாத்யங்கள் வாசிப்பதைக் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்-இந்த எல்லாவற்றிலும் பயிற்சி தருவதற்குப் பிரைவேட்டாக ட்யூட்டோரியல் காலேஜ் ஆரம்பியுங்கள்*போதகர், போஷகர் இரண்டாகவும் இவற்றில் பணிசெய்து இரட்டிப்புப் புண்யம் பெறுங்கள். கற்ற வித்தையை, உங்களுக்கு இத்தனை நாள் ஸம்பாத்யமும் இப்போது பென்ஷனும் வாங்கிக் கொடுக்கிற வித்தையை, தினம் ஒருமணி இரண்டு மணி பிறருக்கு உபகாரமாகச் சொல்லித் தரக்கூடாதா? இதனால் ஒரு பெரிய ஸமூஹ ப்ரச்னை தீரவும் உதவி செய்ததாகிறது.

வெறுமனே தொழிலுக்கான படிப்பாக மாத்திரமில்லாமல், இந்த ட்யூடோரியல் காலேஜ்களில் அவரவர் கலாசார முறைப்படிக் கொஞ்சம் ஸமயக் கல்வியும், அநுஷ்டான போதனையுங்கூடக் கொடுக்கலாம்.

இந்த ஸமயக் கல்வி போதனையில் பிற்பட்ட வகுப்புக்காரர்களுக்கும் முன்னேறிய வகுப்புக்காரர்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும். ஸர்க்காரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு தெய்வபக்தி உண்டாக்க எதுவுமில்லை. அது மட்டுமில்லாமல் அவர்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்கிற நாஸ்திகக் கட்சிகளின் வலையிலும் அவர்கள் விழப் பார்க்கிறார்கள். இதே ஸமயத்தில் அவர்களைப் படிப்பு, பதவி, இவற்றிலும் தூக்கிவிட்டு, உரிமை, ஸ்ட்ரைக், ஒத்துழையாமை என்றெல்லாம் வேறு சொல்லிக் கொடுப்பதால், தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு வந்தருக்கிற ஸ்வபாவமான பக்தியும், அடக்கப் பண்பும் மறைந்துபோய் அவர்கள் தறிகெட்டுப் போகும்படியான நிலை உண்டாகியிருக்கிறது. ஆனபடியால் அவர்களையும் தெய்வத்தின் பக்கம் திருப்ப வேண்டிய கடமை ஜன ஸமுதாயம் முழுவதற்குமே இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இங்கே என்ன சொன்னேனென்றால், ஸம வாய்ப்பு இழந்து விட்டவர்களுக்காக வைக்கிற ட்யூட்டோரியல் காலேஜ்களில் அவரவர் குலாசாரப்படி ஸமயக்கல்வி, அநுஷ்டானங்களையும் போதிக்கலாம் என்பது. இப்போது லோகம் இருக்கிற இருப்பில், இதை 'கம்பல்ஸரி'யாகப் பண்ணினால், இம்மாதிரி காலேஜில் சேர வருகிறவர்களே குறைந்து போய்விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது! ஆனபடியால் இதை 'ஆப்ஷன'லாக வைக்கலாம். கட்டாயப் பாடமாக இல்லாததாலேயே 'இதில் என்னதான் இருக்கு? பார்ப்போமே!'என்று பலருக்கு ஆர்வம் ஏற்பட்டு இஷ்ட பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

காளைப் பருவத்தில் ஆஹார சுத்தி இல்லாமல் கண்டபடிச் சாப்பிட்டு மாணவர்கள் மனஸ் விகாரப்படுவதைத் தடுப்பதாக, இந்தக் காலேஜ்களில் சாஸ்திர ஸம்ப்ரதாயப்படியான ஹாஸ்டல்களும் வைக்கலாம்.

ஆஹாரசுத்தி ஆத்ம சுத்திக்கே அஸ்திவாரம் மாதிரி. அது இப்போது ரொம்பவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. கண்டதைத் தின்பதற்குக் கண்ட இடமெல்லாம் ஹோட்டல் மயமாயிருக்கிறது. முன்னே ஹோட்டல் என்பதே என்னவென்று நம் ஸமூஹத்துக்குத் தெரியாது. ஹோட்டல் வைத்துக் காசு வாங்கிக் கொண்டு அன்ன விக்ரயம செய்வது (உணவை விற்பது) நம் சாஸ்திரப்படி பாபமேயாகும். முன்னெல்லாம் ஊருக்கு ஊர் இதனால்தான் யாத்ரிகர்களுக்காக சத்திரம் என்று தர்மசாலை இருந்தது. அதிலே சாஸ்திரப்படியான ஆஹாரமே, நாள் கிழமைகளிலும் வ்ரத உபவாஸ தினங்களிலும் எப்படிப் போடணுமோ அப்படியே போட்டு வந்தார்கள். யாத்ரிகர்கள் இம்மாதிரி போஜனம் பண்ணுவதில் அவர்களுக்கு ''ஏற்பது இகழ்ச்சி''என்பது இல்லாமலே, சத்திரம் நடத்துகிறவர்களுக்கு மட்டும் ஈகையின் புண்யம் கிடைத்து வந்தது!

மற்றவர்களை விடவும், வித்யாப்யாஸம் செய்கிற இளம் பருவத்திலிப்பவர்களை வயோ சேஷ்டையால் புத்தி விகாரப்படாமல் ரக்ஷிக்க வேண்டியது ரொம்பவும் அவசியமானதால் அவர்களுக்காக சாஸ்த்ரீயமான ஹாஸ்டல்கள் வைத்து சுத்தமான ஆஹாரம் போடுவதை முக்யமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் கடைசி ஸ்திதியில் இருக்கும் பென்ஷனர்களான நீங்களே யோசித்துப் பாருங்கள். எத்தனையோ ஆயிரம் வருஷமாக நம் பெரியோர்கள் ரக்ஷித்துக்கொடுத்த ஆசார, ஆஹார சுத்திகள் இன்னவென்றே தெரியாமல் இளந்ததலைமுறையினரால் தாரை வார்க்கப்பட விடலாமா? விடக்கூடாது என்றால், யாரைக் கொண்டு இதைப் பண்ணுவது? ராஜாதான் முன்காலங்களில் தர்ம ரக்ஷணத்தை கவனித்துக் கொண்டது. ஆனால் இப்போதுள்ள ஸர்க்காரைக் கொண்டு ஆசார அபிவிருத்திக்கு 'ரூல்' போடப் பண்ண நினைப்பதே பரிஹாஸம் அல்லவா? நேராக இந்த ஆசாரங்களைத் தாங்களே நாசம் பண்ணுவதோ அல்லது பிறர் நாசம் பண்ணும் போதாவது 'ஆஹா' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதோதான் நம் தேசத்தில் 'முற்போக்குக்காரர்'களின் கொள்கையாக இருக்கிறது. அவர்களை மீறி நம்முடைய 'ஸெக்யூலர்' ராஜாங்கமும் போகாது. ஆகையால் நம்முடைய புராதன தர்மங்களைக் காப்பாற்ற நாமேதான் ஆனதைச் செய்ய வேண்டும் எனவே உங்களில் கற்றறிந்து, அநேக இடங்களில் நல்ல பதவிகள் வகித்து ஓரளவு செல்வமும் செல்வாக்கும் பெற்று தற்போது நிறைய ஸாவகாசம் பெற்றுள்ள பென்ஷர்களான பெரியோர்களே இந்த விஷயத்தில் தங்களாலியன்ற பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Wednesday 20 March 2013

ஜாதி அம்சமில்லாத ஸேவை தேவை




நான் சொன்ன அநேக பரோபகாரப் பணிகளுக்குப் பணம் வேண்டும், உழைப்பு வேண்டும். அதோடு மத ஸம்பந்தமான விஷயம் தெரிந்தவர்கள் வேண்டும். அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பஜனை பண்ணத் தெரிந்தவர்கள் மற்றவர்களையும் கூட்டி, பகவந்நாமாவைப் பாடப் பண்ண வேண்டும்.

இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி இருக்கிறது. இந்த கோஷ்டிக்காரர்களே வார வழிபாட்டையும் மற்ற பரோபகார கார்யங்களையும் எடுத்த நடத்த வேண்டும். ச்ரத்தையாக உழைக்க கூடியவர்கள், பணவிஷயத்தில் நாணயமாக இருக்கக் கூடியவர்கள், 'இவர்கள் சுத்தமானவர்கள்' என்று ஸமூஹத்துக்கு நம்பகமாக இருக்கிறவர்கள் ஒரு பத்து பேர் அங்கங்கே சேர்ந்து விட்டால் போதும். ஊர் உலகத்தில் ஒரு குறைவில்லாமல் பொதுநலக் கார்யங்கள் ஜாம் ஜாம் என்று நடந்துவிடும்.

பணியில் சேர்கிறவர்கள், பணியால் பயனடைகிறவர்கள் (beneficiaries) இரண்டிலும் 'ஜாதி'என்ற அம்சமே இருக்கக் கூடாது. பணக்காரன்-ஏழை, படித்தவன்-படிக்காதவன் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்கிற முறையில் இது ஒன்றிலாவது நேராகவோ, மறைமுகவோ 'கம்யூனல் ரெப்ரஸென்டேஷன்' (ஜாதிவாரிப் பிரதிநிதித்வம்) இல்லாமல் கார்யம் நடக்க வேண்டும்.

ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்தான் சண்டை ஜாஸ்தியாகிறது! ஆரியன்-திராவிடன் பேதமில்லை என்று சொல்லி ஸெளஜன்யத்தை உண்டாக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு ஆரம்பித்தால்கூட, உடனே இதற்கு ஹிஸ்டாரிகலாக (சரித்திர பூர்வமாக) , எத்னாலாஜிகலாக (இன-இயல்-ரீதியில்) ஆக்ஷேபணைகள் வந்து ஒரே வாதச் சண்டையாகிறது! ஆனதால் வர்தத்தால் ஒற்றுமையை ஸ்தாபிக்க யத்தனம் செய்யமால், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்றுகூட இல்லாமல், இப்படிப் பல பொதுக் கார்யங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸெளஜன்யமும் உண்டாகிவிடும். 

உடம்பை வளர்த்துக் கொள்வது போல், உள்ளத்தையும் உயர்த்திக்கொள்'



ஜீவனோபாயத்தொழிலை தர்ம உபாயமாக்குக என்று மகாபெரியவா கூறுகிறார்.
!
ஸங்கமாகச் செய்வதோடு தனித்தனியாக அவரவரால் முடிந்த உபகாரங்களைச் செய்ய வேண்டும். ஸர்க்கார் உத்யோகம், கம்பெனி உத்யோகம் என்றிராமல் ஸ்வதந்திரமாக அநேகம் பேர் எதை வருத்தியாக (ஜீவனோபாயத் தொழிலாக) வைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதையே ஸம்பாத்யமில்லாமல், கொஞ்சம் இலவசமாகவும் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முடிகிற தொழில்களில் உத்யோகஸ்தர்களும்கூட ப்ஃரீ ஸர்வீஸ் பண்ண வேண்டும்.

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேந விநோதய சித்தம்

என்று ஆசார்யாள் ('பஜகோவிந்த'த்தில்) சொல்லியிருக்கிறார். அதாவது, 'தனக்கென்று ஏற்பட்ட தொழிலால் என்ன ஸம்பாதிக்கிறாயோ, அதனால் (உடம்பைவளர்த்துக் கொள்வது மட்டுமின்றி, தானதர்மங்கள் பண்ணி) உள்ளத்தையும் உயர்த்திக்கொள்' என்கிறார்.

இது ஒரு ஐடியல் இது அநுஷ்டிக்கப்பட வேண்டியதே. அவரவர் தொழிலே இதில் ஆத்மாபிவ்ருத்திக்குப் பிரயோஜனமாகிறது. ஆனால் இப்போது காலத்தின் கோளாற்றில், அநேகத் தொழில்களிலேயே தவிர்க்க முடியாமல் பாபமும் தோஷமும் வந்து சேருகிறதே! 'ஸோஷல் லைஃபி'ன் எல்லா அம்சங்களிலும் கலிதோஷம் 'கரப்ஷ'னாக (லஞ்ச ஊழலாக) வந்து புகுந்து கொண்டு இப்படி ஆகியிருக்கிறதே!இப்படியாக, ஸம்பாதித்த திரவியத்திலேயே தோஷமும் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டிருக்கிறபோது, இந்த திரவியத்தால் தான தர்மம் செய்துவிட்டால் மட்டும் போதுமா? அதுவே tainted money -யாகவும் (களங்கமுற்ற பணமாகவும்) கொஞ்சமாவது இருக்கிறதே!

ஆசார்யாள் அருள் மனஸோடு, 'உனக்கான தொழிலைப் பண்ணுவதில் ஸம்பாதி; அதிலே தப்பு இல்லை; ஆனால் ஸம்பாதியத்தை ஆத்ம ச்ரேயஸுக்குப் பிரயோஜனமாக்கிக் கொள்' என்றபோது, இப்படி அதிலேயே ஒரு கரப்ஷன் அம்சம் வந்து சேரும் என்று நினைத்திருக்கமாட்டார். இந்த தோஷத்துக்கு எனக்கு ஒரு பரிஹாரந்தான் தோன்றுகிறது. அதாவது அவரவர் தொழிலுக்குரிய ஸம்பாத்யத்தைப் பெறுவதில் தப்பில்லை என்று ஆசார்யாள் சொன்னாலும், இப்போதைய கரப்ஷன் ஸெட்-அப்பில் அவரவரும் கொஞ்சமாவது ஸம்பாத்யமே இல்லாமல், தகுந்த பாத்திரத்துக்காக ஃப்ரீ ஸர்வீஸ் பண்ணுவதுதான் பரிஹாரம் என்று நினைக்கிறேன். 

தொழிலால் ஸம்பாதித்து அப்புறம் அந்த ஸம்பாத்யத்தால் தானதர்மம் பண்ணுவதோடுகூட, தொழிலையே ஸம்பாத்யமில்லாமலும் கொஞ்சம் இலவசமாகச் செய்ய வேண்டும் என்கிறேன். ஒரு தொழிலில் ஏற்படுகிற கரப்ஷன் களங்கத்துக்குப் பிராயச்சித்தமாக அந்தத் தொழிலையே தான் கொஞ்சம் தியாகமாக, பரோபகாரமகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கரப்ஷன் ஸம்பந்தமேயில்லாமல் சுத்தமாகத் தொழில் செய்கிறவர்களும் அதை ஓரளவாவது திரவிய லாப அம்சமே கலக்காமல் உபகாரமாகப் பண்ணினால் அத்தனைக்கத்தனை புண்ணியந்தான்.

ஒரு டாக்டரா? நீ ஃபீஸ் வாங்கிக்கொண்டு வைத்யம் பண்ணுவதும் பரோபகாரம்தான். ஆனால் இதில் உனக்கே ஸ்வயோபகாரமான ஆத்மசுத்தி கிடைக்காது. அதுமட்டுமில்லை தவிர்க்க முடியாமல் சில பேர் 'ஸிக் லீவ்' கேட்கிறபோது, பொய் ஸர்டிஃபிகேட் தரும்படி ஆகியிருக்கலாம். இப்படியே பொய்யாக 'மெடிகல் ஃபிட்னெஸ் ஸர்டிஃபிகேட்'டும் சில பேருக்குக் கொடுத்திருப்பாய். இதனாலெல்லாம் ஆத்மா சுத்தி பெறாதது மட்டுமில்லாமல் அதில் புது அழுக்கும் படிந்திருக்கும். த்யாக ஸேவைதான் இந்த அழுக்கை அலம்பிட முடியும். ஆகையால் தினமும் ஒரு ஏழைக்காவது இனாமாக வைத்யம் பண்ணு. உன் ஜன்மாவில் ஒருவனுக்காவது, வீட்டில் கற்றுக்கொடுக்கக் கூடிய அளவில் பழகிய வைத்ய முறையைக் கற்றுக் கொடு. அவன் அதை முடிந்த வரையில் ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளட்டும்.

யாரப்பா? வக்கீலா? ஸரி. மாஸத்துக்கு ஒரு கேஸாவது தர்ம நியாயமுள்ளதாகப் பார்த்து, தகுந்த பாத்திரத்துக்காக ஃப்ரீயாக நடத்து. அதே மாதிரி ஒரு வியாஜ்யமேனும் கோர்ட்டுக்கு வெளியிலேயே ராஜியாகும்படிப் பண்ணு. வக்கீல் தொழிலில் ஏற்படுகிற தப்புக்களால் உனக்குப் பாபமுண்டாகாமல் தப்பிக்க இப்படிப் பரோபகாரம் பண்ணு. பாபம் போவது மட்டுமின்றி, இந்தமாதிரிச் சில வருஷம் நியமத்துடன் செய்து வந்தாயானால், உனக்கு பப்ளிக்கில் நல்ல பெயர் ஏற்படும். அந்த நல்ல பெயரினாலும் அநேக பொதுநலக் காரியங்களுக்கு உதவி பண்ணிப் புண்யம் ஸம்பாதிக்கலாம்.

ஒரு ஸங்கீத வித்வான் என்றால் தர்மக் கச்சேரி பண்ணி ஒரு பணிக்குப் பணம் வசூலாக உதவலாம். எழுத்தாளனானால் ஸமய ஸ்தாபனங்களுக்கு ஸத் விஷயங்கள் கொஞ்சம் இலவசமாக எழுதிக் கொடுக்கலாம். புஸ்தக பப்ளிஷர் என்றால் ஏழை மாணவர்களுக்குப் புஸ்தகங்கள் இலவசமாகத் தரலாம்; அல்லது உத்தமமான க்ரதங்கள் ஒன்றிரண்டையாவது (ஃப்ரீயாக இல்லாவிட்டாலும்) அடக்க விலைக்கு விற்கலாம். ஸத் விஷயமாக தூண்டு பிரசுரங்கள் இனாமாகவே அச்சிட்டு விநியோகிக்கலாம். இப்படி எந்தத் தொழிலானாலும் அதை (vritti) வ்ருத்தி க்காக இல்லாமல் ஆத்ம அபிவ்ருத்தி (vriddhi) க்காகவும் ஓரளவு ப்ரயோஜனப்படுத்த வேண்டும்.

''நான் ரொம்பவும் ஸாதாரணப்பட்ட டைப்பிஸ்ட் ஆச்சே!'' என்கிறாயா?பரவாயில்லை, அதிகமாகவே பரோபகாரம் பண்ண முடியும். உத்யோகமில்லாமல் எத்தனை ஏழைப் பசங்கள் திண்டாடுகிறார்கள்? அவர்களில் ஆறு மாஸத்துக்கு ஒரு பையன் வீதம் ஓரளவு 'ஒர்கிங் நாலெட்ஜ்' பெறுகிற மாதிரி டைப் அடிக்க ட்ரெயின் பண்ணு. இந்த உதவியை இனாமகப் பண்ணு. இதனால் அவர்களுக்கு ஆயுஸ்காலம் பூராவுக்கும் ஜீவனோபாயம் கிடைக்க வழி ஏற்படும். அவர்களுடைய நன்றியும் வாழ்த்தும் உன்னை இம்மையிலும் மறுமையிலும் ரக்ஷிக்கும்.

இப்படி அவரவரும் ஏதாவது ஒரு தினுஸில் தனித்த முறையில் தங்கள் தொழிலைக்கொண்டு உபகாரம் பண்ண முடியும். கார்யத்தால், திரவியத்தால் ஒன்றுமே பண்ண முடியாவிட்டாலும், குறைந்த பக்ஷம் திருமூலர் சொன்னாற்போல், ''யாவர்க்கும் இன்னுரை'' என்றபடி ப்ரியமாகப் பேசிக் கஷ்டத்தில் ஆறுதல் தருகிற உதவியையாவது பண்ணுங்கள். 

Tuesday 19 March 2013

கூட்டாக பொதுத்தொண்டு செய்வதே உத்தமம்




செல்வந்தரிடம் நன்கொடை கேட்டு ஏன் தொல்லை பண்ணக்கூடாது.,நன்கொடை கேட்டு போவதில் பெரியவா கூறும் 'ட்ரிக்கு'கள்., கூட்டாக பொதுத்தொண்டு செய்வதே உத்தமம் போன்றவற்றைப் பற்றி மஹா பெரியவா 

செலவுக்கு என்ன செய்வதென்றால், பணக்காரனைத் தான் நம்பிக் கொண்டிருப்பது என்றில்லாமல், அவனவனும் ஒரு காலணாவாவது கொடுக்க வேண்டும். பணக்காரனும் சரீரத்தால் உழைக்க வேண்டும்; ஏழையும் திரவியத்தால் துளி உதவி பண்ண வேண்டும். இதுதான் நிஜமான த்யாகம். பணக்காரனை அதிகப் பணம் கேட்கவே கூடாது என்று எனக்கு அபிப்ராயம். காரணம் சொல்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் பணக்காரன் பாடுதான் ரொம்ப கஷ்டம் என்று தோன்றுகிறது. அந்தஸ்து (status) , பேர் இவற்றுக்காக அவன் அநேக கார்யங்களை இஷ்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்யவேண்டியதாக இருக்கிறது. இது ஒவ்வொன்றுக்காகவும் தண்டம் அழவேண்டியிருக்கிறது. பெரிய மநுஷன் என்று தெரிய வேண்டுமானால் அதற்கு அநேக 'கிளப்'களில் மெம்பராக வேண்டும். அதற்காக 'ஸப்ஸ்கிருப்ஷன்' செலவுகள். அப்புறம் ஏதாவது இரண்டு ஸ்கூல், காலேஜிலாவது எண்டோமென்ட் வைத்து ப்ரைஸ் கொடுக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கப்புறம் டைட்டில், கிய்ட்டில் வாங்குவதற்காக (நேரே அப்படித் தெரியுமால்) பல தினுஸுகளில் செலவு செய்ய வேண்டும். கார், பங்களா டிரஸ், பொழுதுபோக்குச் செலவுகள் வேறு. இவனுடைய கம்பெனியோ பண்ணையோ நன்றாக நடக்க வேண்டுமே, அதை உத்தேசித்து வெளியில் சொல்லக் கூடியதும் சொல்லக் கூடாததுமாகப் பலவிதங்களில் செலவு செய்ய வேண்டும். இது ஓரளவுக்குக் கடமை மாதிரியே ஆகிவிடுகிறது. 

இதெல்லாம் போதாது என்று (அரசியல்) கட்சிகள் வேறு டொனேஷனுக்கு வருகின்றன. அதிலும் இவனுக்கு வாஸ்தவத்திலேயே ஒரு கட்சியிடந்தான் அபிமானம், அது இருந்தால்தான் தனக்கு நல்லது என்று தோன்றினால்கூட அதற்கு மட்டும் டொனேஷன் கொடுப்பதோடு போக மாட்டேன் என்கிறது. இவனுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஒரு ஸமயத்தில் யாரிடம் நிர்வாஹம் இருக்கிறதோ, அவர்கள் இவன் தலையில் கை வைக்காமலிருப்பதற்காக அந்தக் கட்சிக்கும் நிறையக் கொடுத்துத் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது! இன்னும் அகத்தில் கல்யாணம், கார்த்திகை, ஃபீஸ்ட், அது இது என்றும் வாரிவிட வேண்டியிருக்கிறது. வரிகள் வேறு! செலவு செய்வதற்கும், தானம் ( gift ) பண்ணுவதற்கும் கூட வரி கொடுக்க வேண்டியிருக்கிறது. 

இந்த நிலையில் பாவம், மனஸார இவன் எந்த நல பணிகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறானோ, அதற்குத்தான் ரொம்பக் குறைச்சலாகக் கொடுக்கும்படியாக ஆகிறது. பேர், புகழ், மாதிரியான ஸமாசாரங்கள், ''பிஸினஸ் இன்டரஸ்ட்'' முதலானதுகள் அத்யாவசியமாகி விடுகின்றன. இப்படி இருக்க வேண்டாமே!' என்று நாம் சொல்லிப் பிரயோஜனமில்லை. நாமே அந்தப் பணக்காரனாக இருந்தாலும் இப்படித்தான் செய்வோம். இம்மாதிரி வேண்டாததற்குச் செலவழித்துவிட்டு, வேண்டியதற்குச் செலவு செய்ய முடியாதபோது, அவனுக்கே guilty -யாகத் தான் இருக்கும். 'இந்த ஸமயத்தில் நாம் வேறு போய் அவனிடம் யாசகம் கேட்டு அவனைக் கஷ்டப்படுத்துவானேன்? தனக்குப் பிடித்த கார்யத்துக்கே மனஸாரக் கொடுக்க முடியாத பரிதாபமான ஸ்திதியில் அவனைக் கொண்டுபோய் நாம் வைப்பானேன்?' என்று எனக்குத் தோன்றுகிறது.

ஸமூஹக் கார்யங்கள் என்றால் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் இந்தக் கார்யங்களுக்கு பேட்ரனாக இருக்கக்கூடிய பணக்காரர்கள் யார் என்று பார்த்தால் ஒவ்வொரு ஊர் அல்லது பேட்டையிலும் ஒரு பத்து, பன்னிரண்டு பேர்தான் இருப்பார்கள். இவர்களிடமே ஒவ்வொரு கார்யத்துக்கும் ரசீதுப் புஸ்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினால் அவர்களுந்தான் என்ன செய்வார்கள்? ஒன்று, வேண்டா வெறுப்பாகக் கொடுப்பார்கள். அல்லது விருப்பம் இருந்தும்கூட நிறையக் கொடுக்க முடியவில்லையே என்று துக்கப்படுவார்கள்.

நமக்கும் யோசனை வருகிறது; அந்தப் பணம் கணக்கில் வந்ததா, வராததா; கணக்கில் வராதது என்றால் அந்த மாதிரிப் பணத்தை தர்மத்துக்குப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாமா என்றெல்லாம் யோசனை வருகிறது.

ஆனதால், பணக்காரர்களை நம்பித்தான் ஸோஷல் ஸர்வீஸ் என்று வைத்துக் கொள்ளவே கூடாது. அவர்களாகவே காதில் விழுந்து கூப்பிட்டுக் கொடுத்தால் தாராளமாகவே வாங்கிக் கொள்ளலாம். நாமாகப் போய் பிடுங்கி எடுக்கக் கூடாது என்று தோன்றுகிறது.

இதில் இன்னொன்றுகூட. சில பணக்காரர்களே அதிகப் பங்கு செலவு ஏற்கிறார்கள் என்றால் அதனாலேயே அவர்களுக்கு ஸங்கத்தில் அதிக 'ரைட்'உண்டாகிவிடும். அவர்களுக்கு மற்றவர்கள் பவ்யப்படும்படியாக ஆகும். எதிலும் அவர்கள் சொல்லுவதுதான் முடிவு என்றாகிவிடும். இது கூடாது.

பொதுவாகவே பணத்தின் 'டச்' (ஸ்பரிசம்) வந்து விட்டால் அதோடு ஒரு காரியத்தில் அநேகக் கெடுதல்களும் வந்துவிடும். பொதுத்தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நல்ல ஆதரவு திரவிய ஸஹாயமாகவும் நம் கார்யத்துக்குக் கிடைத்தால்கூட அதனால் over-enthusiastic ஆகி (அதீத உத்ஸாஹம் அடைந்து) , இப்போது இந்தியா கவர்மென்ட் செய்கிற மாதிரி ambitious planning (அதி ஆசைத் திட்டம்) போட்டுப் நிறையப் பணம் 'கலெக்ட்'பண்ண ஆரம்பிக்கக் கூடாது. இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. இதனாலே பரோபகாரம் என்கிற அன்பு எண்ணத்தையும், அதில் அங்கமாகச் செய்கிற தேவாலய கைங்கர்யங்களின் பக்தி எண்ணத்தையுங்கூட 'வசூல் எண்ணம்'முழுங்கிவிடும். எப்போது பார்த்தாலும் ரசீது புஸ்தகமும் கையுமாக அலைவதும், 'பேப்பர்காரர்களைப் பிடித்து அப்பீல் பண்ணலாமா, அட்வர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா?'என்பதே சிந்தையாகத் தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும். 

நிறையப் பணம் சேர்ந்து அதைக் கையாள வேண்டியிருக்கும்போது நாமே எப்படி மாறிப் போய்விடுவோமோ என்ற பயம் ஸதாவும் இருக்கணும். அதுவுமில்லாமல், ரொம்பவும் பணம் சேர்ந்தால் ஊரிலிருப்பவர்களுக்கும் அது ஸரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற ஸந்தேஹம் எழும்பும். இதோடுகூட, சற்றுமுன் சொன்ன மாதிரி, இஷ்டமில்லாதவனையும் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதும், இப்படி வாங்கிவிட்டதால் அப்புறம் அவனிடம் பவ்யப்பட்டு நிற்பதும் நம் பணியையே அசுத்தம் செய்துவிடும். ஆனதால் எந்த நல்ல காரியமானாலும் 'அதி'யாக அதைக் கொண்டுபோய்விடாமல் அவசியத்தோடு நிறுத்திக்கொண்டு, செட்டும் கட்டும் சிக்கனமுமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வஹிக்க வேண்டும்.

பொதுத் தொண்டுக்கு மூல பலம் பணம் இல்லை, ஐக்யப்பட்ட மனம்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். பணம் கொடுத்தவன் என்று எவனையும் பிரகடனப்படுத்தி, அதனால் அவனுடைய புண்யபலன் போய்விடும்படியாகச் செய்து விடக்கூடாது. திருப்பூந்துறை அய்யனார் கோயிலில் குளம் வெட்டினபோது பணம் வசூலித்து, கூலி கொடுத்து, 'காமகோடி'பத்திரிகையிலும் நன்கொடைக்காரர்களின் பெயரைப் போட்டு விட்டார்கள். அடுத்த 'இஷ்யூ'விலேயே நான் கொட்டை எழுத்தில், ''இனிமேல் இப்படிப் பண பலத்தில் பண்ணாமல், ஆட்களின் அன்பு பலத்திலேயே பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் போட்டோம்'' என்று நாசூக்காக மன்னிப்பு, பச்சாத்தாபம் தெரிவிக்கிற மாதிரி 'பப்ளிஷ்' பண்ண வைத்தேன்.

திரவியம், தேஹம் இரண்டாலும்

கால் காசு ஐவேஜியில்லாமல்தான் சிவன் ஸமீபத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அவர் பெயரிலேயே அன்னதான என்பது ஒட்டிக்கொள்கிற மாதிரி, மஹா க்ஷேத்திரங்களில் நடந்த மஹோத்ஸவங்களிலெல்லாம் லக்ஷக்கணக்கான ஜனங்களுக்கு முட்ட முட்ட விருந்துச் சாப்பாடு போட்டிருக்கிறார். பரம த்யாகியாக இருந்து கொண்டு, கட்டின துண்டோடு ஊர் ஊராகப் போய் இவர் தனிகர்களை, மிராஸ்தார்களை, பண்ணையார்களைப் பார்த்து, ''இத்தனை மூட்டை அரிசி அனுப்பு; இத்தனை தூக்கு புளி அனுப்பு'' என்று சொன்னால் அதை ஒரு பாக்யமாக, ஆக்ஞையாக நினைத்து அவர்களும் அனுப்பி விடுவார்கள். உத்ஸவத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் வயிறார அன்னதானம் பண்ணி விடுவார். ஆனால் அவர் தாம் மாத்திரம் இந்த விருந்துச் சாப்பாட்டைத் தொடவே மாட்டார். ஏதோ கொஞ்சம் பழையதைததான நாலு வாய் உருட்டிப் போட்டுக் கொள்வார். அதனால்தான் அவர் சாமான்களைக் கொடுத்த தனிகர்களுக்கு பவ்யப்படாமல் இருக்க முடிந்தது. அவர்கள் இவரிடம் கை கட்டிக்கொண்டு நின்றார்கள். பரோபகாரம் என்று வரும்போது பணத்தைக் காட்டி ஒரு ஸுபீரியாரிடி ஏற்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்பவும் அவச்யம் என்பதற்காகச் சொன்னேன்.

பணக்காரர்கள் பரம த்யாகிகளாக, trustees (தர்மகர்த்தாக்கள்) மாதிரி, தங்கள் பணத்தை ஸமூஹக் காரியங்களுக்காகத்தான் ப்ரயோஜனப்படுத்த வேண்டும் என்பதே நம் தர்மம். மநு, திருவள்ளுவர் நாளிலிருந்து காந்திவரை இப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். இது வாஸ்தவத்தில் நடந்தால் கம்யூனிஸம், ரெவல்யூஷன் எதுவுமே இல்லாமல் லோகமெல்லாம் ஸந்தோஷமாக சாந்தமாக இருக்கும். இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போகவில்லை. ஆனாலும் அவர்கள் தாங்களாக தர்ம சிந்தையை வளர்த்துக்கொண்டு, பிரியப்பட்டு உபகாரம் செய்யத்தான் நாம் தூண்டுதலாகப் பிரசாரம் செய்ய வேண்டுமே தவிர அவர்களைப் போய் நிர்ப்பந்தப்படுத்த வேண்டாம். என்று தோன்றியதால் சொன்னேன். பாதி ஸீரியஸாகவும் பாதி விளையாட்டாகவும் சொன்னேன்.

இன்னொன்றுகூட நான் விளையாட்டாகச் சொல்வதுண்டு. பொதுக் கார்யம் செய்கிறவர்கள் இப்போது முதலில் இன்னின்னார் நிறைய உதவக்கூடும் என்று 'லிஸ்ட்' போட்டுக்கொண்டு அந்த வரிசைப்படி கலெக்ஷ்னுக்குப் போகிறார்கள் அல்லவா? இதில் அநேகமாக ஏமாற்றங்கள்தான் உண்டாகின்றன. நாம் ரொம்பவும் தாரளாமாகக் கொடுப்பான் என்று நினைக்கிறவனுக்கு ஏதாவது ச்ரமமிருக்கிறது. அல்லது மனஸில்லை. கையை விரித்துவிடுகிறான். அல்லது மூக்கால் அழுதுகொண்டு சுஷ்கமாகக் கொடுக்கிறான். உடனே நமக்குப் பணியிலேயே உத்ஸாஹம் குறைந்துவிடுகிறது. அந்த ஆசாமியைத் தூற்ற ஆரம்பிக்கிறோம். 

இதற்குப் பதிலாக நான் என்ன சொல்கிறேன் என்றால், யாரார் நன்கொடை தர மாட்டார்கள் என்று தோன்றுகிறதோ அவர்களை ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள், முதலில் இப்படிப்பட்டவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்கள் கையை விரித்து விட்டால் அதற்காக நமக்கு மனஸ் தளரப் போவதில்லை. ஏனென்றால் இது நாமே எதிர்பார்த்தது தானே? மாறாக அவர்கள் ஏதோ கொடுத்தாலும் கொடுக்கலாம்,

சில சமயம் அள்ளியும் கொடுக்கலாம். இப்படிக் கொடுக்க நேரிட்டால் நமக்கு உத்ஸாஹம் கரைகடந்துவிடும்! பணியில் இன்னும் தீவிரமாக இறங்குவோம். இப்படி என் வார்த்தைப்படி, கொடுக்காமல் இருக்கக்கூடியவர்களின் லிஸ்டைப் போட்டுக்கொண்டு முதலில் அவர்களிடம் வசூலுக்குப் போய், அப்புறம் கொடுக்கக் கூடியவர்களைப் பார்த்தவர்கள், பிற்பாடு என்னிடம் வந்து 'ஸைகலாஜிக'லாக இதில் தங்களுக்கு ரொம்பவும் த்ருப்தியும், உத்ஸாஹமும் உண்டானதாகச் சொல்லியிருக்கிறார்கள். யாசகக் கலையில் இப்படிப் பல 'ட்ரிக்கு'கள் இருக்கின்றன!

நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஏழையோ, பாழையோ, ஸமூஹத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரு காலணா அரையணாவாவது போட்டு எல்லோருமாகச் சேர்ந்தே பொதுக் காரியங்களுக்கான செலவுகளை ஏற்க வேண்டும். பணக்காரன் பணம் மட்டும் கொடுத்துவிட்டு, சரீரத்தால் உழைக்காமலிருந்தான் என்று இருக்கக்கூடாது; ஏழை சரீரத்தால் மட்டும் உழைத்து விட்டுப் பணம் கொடுக்காமலிருந்தான் என்றும் இருக்கக் கூடாது. பணக்காரன் ரூபாய் தருவதும், ஏழை சரீர கைங்கர்யம் செய்வதும் பெரிய த்யாகமில்லை. பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும்; ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக காலணா டொனேஷன் கொடுக்க வேண்டும். அதுதான் பெரிசு. ஸோஷல் ஸர்வீஸ் பண்ணும்போதே பண்ணுகிறவர்கள் மனஸில் உயர்ந்து வளர வேண்டுமானால் செலவு, உழைப்பு இரண்டிலுமே ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்க வேண்டும். ச்ரமதானத்துக்கு பலஹீனர்கள் மட்டும் எக்ஸெப்ஷன் (விதிவிலக்கு) .
எனக்கு தெரிந்த ஒரு ப்ராம்மணர். இரண்டே இரண்டு தென்ன மரம் உள்ள பூமிதான் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அதில் தானே மண்வெட்டி பிடித்து வேலை பண்ணினார். சாஸ்தரப் பிரகாரம் பண்ண வேண்டியது எதையும் இதற்காக விட்டுவிடவில்லை. காலையில் எழுந்து அக்னி ஹோத்ரம், பூஜை எல்லாம் செய்வார். அப்புறம் மண்வெட்டியும் கையுமாகப் போய் வேலை ஆரம்பித்து விடுவார். அந்த வேலை முடிந்த அப்புறம் மாத்யான்ஹிக ஸ்நானம் செய்து, பாக்கி கர்மாநுஷ்டானங்களும் பண்ணிவிட்டுச் சாப்பிடுவார். இப்படி தன் கையாலேயே உழைத்து இரட்டைத் தென்ன மர பூமியைத் தென்னந் தோப்பாகவே மாற்றிவிட்டார் பசங்களுக்கு இப்படி நல்ல பூ ஸ்திதி தேடி வைத்தார். நல்ல விருத்தாப்யம் வந்த பிற்பாடும், எண்பது எண்பத்தைந்து வயஸு வரைக்கும்கூடத் தோப்புக்குத் தினமும் போய்த் தன் கையால் வெட்டி கொத்தி வேலை செய்வதை அவர் நிறுத்தவில்லை. இப்போது திரவிய ஸெனகர்யம் ஏற்பட்டு, இவர் உழைத்துத்தான் ஆக வேண்டும் என்று இல்லாவிட்டாலுங்கூட, ''இந்தக் கார்யம்தானே நமக்கு இத்தனை அபிவ்ருத்தியைத் தந்தது? இதை விடப்படாது'' என்று சரீர உழைப்பில் பக்தி விச்வாஸம் வைத்து சாகிறவரை பண்ணி வந்தார்.

அவர் சொந்த நிலத்தில் வேலை செய்து அடைந்த ஸந்தோஷத்தைவிட ஜாஸ்தியாகவே பொதுத்தொண்டுகளில் சரீரத்தை சிரமப்படுத்தி வேலை பண்ணுவதில் நிறைவு கிடைக்கும். பண்ணிப் பார்த்தால் தெரியும்.

கொஞ்ச நேரமாவது குளம் வெட்டுவது, ஆலயத்தில் நந்தவனம் வைப்பது என்கிற மாதிரி ஏதோ ஒன்றில் தேஹத்தை ஈடுபடுத்த வேண்டும். கொஞ்சம் காசாவது இம்மாதிரி கார்யங்களுக்குச் செலவழிக்க வேண்டும். ஏழை வித்யார்த்திக்கு ஒரு பலப்பம் வாங்கிக் கொடுக்கலாம்; நாலு பிச்சைகாரர்களுக்குக் கூழ் வார்க்கலாம்; மோர்த் தண்ணியாவது நம் செலவில் கொடுக்கலாம்.

எந்த ஆஃபீஸானாலும் ஃபாக்டரியானாலும் வாரத்தில் ஒருநாள் லீவ் இருக்கிறதல்லவா? பள்ளிக்கூடம், கோர்ட் முதலியவற்றில் வாரத்துக்கு இரண்டு நாள் லீவ்கூட இருக்கிறது. இந்த லீவ் நாட்களெல்லாம் பொதுத் தொண்டுக்கு என்றே பகவான் கொடுத்திருப்பது என்று நினைத்து, கூட்டாகச் சேர்ந்து ஸேவை செய்யவேண்டும். மனஸ் மட்டும் இருந்துவிட்டால், செய்வதற்கு எத்தனையோ பணிகள் இருக்கின்றன.

Monday 18 March 2013

வார வழிபாடு



'வார வழிபாட்டுச் சங்கம்' என்று ஊருக்கு ஊர் இருக்க வேண்டும் என்று நான் ஓயாமல் சொல்லி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாரத்தில் ஒருநாள் ஜனங்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கோயிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதர மதஸ்தர்கள் அத்தனைபேரும் இதை யாரும் சொல்லாமலே தாங்களாகச் செய்து வருகிறார்கள். இதன் ப்ரத்யக்ஷ சக்தியால்தான் அவர்களுக்குப் புது ஸ்வதந்திர தேசமே முதற்கொண்டு கிடைக்கிறது! நமக்கோ லோகம் முழுக்க ஏற்கனவே இருந்த கெனரவமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது!

நம் ஜனங்கள் எல்லாரும் வாரத்தில் ஒரு நாளாவது ஒன்று சேர்ந்து தங்கள் கோணா மாணாவையெல்லாம் விட்டுவிட்டு, பகவானிடம் கொஞ்சம் மனஸைக் கரைத்தால்தான் இந்த தேசத்துக்கு ஏதாவது நல்லது பிறக்க முடியும் என்றுதான் 'வார வழிபாட்டுச் சங்கம்' நிறுவச் சொல்லி அநேக இடங்களில் ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களே மேலே சொன்ன மற்ற பரோபகார, ஜீவாத்ம கைங்கர்யப் பணிகளையும் எடுத்த நடத்த வேண்டும். தனி ஆர்கனைஸேஷன் எதுவும் வேண்டாம்.

மாயவரத்திலிருக்கிற திருப்பாவை-திருவெம்பாவைக் குழு இம்மாதிரி அநேகப் பணிகளைத் திட்டம் போட்டுச் செய்து வருகிறது. அதன் முக்ய நோக்கம் பாவை மஹாநாடு நடத்துவதும், பாவைப் புஸ்தகங்களைப் பள்ளிக்கூடப் பசங்களுக்கு ஃப்ரீயாக டிஸ்ட்ரிப்யூட் செய்து பரீ¬க்ஷ பண்ணி, ப்ரைஸ் தருவதும்தான். இவற்றோடுகூட (1) ஜெயில் கைதிகளுக்கு பக்தி நூல்கள் கொடுப்பது;அவர்களை பஜனை பண்ண வைப்பது, (2) ஆஸ்பத்திரி நோயாளிகளுக்குப் பிரஸாதமும், ஸ்தோத்ரப் புஸ்தகங்களும் விநியோகிப்பது, (3) ஸத்ஸங்கம் யார் ஏற்படுத்தித் தெரிவித்தாலும் அவர்களுக்கு மத ஸம்பந்தமான பிரசுரங்கள் அனுப்புவது, (4) அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் பண்ணுவது, (5) வெட்ட வெளியில் கோயிலில்லாமல் இருக்கிற மூர்த்திகளுக்கும், இடிந்து பாழான கோயிலிலுள்ள மூர்த்திகளுக்கும் கொட்டகை போட்டு, அங்கே, பூஜைக்கு ஏற்பாடு பண்ண முடியாவிட்டாலும், ஒரு அகலையாவது ஏற்றி வைக்கப் பண்ணுவது, (6) கோயில் நந்தவனங்களைப் பராமரிப்பது, (7) பசுக்களுக்கு மேய்ச்சல் திடல் வளர்ப்பது;அதுகள் சொறிந்து கொள்ளக் கல் நாட்டுவது, (8) சுமைதாங்கி நாட்டுவது, (9) வார வழிபாடு என்கிறனே, அதன்படி பிரதிவாரமும் ஒரு கிழமையில் பகவந் நாம பஜனையுடன் உள்ளூரிலோ, வெளியூரிலோ அருகேயுள்ள ஒரு கோயிலுக்குப் போய்ப் பிரதக்ஷிணம் பண்ணி கோபுர வாசலில் கொஞ்சம் கொஞ்சம் நாழி மெனனம், த்யானம், நாம ஸ்மரணம், ஸங்கீர்த்தனம், பிரவசனம் முதலியன பண்ணுவது - என்று பல காரியங்களை செய்கிறார்கள்.

''வாரத்தில் ஒரு நாள் கூட்டு வழிபாடு, வாரத்தில் ஒரு நாள் பொதுப்பணி என்றால் எப்படி முடியும்?ஒரு நாள் தானே 'லீவ்'இருக்கிறது?'' என்று கேட்பீர்கள். அந்த ஒரு நாளிலேயேதான் இரண்டையும் சேர்த்துச் செய்யச் சொல்கிறேன். தெய்வப்பணி, ஸமூஹப்பணி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்ய வேண்டும்.

முதலில் கோவில் வாசலில் எல்லா ஜனங்களும் சேர்ந்து வழிபட்டு, அத்தனை பேரும் அந்த ஒரே பராசக்தியின் குழந்தைகளாகச் சேர்ந்து பகவந் நாமத்துடனயே கோவிலைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போய்க் குளம் வெட்டுவதையோ, ரோடு போடுவதையோ, நந்தவனம் வளர்ப்பதையோ செய்ய வேண்டும். வேலையெல்லாம் முடிந்த பின்னும் கோவிலுக்கே திரும்பி வந்து, ''உன் க்ருபையால் இன்றைக்கு கொஞ்சம் பாபத்தைக் கழுவிக் கொள்ள முடிந்தது;சரீரம் எடுத்ததற்குப் பயனாக ஓர் உபகாரம் பண்ண முடிந்தது''என்று நமஸ்காரம் செய்ய வேண்டும். கொஞ்சம் பஜனை - ஒரு பத்து நிமிஷம் இருந்தால் கூடப் போதும் - கொஞ்சம் உபந்யாஸம் நடத்தி விட்டு எல்லாரும் கலைய வேண்டும். அறுபத்திமூவர் அல்லது ஆழ்வாராதிகள் அல்லது பக்த விஜயத்தில் வரும் மஹான்கள் இவர்களைப் பற்றிய உபந்யாஸமாக இருந்தால், நம் மாதிரி மனிதர்களாக இருந்தவர்களே எப்படியெல்லாம் த்யாகத்தாலும், ப்ரேமையாலும் தெய்வமாக உயர்ந்திருக்கிறார்கள் என்று மனஸில் ஆழப் பதியும்.

Saturday 16 March 2013

குளம் வெட்டும் பணி - மஹா பெரியவா



நானே க்ராமம் க்ராமமாகப் போய் குளம் வெட்டுகிற காரியங்களை emphasize செய்தபோது, நல்ல response இருந்தது. அதுவும், இவற்றில் குளம் வெட்டுகிற கைங்கர்யத்தைப் பார்க்கும்போது எனக்கே ரொம்ப நிறைவாக இருந்தது. கூலிக்கு வேலையாக இல்லாமல் அன்புப் பணியாக இது நடக்க வேண்டும் என்றுதான் ஏற்பாடு. ஆனால் ரொம்பவும் ஏழைகளாக இருக்கப்பட்ட குடியான ஜனங்களுக்குச் சாப்பாடு போடுவது என்று வைத்திருந்தோம். இருந்தாலும், அநேக இடங்களில் அந்தப் பரம ஏழைகள்கூடத் தாங்களே சோறு கட்டிக் கொண்டுவந்து உத்ஸாஹத்தோடு குளம் வெட்டியதைப் பார்க்கிறபோது, 'நம் தேச ஏழைகளுக்கு இன்னம் நல்ல பண்புகள் போகவில்லை; நாம்தான் அதை ஸரியாகக் கார்யத்தில் கொண்டு வரவில்லை' என்று தெரிந்தது. ரதோத்ஸவம் மாதிரி, பெரிய பெரிய மிராஸ்தாரிலிருந்து அந்த மிராஸில் கடைசியாக நிற்கிற பண்ணையாள் வரையில், ச்ரௌதிகளின் பத்தினியிலிருந்து புல்லுக் கட்டுக்காரி வரையில் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து பூர்த்த தர்மம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ''அப்புறம் நடக்கிற பரோபகாரம் இருக்கட்டும்; இப்போது இப்படி ஸமூஹம் முழுக்க ஐக்யமாகச் சேர்ந்திருக்கிறதே, இதுவே போதும்; என்று இருந்தது. 

ஒரு தடவை நல்ல பௌர்ணமி ராத்திரி. அந்த நிலா வெளிச்சத்திலே மாயவரத்துக்குக் கிட்டே இப்படித்தான் ஸகல ஜனங்களும் ஒரு மனஸாகச் சேர்ந்து குளம் வெட்டினார்கள். நானே போய்க் கூட இருந்து பார்த்துக் கொண்டேன். வெட்டுவது ஜில்லென்று குளம்; சந்திரிகையும் ஜில்லென்று வர்ஷித்துக் கொண்டிருந்தது;தொண்டு ரூபமாக அத்தனை உள்ளங்களும் ஜில்லென்று அன்பை வர்ஷித்துக் கொண்டிருந்தன. இப்போது நினைத்தாலும் நெஞ்சு குளிர்கிறது. அப்புறம் நான் நூறாயிரம் கார்யத்தை வைத்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றப்போனதில் அவர்களுக்கு உத்ஸாஹம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. இதை விட்டு விட்டுப் போனது என் தப்புத்தான்.

தஞ்சாவூர் ஜில்லாவில் மாத்திரம் இரண்டாயிரம் ஸங்கங்கள் போல் நிறுவி, ஒவ்வொன்றுக்கும் ஒரு முத்திராதிகாரிகளையும் உப முத்திராதிகாரியையும் தொண்டர்களையும் நியமனம் பண்ணியிருந்தோம். தாலுகா கமிட்டி, கோட்டகக் கமிட்டி, க்ராமச் சங்கம் என்று இதை மூன்றாகப் பிரித்திருந்தோம். (நாலு க்ராமம் சேர்ந்து ஒரு கோஷ்டம், அல்லது கோட்டகம் என்று வைத்திருந்தோம்) பட்டணங்களில் தெருவுக்கு ஒரு முத்திராதிகாரிகூடப் போட்டோம். அநேகமாக தஞ்சாவூர் ஜில்லா க்ராமங்களில் எல்லாம் மடத்துக்கென்றே பட்டயமான்யம் என்று ஒரு துண்டு நிலம் இருக்கும். அவற்றின் வருமானத்தை எல்லாம் முத்திராதிகாரிகளிடமே ஒப்படைத்து இந்த ஜீவாத்ம கைங்கர்ய தர்மங்களைப் பண்ணச் செய்தோம். சுமார் 5000 தொண்டர்கள் சேர்ந்து, ரொம்ப ஈடுபாட்டோடு பணிகள் செய்து வந்தார்கள். ஸ¨ர்யோதயத்திலிருந்து ஸ¨ர்யாஸ்தமனம் வரை, பௌர்ணமியானால் ராத்திரி பூராவும் ஊர்ஜனங்கள் எல்லாரும் ஏக மனஸாக பகவந் நாமாவைச் சொல்லிக் கொண்டு குளம் வெட்டியது இப்போது கூடக் கண் முன்னால் நிற்கிறது.

ஒவ்வொரு க்ராமத்திலும் இருக்கிறவர்கள் ஒன்று சேர்ந்தது மட்டுமில்லை. நாலு நாலு க்ராம ஜனங்களாகச் சேர்ந்து ஒரு வருஷம் ஒரு க்ராமத்தில் குளம் வெட்ட வேண்டும் இருக்கிற குளத்தை தூர் வார வேண்டும்; அடுத்த வருஷம் இவர்கள் அந்த நாலில் இன்னொரு க்ராமத்தில் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்;அதற்கடுத்த வருஷம் மூன்றாவது க்ராமத்தில், அதற்கும் அடுத்த வருஷத்தில் நாலாவது க்ராமத்தில் பண்ண வேண்டும் என்று வைத்ததால் கோட்டக ஜனங்களுக்குள்ளே ஒற்றுமை, ஒத்துழைப்பு உண்டானதோடு, அது தாற்கலிகமாய் இருந்து பிசுபிசுத்து விடாமல், நாலு வருஷமாவது உயிரோடு நீடித்து வந்தது. தஞ்சாவூர் ஜில்லாவில் நாலு ஐந்து மாஸம் ஜலம் இருக்காதாதலால் 'காதம்' என்கிற இந்தக் குளம் வெட்டுகிற பணிக்கு நிறைய அவசியம் உண்டு. சேரியிலும் வெட்ட வேண்டும், இன்னும் ஜனங்களுக்கு என்றே இல்லாமல் ஆடு மாடுகளாக்காகவும் ஊருக்கு வெளியில் மேய்ச்சல் பூமியில் வெட்ட வேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு பண்ணி அப்படியே நடந்து வந்தது. வெயிலில் கஷ்டப்படுகிற வாயில்லா ஜீவன்களுக்குத் தண்ணீர் கைகங்கர்யம் செய்வது உத்தமமான தர்மம்.

சாஸ்திரத்தில், குளிக்கப் போகிற ஒவ்வொருவனும் குளத்திலிருந்து நாலு கை மண் அள்ளிப்போட்டு விட்டுக் குளிக்க வேண்டும் என்று ஸ¨க்ஷ்மமாகச் சொல்லியிருக்கிற ஸ்வல்ப தர்மத்தைப் பின்பற்றினால் ஜலக் கஷ்டம் எவ்வளவோ குறையும்.

கோனேரிராஜபுரத்தில் ஒரு ப்ராம்மண குடும்பம். அவர்கள் எங்கே குளம் வெட்டினாலும் அதற்குப் பாதிப் பணம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு கண்டிஷன் சொல்வார்கள். அதாவது, குளத்துக்கு ஒரு பக்கம் படித்துறை கட்டாமல், நிலத்தையே ஜல மட்டம் வரை சரித்துவிட வேண்டும் என்பார்கள். ஏனென்றால், ஆடு மாடுகளுக்குப் படிகளில் ஸெனகர்யமாக இறங்கிவந்து நின்று ஜலம் குடிக்கத் தெரியாது. எனக்கு ஆசை, ஹரிஜனங்களும் குடியான ஜனங்களும் நம்ம மடத்துப் பிரதிநிதிகளாகக் கோட்டகம் தோறும் கால்நடைகளுக்கென்று குளம் வெட்டவேண்டும் என்று.

பட்டுக்கோட்டை தாலுகா தவிர ஜில்லா முழுக்க இப்படி நிறையச் செய்தோம். பட்டுக்கோட்டையில் ஒவ்வொரு வீடுமே ஒரு காடாக இருக்கும். இடுப்பளவு வெட்டினாலே ஜலமும் வந்தவிடும். ஒரு பண்ணையார் வீடு என்றால் பண்ணையாள் வீடு உள்பட எல்லாம் அந்த வேலிக்குள்ளே இருக்கும். அதனால் அவனவன் பாட்டுக்கு ஜலம் உள்ளேயே கிடைக்கும். இதனால் அங்கே மட்டும் 'காத'த் திருப்பணி செய்யாமல் எல்லோருமாக சேர்ந்து ரோடு போட்டார்கள்.

பொதுவாக, முத்ராதிகாரிகள் திட்டத்தில் மாஸத்தில் இரண்டு ஏகாதசியும் புராண படனம், வருஷத்தில் ஒரு கோட்டகத்தில் ஒரு குளம் வெட்டுவது என்ற இரண்டும் நன்றாக நடைபெற்றன.

பிற்பாடு ஸமூஹத்துக்கு ஒரு நன்மை கிடைப்பது பிற்பாடு இந்த மாதிரி உழைப்பே ஒருத்தனுக்கு சித்தசுத்தி தருவது எல்லாவற்றுக்கும் மேலாக, அப்போதே இம்மாதிரிக் கார்யங்கள் பல ஜனங்களை ஜாதி, 'ஸ்டேடஸ்'சண்டைகளில்லாமல் ஒரு குடும்பமாகச் சேர்த்து வைத்ததைப் பார்த்ததிலிருந்து தனித்தனியாகப் பரோபகாரம் செய்வதைவிடப் பலர் சேர்ந்து ஸங்கமாகச் செய்வது ரொம்ப விசேஷமானது என்று தெரிந்தது. கழகம், கம்யூனிஸம் எல்லாவற்றுக்கும் பெரிய மாற்று மருந்து, கொஞ்சங்கூட அரசியல் வாடையே இல்லாத பொதுநலப் பணிதான் என்றும் தெரிந்தது.

பலர் சேரவேண்டும் என்பதற்காக இதை ஒரு அஸோஸியேஷன் என்று சொல்லி ரிஜிஸ்டர் பண்ணி, சேர்மன், ஸெக்ரடரி, கவர்னிங் பாடி அது இது என்று சொல்லிக்கொண்டு, 'ஸ்தானங்கள்', அதற்காக சண்டை போட்டி என்று ஆகிவிடக்கூடாது. பரோபகாரத்தின் பெரிய பலனாக அஹம்பாவ நாசமே இதனால் அடிப்பட்டுப் போய்விடும். அதனால் இதிலே 'ஆஃபீஸ்'எதையும் உள்ளே விடக்கூடாது.

Thursday 14 March 2013

தொண்டின் உட்பயன்கள் ; ' திரு' ப்பணி



இதனாலெல்லாம் என்ன பெரிய ப்ரயோஜனம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கக் கூடாது. ராமாயண அணில் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அத்தனாம் பெரிய ஸேது பந்தத்தில், 'நாம் அல்ப ஜந்து, என்ன பெரிய ஸஹாயம் பண்ணமுடியும்?' என்று அது நினைத்ததா? அது பண்ணின ஸேவை ராமருக்கு என்ன உபகாரம் பண்ணிற்றோ பண்ணவில்லையோ, அதற்கே பெரிய உபகாரம் பண்ணி விட்டது - ஸ்ரீராமனின் கருணையை, கர ஸ்பரிசத்தை ஸம்பாதித்துத் தந்துவிட்டது. இப்படி 'நாம் என்ன பண்ணி கிழிக்கப் போகிறோம்?' என்று ஒதுங்கியில்லாமல், நம்மாலான தொண்டு செய்தால், மற்றவருக்கு நம்மால் நல்லது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நமக்கு ஈஸ்வரப் பிரஸாதம் கிடைத்து சித்த சுத்தி லபித்துவிடும்.

ராமாயண அணில் மாதிரி இரண்டு பேரை என் lifetime -ல் நினைக்கிறேன். (1944 பிப்ரவரியில்) காஞ்சீபுரத்தில் காமாக்ஷிக்குப் பெரிசாகக் கும்பாபிஷேகம் பண்ணினபோது, திருநெல்வேலியில் ஏதோ சின்ன கடை வைத்திருந்த ஒருவர், 'என்னால் இதற்குமேல் பண்ணச் சக்தி இல்லையே!' என்று மனஸார வருத்தப்பட்டு நீளமாக எனக்கு ஒரு கடிதாசு எழுதி, ஒரு ரூபாய் மணிஆர்டர் பண்ணியிருந்தார். இதேமாதிரி இளையாத்தங்குடியில் ரொம்பப் பெரிசா முதல் ஸதஸ் (1962 நடைபெற்ற ஆகம-சில்ப-வ்யாஸ பாரத-கிராமகலா-வித்வத்-ஸதஸ்) நடத்தினபோது சென்னையிலிருந்து ஒருத்தர் ஐந்து ரூபாய் அனுப்பி வைத்து, பெரிய டொனேஷன்களோடுகூட இந்த அல்பக் காணிக்கையையும் அங்கீகரிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். பெரிய டொனேஷனெல்லாம் மறந்து போனாலும், அந்த ஒரு ரூபாயும், இந்த அஞ்சு ரூபாயும்என் மனஸை விட்டுப் போகவில்லை.

முன்னயே நான் திரும்பத் திரும்பச் சொன்ன மாதிரி நம்முடைய தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும், அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் நிச்சயமாகக் குறையும். ஸங்கமாக எல்லாரும் சேருவதால் ஸமூஹத்தில் ஸெளஜன்யம் உண்டாகும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே, அது போதும்! இந்த ஈரம், அன்பு, அருள் பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும். 'பகவானிடத்தில் பக்தி வரவேண்டும், அவனருள் கிடைக்க வேண்டும்' என்றால் எப்படி வரும்? பரோபகாரம் பண்ணி மனஸ் பக்குவமானால்தான் நிஜ பக்தி வரும். ஈஸ்வராநுக்ரஹமும் வரும்.

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது பசு வளர்ப்பது, பசிக்கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.

ஈஸ்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம் மனஸ் கல்லாக இருந்தால், கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி அநுக்ரஹத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால் அதுதானே விரிந்து ஜலத்தை இழுத்துக் கொள்கிறது. துணியை வெளியே இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி லேசாகத் துணி மாதிரி ஆக்கிக் கொண்டால் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற அநுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ளலாம். ஜீவனுக்குச் செய்கிற பெரிய உபகாரம் அவனுக்குக் கருணாமூர்த்தியான ஈசனிடம் பிடிப்பு ஏற்படுத்தித் தருகிற திருப்பணிதான்.

பணி என்றால் ஸர்வீஸ். ஸ்கூல் வைப்பது, ஆஸ்பத்திரி கட்டுவது, ஜல வஸதி பண்ணித் தருவது எல்லாம் ஸர்வீஸ்தான். நாம் ஸோஷல் ஸர்வீஸ்-ஸமூஹப் பணி-என்றாலே இதுகளைத்தான் நினைக்கிறோம். ஆனால் இந்தப் பணியெல்லாம் இறைபணியில் கொண்டு சேர்த்தால்தான் நிறைவுள்ளதாகும் என்று நமக்குப் புரிய வைக்கிறதற்காகத்தான் ஈஸ்வர ஸம்பந்தமான பணிக்கே 'திரு'என்று அடைமொழி கொடுத்து 'திருப்பணி' என்று பேர் வைத்திருக்கிறார்கள். 'திருப்பணி' என்கிற வார்த்தை எல்லா ஸர்வீஸுக்கும் உச்சி அதுதான் என்று அர்த்தம் கொடுக்கிறது.

ஏழை இந்தியாவிலுள்ள இத்தனை பிரம்மாண்டமான கோயில்களைச் சம்பளத்துக்காக ஜனங்கள் கட்டவில்லை. ராஜாக்கள் கோயில் கட்டின தொழிலாளிகளுக்கு நிறையக் கொடுத்தது வாஸ்தவம். ஆனால் இவர்கள் ஸர்வீஸாகத்தான் செய்தார்கள். இவர்களுடைய காலக்ஷேபம் நடக்க வேண்டும் என்று ராஜா தானாகப் பொருள் கொடுத்தான். அந்த நாள் ஸொஸைட்டியின் ஸெட்-அப், எகானமி எல்லாமே வேறே. ஜனத்தொகை குறைச்சல், சோற்றுக்கும் துணிக்கும், ஜாகைக்கும் கஷ்டமேயில்லை. அத்யாவசியங்கள் தவிர லக்ஷரிகள், சினிமா, அது இது என்று செலவுமில்லை. இன்றைக்கு மாதிரி ஃபாக்டரிகளும், டாம்களும் கட்டவேண்டிய அவசியம் ராஜாங்கத்துக்கு இல்லை. ஸைன்யத்தை வைத்து ரக்ஷிக்கிற ஒரு செலவு தவிர, மற்றபடி Welfare State என்று இப்போது ஸமூஹ அபிவிருத்திக்குச் செலவழிக்கிற அநேகச் செலவினங்கள் ராஜாவுக்கு இல்லை. அதனால் இன்றைக்கு உள்ள ஃபாக்டரி, டாம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கோயில் கோயிலாகக் கட்டினான். புதிதாகக் கட்டுவது, பழசை விஸ்தரிப்பது என்று ஜனங்களுக்கு ஓயாமல் வேலை கொடுத்து, சம்பளமும் கொடுத்து வாழ வைப்பதற்குக் கோயில் திருப்பணிதான் முக்யமாக நடந்து வந்தது. இதனால் வேலை செய்கிற ஜனங்களின் மனஸும் ஈஸ்வர பரமாகப் போனதில் அவர்கள் நல்ல பக்தியோடு, சாந்தர்களாக இருந்து வந்தார்கள். தேசமே க்ஷேமமாக இருந்தது. வெறும் பணியாக இல்லாமல் திருப்பணியாக இருந்ததால், 'ரைட்'கேட்பது, 'ஸ்ட்ரைக்'பண்ணுவது என்பதெல்லாம் இல்லாமல், மனப்பூர்வமாக உழைத்தார்கள். கார்யம் ஒழுங்காக நடந்து, இன்றைக்கும் லோகமே ப்ரமிக்கும் படியாக எங்கே பார்த்தாலும் கோயிலும் கோபுரமுமாக இருக்கிறது! இப்போது இத்தனை ஜனங்கள், என்ஜினீயரிங் முன்னேற்றம் எல்லாம் இருந்தும், அவற்றைப் பழுதுபார்க்கக்கூட நமக்கு சக்தியில்லை!

''மக்களுக்குச் செய்வதே மஹேசனுக்குச் செய்வது'' என்று வெறும் வாய்ப் பேச்சாகச் சொல்லிக்கொண்டு, மஹேசனை மறந்து இப்போது கார்யங்களைப் பண்ணும்போது என்ன ஆயிருக்கிறது? தெய்வ ஸம்பந்தமில்லாமல் பணியைக் கத்தரித்து விட்டிருப்பதால், நல்ல குறிக்கோளோடு பண்ணுவதெல்லாமே அனர்த்தங்களைக் கொண்டு வந்து விடுகிறது.

பழைய நாளில் பக்தியால் தேசத்தில் கன்யாகுமாரியிலிருந்து காஷ்மீர் வரை எல்லா ஜனங்களும் ஏகோபித்திருந்ததால், வடக்கே கோயில் கட்டுகிறார்களா, தெற்கே கோயில் கட்டுகிறார்களா என்று சண்டை போடாமல், வடக்கத்திக்காரன் தென்தேசத்துக் கோயில்களுக்கும், தெற்கத்திக்காரன் வடதேசக் கோயில்களுக்கும் போனான். இப்போதோ ராஜாங்கம் எந்த டாம் கட்டட்டும், எந்த ஃபாக்டரி வைக்கட்டும், உடனே அத்தனை ஸ்டேட்காரர்களும், தங்கள் தங்கள் ஸ்டேட்டில் தான் அதைக் கட்ட வேண்டும் என்று சண்டைக்கு ஆரம்பிக்கிறார்கள்.

எல்லாருக்கும் படிப்பு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் நல்ல எண்ணத்தில்தான் செய்கிறார்கள். ஆனால் 'தெய்வ ஸம்பந்தமே இருக்கக்கூடாது; அப்படியிருந்தால் நம் ஸெக்யூலரிஸத்துக்கு (மதச்சார்பின்மைக்கு) களங்கமாய்விடும்' என்று நினைத்து வெறும் அறிவு வ்ருத்தியை மட்டும் படிப்பினால் உண்டாக்கித் தருகிறார்கள். இதனால் படிப்பறிவில்லாவிட்டால் ஸாது ஜனங்களாக இருக்கக் கூடியவர்களுக்கும் ஃபோர்ஜரி மாதிரி அநேக தப்புத் தண்டாக்களையும், புத்திசாலித்தனத்தால் செய்யக்கூடிய அநேக ஒழுங்கீனங்களையும் கற்றுக் கொடுத்ததாகவே ஆகிறது.

எங்கே பார்த்தாலும் ஆஸ்பத்திரி என்று வைத்து அதே ஸமயத்தில் மதாநுஷ்டானத்தாலேயே உண்டாகிற கட்டுப்பாடுகள் இல்லாமல் ஜனங்களை அவிழ்த்து விட்டிருப்பதாலும் அனர்த்தங்கள் உண்டாகின்றன. 'குடிக்கலாம், எதை வேண்டுமானாலும் தின்னலாம். 'அபார்ஷன்' மாதிரி இன்னும் பெரிய தப்புகளும் பண்ணலாம் - இதனாலெல்லாம் கெடுதி வராமல் வைத்யம் பண்ணிக்கொண்டு விடலாம்' என்று ஜனங்களுக்குத் துணிச்சல் கொடுத்துப் போகிறது.

ஸமூஹ நலன் என்று க்ராமம் க்ராமமாக பாங்குகள் வைத்து தாராளமாகக் கடன் தருகிறார்களென்றால், உடனே அதை வாங்குவதற்கு எத்தனை பொய் பித்தலாட்டம் உண்டோ அத்தனையிலும் ஜனங்களை இழுத்து விடுவதாகவும் ஆகிறது. இப்படிப் பலபேர் அப்ளிகேஷன் போடுவதில், சிலருக்குத்தான் ஸாதகமாகிறது என்கிற போது அதிகாரிகள் லஞ்ச ஊழல், பாரபக்ஷம் எல்லாம் சேர்கிறது.

தப்பிப் போனவர்களுக்கு ஸகல வசதிகளுடன் ஸேவாஸதனம் வைக்கிறதென்பதே, மனக்கட்டுப்பாடு போதாதவர்களை இன்னமும் தளர்ந்து கொடுக்கத் துணிச்சல் அடையுமாறு செய்யலாம்.

ஆகையால் தெய்வப் பணியை விட்டுவிட்டு தேசப்பணி, மக்கட்பணி என்று புறப்படுவது தப்பு.

இதிலே நமக்கெல்லாம் வழிகாட்டினவர் அப்பர் ஸ்வாமிகள். ''  என் கடன் பணி செய்து கிடப்பதே''என்ற அவர் என்ன செய்தார்? 'பாடும் பணி'யினால் ஸகல ஜனங்களின் நெஞ்சமும் உருகிப் பரமேஸ்வரனிடம் சேருமாறு பண்ணிவைத்தது அவர் செய்த வாக் கைங்கர்யம். அது தவிர சரீர கைங்கர்யமாக, ஒரு உழவாரப்படையை வைத்துக்கொண்டு கோயில் கோயிலாய்ப் போய் அங்கே ப்ராகாரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கிக் கொண்டிருந்திருக்கிறார். உலகத்திலுள்ள ஜீவர்களுக்குச் செய்கிற தொண்டிலேயே, உலக ஜீவர் எல்லோருக்கும் அம்மையப்பனான பரம்பொருளுக்குச் செய்கிற தொண்டையும் சேர்த்து ஜனங்களின் உய்நெறிக்கு உபகாரம் பண்ணியதே அப்பரின் பெருமை.

அப்பர் காட்டிக் கொடுத்தபடி அம்மையப்பரிடம் பக்தி வைத்து, எல்லாரும் அந்த ஒருவனின் குழந்தைகள் என்கிற அன்பில் ஒன்றுபட்டுச் சேர்ந்து ஸேவை செய்கிற போதுதான் த்வேஷம், கட்சிச்சண்டை, ஏமாற்று, வெறும் நடிப்பான 'இன்டக்ரேஷன்' (ஒருமைப்பாடு) இவை இன்றி களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமையும், உத்ஸாஹத்தோடு உழைக்கிற மனப்பான்மையும் ஏற்படும். பெரிய பெரிய கார்யங்களையெல்லாம் ஸுலபமாக ஸாதிக்கலாம். அந்தச் சூழ்நிலையிலேயே ஆனந்தத்தின் ஸுகந்தத் தென்றல் வீசும். கெட்டதுகளின் வாடையே அங்கு தலை காட்டாது.

ஆசாரங்களையும், தர்ம சாஸ்த்ரக் கட்டுப்பாடுகளையும் விட்டு விலகி விலகிப் போகிறதுதான் ஸோஷல் ஸர்வீஸ் என்றில்லாமல், அவற்றில் இன்னம் கிட்டே கிட்டே போய் ஒட்டிக்கொள்கிற மாதிரி தெய்வ ஸம்பந்தத்துடன்தான் தேசப்பணி செய்ய வேண்டும்.

தங்களுக்கும் ஸமூஹத்துக்கும் ஒன்று செய்துகொள்வதற்கு முன்னால், பகவானுக்கு எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். தீபாவளி என்றால் தாங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது வஸ்த்ரம் கட்டிக் கொள்வதோடு ஏழை பாழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், துணி கொடுக்க வேண்டும். அது மட்டும் போதாது. எல்லாரும் சேர்ந்து முதலில் கோயிலில் உள்ள அறுபத்து மூவர் உள்பட எல்லா மூர்த்திகளுக்கும் தைலம் சாத்தி, புது வஸ்த்ரம் அணிவிப்பதில்தான் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படியே பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதியில்லாதவர்களுக்கும் இந்த உதவியைப் பண்ணுவதோடு, வசதியுள்ளவர், வசதியில்லாதவர் எல்லாருமே ஒன்று கூடிப் பக்கத்திலுள்ள ஆலயங்களில் களை பிடுங்கி, தேய்த்து மெழுகி அலம்பிவிட்டு, பொக்க பொறைகளை அடைக்க வேண்டும்.

இப்போது நமக்கு உள்ளே இருக்கிற அழுக்கும் முள்ளுந்தான் கோயிலில் அழுக்காகவும் முள்ளாகவும் ரூபம் எடுத்திருக்கிறது! கோயிலில் செதுக்கி, மெழுகி சுத்தப்படுத்துகிறபோது நம் மனஸின் முள்ளையும் அழுக்கையும் அகற்றித் துப்புரவாக்கிக் கொண்டு விடுவோம். அப்போது நம் மனஸே தங்கமாகிவிடும். அந்தக் கனகஸபையில் அன்பே உருவான சிவம் வந்து குடிகொண்டு நாமே ஆலயமாகி விடுவோம்.

நடமாடும் மனிதருக்குச் செய்வதே படமாடும் பரமனுக்குச் செய்ததாகும் என்று சொல்லும் அதே திருமூலர் முதலில் ஈஸ்வரனுக்கு பத்ர அர்ச்சனையைச் சொல்லிவிட்டு அப்புறம்தான் பசுவுக்குப் புல், பிற்பாடு (இப்போது நான் பிடியரிசித்* திட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே அம்மாதிரி) ஏழை ஜனங்களுக்கு ஒரு கவளம் அன்னம் இவற்றைச் சொல்லிவிட்டு முடிவாக, இப்படிக் கையால் பொருளாக உபகாரம் பண்ணாவிட்டாலும், வாயாலாவது ஸகலரிடமும் மதுரமாகப் பேசி உபகாரம் பண்ணவேண்டுமென்று சொல்கிறார்.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் (கு) இன்னுரை தானே.

ஆக ஈஸ்வர ஸேவையில்லாமல் மநுஷ்ய ஸேவை என்பதில்லை.

ஸமூஹ ஸேவையும் தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டுமென்றுதான் ஸ்ரீமட தொண்டு ஸபை என்பதாக மத ஸம்பந்தமாகத் துண்டுப் பிரசுரம் போடுபவர்களையும் பொதுத்தொண்டு செய்யும் ஸ்ரீமட முத்ராதிகாரிகளோடு சேர்த்து விட்டது.

''பகவான் நம்மைக் கண் திறந்து பார்க்க வேண்டும்'' என்று எல்லாரும் குறைபட்டுக் கொள்கிறோம். கருணைக்கடலான ஈஸ்வரன் கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்டப்படுகிற மாதிரி நமக்கு ஸெனபாக்யங்களைத் தரவில்லை என்றால், நாம் கண்ணைத் திறந்து லோகத்தின் கஷ்டங்களைப் பார்த்து அது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான உபகாரத்தைப் பண்ணாமலிருப்பதால்தான். நம் மனஸ் மற்றவர்களிடம் தயையால் நிரம்பினால், உடனே கருணையே உருவமான ஈஸ்வரனும் நமக்குத் தயை புரிவான். ஆனதால், கண்ணைத் திறந்து பார்க்க வேண்டியது நாம்தான்; பகவானல்ல.

கண்ணைத் திறந்து பல தினுஸாகக் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து நம்மாலானவரையில் அதை நிவ்ருத்தி பண்ண வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களும் தங்கள் கண்ணைத் திறந்துகொண்டு, இத்தனை கஷ்ட நிவ்ருத்திக்கும் எவன்தான் மூலகாரணமோ, எவனுடைய கருவி மாத்திரமாகவேதான் நாம் தொண்டு செய்வதல்லாமோ - அவனைப் பார்த்து, இந்தக் கஷ்டம் ஸுகம் எல்லாவற்றையும்விடப் பெரிசு அவனை அடைவதுதான் எனறு உணரும்படியாகப் பண்ண வேண்டியதே நம்முடைய தலையாய பணி.

நம் மதத்தில் பொதுத்தொண்டு உண்டா என்று கேட்பவர்கள் கேட்டுவிட்டுப் போகட்டும் நான் சொல்கிறேன் இப்போது நம் மதத்துக்கே தொண்டால்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹிந்துமதம் வேலி இல்லாத தர்காஸ்து நிலம் மாதிரிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறி இந்த மதத்தைக் கவனிக்க மநுஷ்யர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும். ஸ்வய மரியாதையுடன் நம் மதத்தில் இருக்கலாம் என்று ஸகல வகுப்பினருக்கும் நம்பிக்கையை உண்டுபண்ணுவது எல்லோரும் ஸங்கமாகக் கூடிச் செய்கிற பொதுத்தொண்டு தான். இந்தத் தொண்டுகளை அப்புறம் சொல்கிறேன். இப்படி ஸகல ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு, செய்வதே நம் மதத்துக்கு வேலியாகி, இது 'தர்காஸ்து' நிலமில்லை என்று ஆக்கும். 'நம்முடைய சொந்த மதம்' என்ற அபிமானம் எல்லா வகுப்பாருக்கும் உண்டாகி விடுமாதலால் வேறு யார் வேண்டுமானாலும் இதிலிருக்கிறவர்களை ஸ்வாதீனம் பண்ணிக்கொள்ளலாம் என்ற நிலைமை போகும். மதமாற்றம் ஏற்படாமல் ஹிந்துக்களின் நிலைமையை மாற்ற நாம் எதிர் பிரசாரம் பண்ணிச் சண்டை உண்டாக்க வேண்டியதில்லை. நம்முடைய அசட்டையும், கடினமும் போய் நாம் மனமாற்றம் அடைந்து நம் ஜனங்களையெல்லாம் பரோபகாரத்தில் அணைத்துக் கொண்டாலே மதமாற்றம் நின்று போய்விடும். இதுதான் ஹிந்து ஸமூஹத்தை ஹிந்து ஸமூஹமாகவே வைத்துக் காப்பாற்றுவதற்கு சாந்தமான வழி. மதத்துக்காக ulterior motive -ஓடு (உள் நோக்கத்தோடு) நாம் பரோபகாரம் பண்ணாமல் அன்பின் நிறைவுக்காகவே பண்ணி, side by side மதத்தையும் ரக்ஷிக்க வேண்டும். எனக்கு உபசாரம் பண்ணிப் பூர்ணகும்பம் கொடுத்து மாலை போடுவதைவிட இப்படி ஹிந்துக்கள் அனைவரும் தொண்டினால் ஒன்று சேர்ந்து மதத்தை ரக்ஷித்துத் தருவதுதான் எனக்கு நீங்கள் பண்ணுகிற பெரிய உபசாரம், உபகாரம் எல்லாமும்.

தெய்வப் பணியும் மக்கட் பணியும்



ரதோத்ஸவத்தை விட்டுவிட்டு, ஸோஷல் ஸர்வீஸுக்கு வாருங்கள் என்று சொல்வது தப்பு. நமக்கு இரண்டும் வேண்டும். இப்போதெல்லாம் தெய்வ கார்யத்தை விட்டு விட்டு ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும் என்பவர்கள் திருமூலர் திருமந்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்

நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்
படமாடக் கோயில் பகவற்கதாமே.

என்ற திருமந்திரத்தை quote செய்கிறார்கள்.

'மக்களுக்குச் செய்கிற தான தர்மங்கள் பகவானுக்குப் பண்ணுகிற பூஜையாகும்' என்று இதற்கு அர்த்தம் . ஸ்ரீமத்பாகவதத்திலும் பகவான். லோகத்தையெல்லாம் பகவத் ஸ்வரூபமாக பார்த்து ஸேவை செய்வதும் பூஜைதான் என்கிறார்*.

இப்படிச் சொன்னதால் பூஜை கூடாது, உத்ஸவம்கூடாது என்று அர்த்தமில்லை. பரோபகாரம் பண்ணி ஜனங்களுக்கு சாப்பாடும், துணியும் மற்ற ஸெளகர்யங்களும் கிடைக்கிற மாதிரி செய்துவிட்டு, அவர்கள் தின்று தின்று என்றைக்கோ ஒருநாள் பரமார்த்த ஸத்யத்தைத் தெரிந்து கொள்ளாமலே சரிகிற மாதிரி விட்டு விட்டால் என்ன ப்ரயோஜனம்? திருமூலரோ, க்ருஷ்ணரோ இப்படி விட்டு விடவேண்டும் என்று அபிப்ராயப்படுகிறவர்கள் அல்ல. சாச்வத ப்ரயோஜனம் பகவானைக் காட்டிக் கொடுப்பதுதான். இந்த உடம்புக்கு சோறு போட்டு, இதற்கு வியாதி வந்தால் சிகித்ஸை பண்ணி, அறிவை வளர்க்கும் படியான கல்வியைத் தந்து உபகாரம் பண்ணுவதெல்லாம். ஆலய தர்சனம், உத்ஸவாதிகள் முதலியவற்றை நன்றாக அநுபவித்துப் பயன் அடைவதற்குத்தான் மற்ற ஸோஷல் ஸர்வீஸ் எல்லாமே. ''நாஸ்திகனுக்கு வைத்யம் பண்ணி ஆயுஸை நீடிக்கப்பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாபத்தை வ்ருத்தி செய்துகொள்ள இடம் தருவதாக ஆவதால், அவனுக்கு வைத்யம் பண்ணாதே!'' என்று ஆயுர்வேத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ஆனபடியால் மக்கள் பணியெல்லாம் அந்த மக்களை பகவானிடம் சேர்ப்பதற்குத்தான். அதனால், எல்லோருமாகச் சேர்ந்து ஆலயத் திருப்பணி செய்தால் மெய் வருத்தி ஒரு கோயிலுக்கு மதில் கட்டினால், அதுதான் ஜனங்களுக்கான மஹா பெரிய ச்ரமதானம்.

ஆத்மார்த்தமாகவே சில ஸமூஹ ஸேவைகள் உண்டு. உதாரணமாக, மஹான்களுடைய நூல்கள், மஹான்களைப் பற்றிய நூல்கள், புராணங்கள், ஸ்தோத்ர க்ரந்தங்கள், துதிப்பாடல்கள் முதலியவற்றை அச்சிட்டு ஜெயிலில் இருக்கிறவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் இருக்கிறவர்களுக்கும் இலவசமாகக் கொடுப்பது ஒரு பெரிய பரோபகாரம். அந்தந்த அதாரிடி (நிர்வாகிகள்) அனுமதித்தால் இந்த இடங்களில் மத ஸம்பந்தமான பேச்சு, பஜனை, காலக்ஷேபம் இதெல்லாம் நடத்தலாம்.


பொதுச் ஸேவை - பூர்த்த தர்மம் " & தீர்த்த தர்மம்


பொதுச் ஸேவை - (" பூர்த்த தர்மம் " : பலர் கூடிப் பொதுப்பணி)

பூர்த்தம் காதாதி கர்ம யத் என்று ஸம்ஸ்க்ருத டிக்ஷனரியான 'அமர'த்தில் சொல்லியிருக்கிறது. 'காதம்' முதலான கர்மாக்கள் பூர்த்தம் ஆகும் என்று அர்த்தம்.

காதம் என்றால் வெட்டுவது; அதாவது குளமோ, கிணறோ, வாய்க்காலோ வெட்டி உபகாரம் பண்ணுவது. சாஸ்திரங்களில் விசேஷித்துச் சொல்லியிருக்கிற இந்தப் பூர்த்த தர்மத்தை மறந்தால்தான், ஜலக்கஷ்டம் (Water scarcity) என்று ஓயாமல் அவஸ்தைப் படுகிறோம். அந்தக் காலத்தில் இந்தக் கார்யம் ரொம்பவும் முக்யமாகக் கருதப்பட்டதால்தான் நாம் கூப்பிட்டு ஒருத்தன் வரவில்லை என்றால், ''அவன் அங்கே என்ன வெட்டிக் கொண்டிருக்கிறானோ?'' என்று கேட்கிற வழக்கம் வந்திருக்கிறது. அதாவது அவன் வெட்டிக் கொண்டிருந்தால் மட்டும் நாம் எத்தனை அவஸரத்தில் கூப்பிட்டாலும் வராமலிருக்கலாம் என்று அர்த்தமாகிறது!

இப்போது வெட்டுகிற கார்யம் போய், தூர்ப்பது தான் முக்யமான கார்யமாக இருக்கிறது! குழாயில் தண்ணீர் நின்றுவிட்டாலோ அல்லது பூச்சியும் புழுவுமாகக் குழாய் ஜலம் வரும்போதோ, ''ஏண்டா குளத்தைத் தூர்த்தோம், கிணற்றை மூடினோம்?'' என்று துக்கமாக வருகிறது.

முன்பெல்லாம் ஒரு குளம் என்றால் வாய்க்கால்கள், வடிகால்கள் என்றெல்லாம் போட்டு வெகு சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். கிணறு என்றால் இழுக்கத் தெரிந்த மநுஷ்யனுக்கு மட்டும்தான் அது ப்ரயோஜனமாகும். குளமானாலோ வாயில்லா ப்ராணிகளுக்கும்-காக்காய், குருவி முதற்கொண்டு ஸகல ஜீவராசிகளுக்கும், அது பயன்படும். பாதை போடுவது ஒரு தர்மம். வ்ருக்ஷம் வைப்பது இன்னொரு தர்மம். புதிதாக வைப்பதோடு, இருக்கும் வ்ருக்ஷங்களை வெட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வைக்கிற செடிக்கு தினம் ஜலம் விட்டு, அது வ்ருக்ஷமாக வளரப் பண்ண வேண்டும். ''வனமஹோத்ஸவம்''என்று இன்றைக்குப் பெரிய மநுஷர்கள் வந்து செடி நட்டுவிட்டு நாளைக்கே அதற்கு ஜலம் விட ஆள் இல்லாமல் அது பட்டுப்போனால் என்ன ப்ரயோஜனம்? இதுமாதிரி டெமான்ஸ்ட்ரேஷன், வெளிவேஷம் நமக்கும் உதவாது, லோகத்துக்கும் உதவாது. இதற்குப் பதில் யாருக்கும் தெரியாமல் ஒருத்தன் ஏதோ ஒரு ஒற்றையடிப் பாதையில் உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால், அதுவே மற்றவர்களுக்கு வழியை சுத்தி பண்ணுவதோடு இவனுக்கும் சித்த சுத்தியைக் கொடுத்துவிடும்.

ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக்கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக்கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. குப்பைத் தொட்டியான மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே த்யானம் செய்ய முடிகிறது. கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. குயுக்தி எல்லாம் பண்ணும் மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்வ ஆராய்ச்சி பண்ண முடிகிறது. இப்படியே, இந்த சரீரத்தால் - கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா? அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரீரப் பிரயாஸையாலேயே பண்ணிக்கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக்கார்யங்களான பூர்த்த தர்மங்கள்-ஸோஷல் ஸர்வீஸ்-அத்தனையும், சரீரப் பிரயாஸையாலேயே இது சித்த சுத்தியையும் தரக்கூடியது. ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் கார்யங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான்.

தயை என்பது ஒவ்வொருவர் மனஸிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும்.

விநோபா 'ச்ரம்தான்' (ச்ரம தானம்) என்று சொல்லி வருகிறாரே, இதைத்தான் பூர்த்த தர்மம் என்று நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. வாரத்தில் ஒரு நாளாவது இந்த சரீர கைங்கர்யத்தை ஸகல ஜனங்களும் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. யாராயிருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் ஹாலிடே (விடுமுறை) இருக்கிறதல்லவா?அன்றைக்கு லோகோபகாரமாக சரீரத்தால் ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும். மனப்பூர்த்தியுடன், அல்லது மனப் பூர்த்திக்காக பூர்த்த தர்மம் பண்ண வேண்டும்.

அவரவருக்கும் எத்தனையோ குடும்பக் கார்யங்கள் இருக்கும் என்பது வாஸ்தவம்தான். இந்தக் கார்யங்களை லீவு நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும் இதோடுகூட பார்வதீ-பரமேஸ்வராளின் பெரிய லோக குடும்பத்துக்கும் தன்னாலானதை ஒரு 'ட்யூட்டி'யாக செய்யத்தான் வேண்டும். இதற்காக அதையும் விடக்கூடாது. அதற்காக இதையும் விடக்கூடாது. கொஞ்ச நேரமாவது இந்தப் பரோபகாரப் பணி புரிய வேண்டும்.

சரீர கைங்கர்யம் உடம்புக்கே ஒரு நல்ல exercise (அப்யாஸம்) . அதோடு பரோபகாரமாகப் பண்ணுகிற போது மனஸுக்கும் அலாதியான உத்ஸாஹம் இருக்கும். முடிவில் சித்த சுத்தியைத் தரும்.

ஸங்கமாகச் செய்ய வேண்டும். உதிரி உதிரியாக அவரவர்கள் செய்வதைவிட எல்லாரும் சேர்ந்து செய்தால் ஜாஸ்தி உபகாரம் பண்ண முடியும்.

அதுவும் இந்தக் கலிகாலத்தில் பலர் கூடிப் பண்ணுவதுதான் பலன் தரும்- கலௌ ஸங்கே சக்தி: என்றே வசனமிருக்கிறது. முன் யுகங்களில் individual -ஆக ஒவ்வொருத்தனுக்கும் தேஹ, மனோ சக்திகள் அதிகமிருந்தன. இப்போது அது போய்விட்டது. அதனால்தான் நாமும் பார்க்கிறோம், எல்லா mass movement -களாகவே (வெகுஜன இயக்கங்களாகவே) இருப்பதை அநேகமாக, 'கலி' என்றாலே சண்டை, சச்சரவு என்று அர்த்தமிருப்பதற்குப் பொருத்தமாக இந்த ஸங்க சக்தி மறியல், 'ஒழிக' ஊர்வலம் நடத்துவது, ரயிலைக் கொளுத்துவது முதலான காரியங்களுக்குத்தான் பிரயோஜனப்படுகிறது!

இந்த ஸங்க சக்தியை இனிமேலாவது நாம் நல்லதற்கு channelise பண்ணி ஸமூஹப் பணிகளை விருத்தி செய்ய வேண்டும்.

ஸங்கமாகச் சேர்ந்து தொண்டு செய்கிறவர்களுக்கு அத்யாவசியமாயிருக்க வேண்டிய யோக்யதாம்சங்கள்: அவர்களுக்குக் கட்டுப்பாடு (நியமம்) ரொம்பவும் தேவை. எடுத்துக்கொண்ட வேலையில் கொஞ்சம்கூடப் பொறுப்பு குறையக்கூடாது. ஸத்தியமும், அந்தரங்க சுத்தமும் இதுபோலத் தேவை. அன்போடு மதுரமாகப் பேசவும் பழகவும் வேண்டும். பணத்தைக் கையாளுவதில் அப்பழுக்கில்லாதவர்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ணக்கூடியவர்களாக இருக்கணும். நியாயமாக ஸந்தேஹப்படுபவர்களிடம் பொறுப்பில்லாமலோ, பொறுமையிழந்தோ பதில் சொல்லக்கூடாது.

அதே ஸமயத்தில் அநேக ஸந்தேஹப் பிராணிகள் ஏதாவது ரூமர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களே என்பதற்காக ''நமக்கென்னத்துக்கு ஊரான் பாடு?'' என்று பொதுத் தொண்டை விட்டு விடவும் கூடாது. அதாவது ஸ்வயமான அவமானங்களை பாராட்டிக் கொண்டிராத மனப்பான்மை வேண்டும். நகரமானால் ஒரு பேட்டையில் இருப்பவர்களெல்லாம் சேர்ந்து செய்யலாம். க்ராமமானால், நாலு க்ராமத்து ஜனங்கள் ஒன்றுகூடிப் பண்ணலாம்.

ந ஹி ஜானபதம் து:கம் ஏக: சோசிதும் அர்ஹதி - என்று ஒரு வசனம் இருக்கிறது. ''ஊர்க் கஷ்டத்தைப் பற்றி ஒருத்தன் விசாரப்பட்டுப் பிரயோஜனமில்லை'' என்று இதற்கு அர்த்தம் பண்ணிக்கொண்டு, நம் மதத்தில் ஸமூஹ ஸேவா உணர்ச்சியை இல்லை என்று சொல்கிறார்கள். இது ஸரியில்லை. வாஸ்தவத்தில் இதன் அர்த்தம் இப்படியில்லை. ''ஏக: - ஒருத்தன்'' என்ற வார்த்தைதான் இங்கே முக்யமானது. தனி ஒருத்தனாக இருந்துகொண்டு ஊர்க் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு இவனும் அவர்களோடு சேர்ந்து அழுவதில் ப்ரயோஜனம் இல்லை; பல பேராகச் சேர்ந்து அந்தக் கஷ்டத்தை நிவ்ருத்தி பண்ணக் கார்ய ரூபத்தில் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஒன்று, வெறுமே விசாரம் மட்டும் படக்கூடாது; கார்யத்தில் இறங்க வேண்டும். இரண்டாவது, தனியாகப் பண்ணினால் எடுபடாது. பலர் ஸங்கமாகச் சேர வேண்டும்.

பிறத்தியானைக் கஷ்டப்படுத்தியாவது ஸ்வயகார்யத்தை ஸாதித்துக் கொள்வதென்பதே பொதுத் குணமாக உள்ள நாம், இப்படிப் பலருக்குமான கார்யத்தைப் பலரோடு சேர்ந்து ஸ்வய ச்ரமத்தைப் பாராமல் அன்பினால் ஒன்றுபட்டுச் செய்கிறபோது அடைகிற தூய ஆனந்தம் தனியானது. கார்யம் நிற்கிறதும் நிற்காததும் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைச் செய்யும் போது பலர் ப்ரேமையில் ஒன்று கூடும் இன்பம் இருக்கிறதே, அதுவே ஒரு பெரிய பயன்.


தீர்த்த தர்மம்

பூர்த்த தர்மத்தில் தீர்த்த தர்மத்தை விசேஷமாகச் சொன்னேன். ரொம்ப ஜலக் கஷ்டமுள்ள இடத்தில் கிணறு, குளம் வெட்டுவதை ரொம்பவும் பெரிய தர்மமாக ஆதிநாளிலிருந்து ஸ்லாகித்துச் சொல்லியிருக்கிறது. இப்போது ராஜஸ்தான் ஸ்டேட்டில் சேர்ந்துவிட்ட ராஜபுதனம் ஒரே பாலைவனப் பிரதேசம் அல்லவா? அங்கே ஏழெட்டு மைலுக்கு ஒரு இடத்தில்தான் எவனாவது ராஜாவோ பிரபுவோ கிணறு வெட்டியிருப்பான். ரொம்ப ஆழத்தில், 'ஆதிசேஷன் தலைவரைக்கும்'என்பார்களே, அப்படிப் பாதாளம் வரைக்கும் தோண்டிக்கொண்டே போய்தான் இப்படி அபூர்வமாக எங்கேயாவது கிணறு வெட்டியிருக்கும். அந்தக் கிணற்றுக் கட்டைகளில் இந்த மஹா பெரிய தர்மத்தை இன்னான், இன்ன ராஜா காலத்தில் பண்ணினான் என்கிற details எல்லாம் ஸம்ஸ்க்ருதத்தில் கல்வெட்டுகளாகப் பொறித்திருக்கும். நம்முடைய ஹிஸ்டரி, கல்ச்சர் இவற்றை 'ஷேப்' பண்ணுவதற்கு ரொம்பவும் உதவியாயுள்ள இந்தக் கல்வெட்டுக்களுக்கு 'வாபீ ப்ரசஸ்தி' என்று பேர். 'வாபீ'என்றால் கிணறு; 'ப்ரசஸ்தி' என்றால் புகழ்மொழி. இப்போதும் ராஜஸ்தானியர்களான மார்வாரிகள் - அவர்களுக்கு ஜலக்கஷ்டம் நன்றாகத் தெரியுமாதலால் - கிணறு வெட்டும் தர்மத்தில் விசேஷமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

க்ராமப் புறங்களில் எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டலாம். இருக்கிற குளங்களைத் தூர் வாரி சுத்தம் பண்ணலாம். பெரியவன் சிறியவன் என்றில்லாமல் எல்லோரும் சேர்ந்து பண்ணுவது முக்யம். கோடீஸ்வரனானாலும், பெரிய பண்ணையாரானாலும் அவனும் மண் வெட்டிக் கொண்டு வந்து போட வேண்டும். சாஸ்த்ரங்களில் அப்படித்தான் எழுதியிருக்கிறது. அஸ்திவாரக் கல் நாட்டுவது, டேப் முதலானதுகள் சாஸ்த்ரத்தில் இல்லை. எத்தனை பெரியவனானாலும் அவனும் வாஸ்தவமாகவே உடம்பு வேர்க்க மற்றவர்களோடு ஸரி ஸமமாகப் பூர்த்த தர்மம் பண்ணவேண்டும். ரதோத்ஸவத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து வடம் பிடித்து இழுக்கிற மாதிரிதான் இதுவும்.

Tuesday 12 March 2013

யமனும் அஞ்சினான் & தமிழ் நாட்டு வள்ளல்கள்



யமனும் அஞ்சினான் !

அதிதியை தெய்வமாக நினைப்பது, அவனைக் கவனிக்காவிட்டால் தெய்வக் குற்றம் செய்த மாதிரி பயப்படுவது, இதெல்லாம் நம் மதத்தின் முக்யமான அம்சங்களாகும். யமன் என்றால் நாம் எல்லோரும் கதி கலங்குகிறோம். அப்படிப்பட்ட யமனே கதிகலங்கி விட்டதாகக் கடோபநிஷத்தில் ஒரு கதையில் வருகிறது. அவன் யாரிடம் பயப்பட்டான்? ஒரு சின்ன பிராம்மணப் பிள்ளையிடம் தான் பயப்பட்டான்! ஏன் பயப்பட்டான்? இந்தப் பையன் யமனுடைய க்ருஹத்துக்கு வந்து மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்துவிட்டான்! (அவன் ஏன் வந்தான் என்பது வேறு கதை) அதிதியருவனின வயிற்றுக்குப் போடாவிட்டால் அது மஹா அபசாரமாகுமே என்றுதான் ஸாக்ஷாத் யமனே பயந்து விட்டான். ஸர்வ லோகத்தையும் நடுங்கச் செய்கிறவன் இந்த வாண்டுப் பயலிடம் நடுங்கிக் கொண்டு வந்து, ''என் க்ருஹத்தில் நீ மூன்று ராத்திரி சாப்பிடாமல் இருந்து விட்டாய். இதனால் எனக்கு தோஷம் உண்டாகமல் இருக்க உனக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன் அப்பா. ஒவ்வொரு நாள் பட்டினி இருந்ததற்கும் ஈடாக ஒவ்வொரு வரம் வீதம் என்னிடம் நீ மூன்று வரம் வாங்கிக் கொள்'' என்று ப்ரார்த்தித்ததாக உபநிஷத் சொல்கிறது.

இங்கெல்லாம் 'பரோபகாரம்' என்று செய்கிறபோது இருக்கக்கூடிய 'ஸுபீரியாரிடி' மனப்பான்மை இல்லாமல், உபகாரத்துக்குப் பாத்திரனாகிறவனிடம் பயந்து பயந்து தாழ்ந்து, தெய்வத்துக்குப் பூஜை செய்கிற மாதிரி அவனுக்கானதைச் செய்வதையே பார்க்கிறோம். பரோபகாரத்தில் ஒரு முக்யமான அங்கமான ஈகையில் சிறந்தவர்களை நம் தர்மத்தில் தலைக்குமேல் வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம். எத்தனையோ துர்குணங்கள் இருந்தால்கூட கர்ணன் போன்றவர்களைக் கொடைக்காகவே போற்றுகிறோம்.



தமிழ் நாட்டு வள்ளல்கள்

தமிழ் தேசத்திலும் வள்ளல்கள் என்று இவர்களை தெய்வத்துக்கு ஸமானமாகக் கொண்டாடுகிற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது.'' முதலெழு-இடையெழு-கடையெழு வள்ளல்கள்'' என்று குமணன், அதியமான் முதலான 21பேரை ஸ்லோகித்துச் சொல்லியிருக்கிறது. காரி, பாரி ஓரி என்றெல்லாம் ஏழு பேரைக் கடையெழு வள்ளல்கள் என்பார்கள். பாரி வள்ளல் முல்லைக் கொடி படருவதற்காகத் தன் தேரையே கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். இன்னொருத்தன் (பேகன்) மயில் குளிரில் நடுங்குகிறதே என்று தன் உத்தரீயத்தையே எடுத்து அதற்குப் போர்த்தினானாம்.

அதியமானுக்கு சிரஞ்ஜீவித்வத்தைத் தரக்கூடிய நெல்லிக்கனி கிடைத்தது. 'நாம் சிரஞ்ஜீவியாக இருந்து என்ன ஸாதிக்கப் போகிறோம்? அவ்வைப் பாட்டி இருக்கிறாளே, ஸதாவும் லோக க்ஷேமத்தைப் பண்ணிக் கொண்டு, ஊர் ஊராக ஓடி குழந்தைகளுக்கு உபதேசம் செய்து வருகிறாளே, அவள் திடகாத்திரத்தோடு எத்தனை ஆயசு இருந்தாலும் அதுதான் லோகத்துக்கு நல்லது' என்று அவன் நினைத்து அவளுக்கே அந்த நெல்லிக்கனியை தானம் பண்ணிவிட்டான்.

'அதியமான் பண்ணியது புத்திசாலித்தனமாக இருக்கிறது. ஆனால் முல்லைக்குத் தேராவது? மயிலுக்கு எங்கேயாவது குளிருமா?அதற்குப் பட்டுப் பீதாம்பரத்தைப் போர்த்தவாவது? இதெல்லாம் புத்தி இல்லாத கார்யமாக அல்லவா இருக்கிறது?' என்று கேட்கலாம். என்னைக் கேட்டால், இப்படி புத்திக்கு வேலையே இல்லாமல் முட்டாள்தனம் மாதிரி கூடத் தோன்றுகிற கார்யங்களைச் செய்வதுதான் நிஜமான அன்பை, நிஜமான த்யாகத்தைக் காட்டுகிறது என்பேன். அன்பு பீறிக்கொண்டு வருகிறபோது மூளையினால் அதற்கு நியாய அநியாயங்கள் பார்க்க முடியாது. இப்படித்தான், நாயன்மார்களைப் பார்த்தால் பெண்டாட்டியையே ஒருத்தர் தானம் பண்ணினார், இன்னொருத்தர் பிள்ளையையே கறி பண்ணிப் போட்டார் என்கிறபோது, இதெல்லாம் மூடத்தனம், உணர்ச்சிக் கட்டுப்பாடில்லாத கார்யம் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படிப்பட்ட த்யாக சிந்தனை இருந்தது என்பதுதான் முக்யம். மூளையால் ஸமாதானம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் உருட்டிப் புரட்டிக் கொண்டு வந்துவிட்ட த்யாகம்தான் நிஜமான த்யாகம் என்று என் அபிப்ராயம்.

இம்மாதிரி ஆவேசமாகப் பரோபகாரம் பண்ணின பெரியவர்கள் நம் தேசத்தில் ஆதிகாலத்திலிருந்து அவிச்சின்னமாக (தொடர் முறியாமல்) வந்து கொண்டே இருந்திருக்கிறார்கள்.

த்யாகம் செய்கிறேன் என்ற எண்ணத்தையும் த்யாகம் செய்ய வேண்டும் என்று சொல்வதே நம் மதத்தின் சிறப்பு



வேதம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது யாகம்தான். யாகமும் த்யாகமும் ஒன்றுதான். இங்கிலீஷில்கூட யாகம், த்யாகம் இரண்டையும் 'ஸாக்ரிஃபைஸ்' என்றுதானே சொல்கிறார்கள்? ஆனதால், வைதிகம் என்பது தன்னலமே கருதுவது என்கிற அபிப்ராயம் அடியோடு பிசகு. தன்னலத்தை முழுக்க த்யாகம் பண்ணுவதுதான் ஸநாதன தர்மத்தின் லக்ஷ்யம். இங்கே 'தர்மம்'என்பதே மதம். வேத தர்மம், ஹிந்து தர்மம் என்றாலே வேதமதம், ஹிந்து மதம் என்றுதான் அர்த்தம். இதே 'தர்மம்' பரோபகாரங்களில் ஒன்றான ஈகையாக நினைக்கப்படுவதை முன்பே சொன்னேன். அதனால் நம் மதமே பரோபகாரமானதுதான்.

யாகத்திலே நெருப்பில் வஸ்துக்களை, உடைமைகளைப் போட்டு த்யாகம் பண்ணினால் தேவ சக்திகளுக்கு ப்ரீதி உண்டாகிறது. அவர்கள் லோகத்துக்கு மழை, ஸுபிக்ஷம் நல்ல எண்ணம் எல்லாவற்றையும் அநுக்ரஹம் பண்ணுகிறார்கள். ஒருவன் தன் உடைமையை வேள்வித் தீயில் த்யாகம் பண்ணி இப்படி லோக க்ஷேமத்தைச் செய்ய வேண்டும்.

சொத்து ஸ்வதந்திரங்களை நாமே வைத்துக்கொண்டு அநுபவிப்பதில் பெறுகிற ஸுகம் ரொம்பவும் தாற்காலிகமானது இந்தத் தாற்காலிக ஸுகம் நித்ய ஸெளக்கியமான ஆத்மாபிவிருத்திக்கு ஹானியாகவும் ஆகிறது. ஆனால் இதே உடைமைகளை நாம் வைத்துக்கொண்டு அநுபவிப்பதைவிட, கொடுத்து அநுபவித்தால், இதுவே பரம ஆனந்தத்தை தருகிறது;சாஸ்வத ஸெளக்யத்துக்கும் வழிகோலுகிறது. இதனால்தான் உபநிஷத்துக்களில் முதலாவதான ''ஈசாவாஸ்ய'' த்தில் முதல் மந்த்ரத்திலேயே, ''த்யாகம் பண்ணி அநுபவி'' என்று சொல்லியிருக்கிறது. காந்திகூட இதில்தான் தம்முடைய ஃபிலாஸஃபி முழுக்க இருக்கிறது என்று சொல்லி, இந்த உபநிஷத்தை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு ஸ்லோகித்து வந்தார்.

கொடுக்க வேண்டும். அதுதான் த்யாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவும் செய்து முடிக்கும்போது, ''நான் தான் கர்த்தா என்பதால் இதன் ப்ரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது'' என்கிற பரம த்யாக புத்தியில் ''ந மம'' - ''எனதில்லை; எனக்கில்லை''என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் த்யாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.

மற்ற வஸ்துக்களை கொடுத்துவிட்டு, ''நான் கொடுத்தேன்'' என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது த்யாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். த்யாகம் பண்ணவேண்டும்; அதைவிட முக்யமாக த்யாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் த்யாகம் பண்ணிவிட வேண்டும்.

மஹாபலி நிறையக் கொடுத்தான்; வாரி வாரிக் கொடுத்தான். ஆனால் தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தை அவன் பகவானுக்கு பலி கொடுக்கவில்லை. இதானால்தான் பகவானே அவனிடம் இந்த அஹங்காரத்தை யாசகமாகப் பெற்று,அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

''ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்''என்று சொல்லிக்கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அஹங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் இவனுக்கும் ப்ரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் ப்ரயோஜனமிராது. தாற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால் அது நின்று நிலைத்து விளங்காது.

"அதிதி தேவோ பவ" - மனஸை உருக்கும் புறாக்களின் கதை



''என்பும் உரியர் பிறர்க்கு'' என்று குறள் சொன்ன மாதிரி, தங்களுடைய ஸர்வத்தையும் பரோபகாரமாக த்யாகம் பண்ணவேண்டும். சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, ப்ராணனையே த்யாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்யமான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும். வேத பூமியான இந்த பாரத பூமியின் விசேஷம் மநுஷ்யனுக்காக மட்டுமில்லாமல் மற்ற ஜீவராசிகளுக்கும், பூச்சி பொட்டுகளுக்குங்கூட க்ஷேமத்தைக் கோரி த்யாகம் பண்ணச் சொல்வது. இதில் இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்குங்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், த்யாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம். புறாவுக்காக த்யாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம த்யாகத்தைக் 'கபோத உபாக்யானம்' சொல்லுகிறது. 'கபோதம்' என்றால் புறா என்று அர்த்தம். 'உபாக்யானம்' என்றால் சின்னக்கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனஸை ரொம்பவும் உருக்குவது.

வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும் அதன் ஜோடியான ஆண் புறாவும் வஸித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது நல்ல இருட்டாகி விட்டது. ஒரே குளிர் வேறு. வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.

இதைப் பார்த்த மரத்தின் மேலிருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்னியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர் மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பக்ஷியிடம் திரண்டு வந்துவிட்டது. நாம் வஸிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி 'அதிதி தேவோ பவ'- விருந்தாளியை தெய்வமாக நினை' என்பது வேத ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்' என்று நினைத்தது.

முதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்ட வேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் ஸரி, அவனுக்கு ஸெளகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.

'சிகிமுகி'கல் என்று ஒன்று உண்டு. 'சிக்கிமுக்கி'என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறார்கள். 'சிகி'என்றால் நெருப்பு என்று அர்த்தம். 'சிகை'உள்ளதெல்லாம் 'சிகி'தான். சிகையை விரித்துக் கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது? 'முகம்'என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் 'சிகிமுகி'.

இப்படிப்பட்ட சிகிமுகிக் கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது.

வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்ற வைத்துக் குளிர் காய்ந்தான்.

தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும் வேடனுடைய க்ரூர ஸ்வபாவம்கூட மாறி மனஸ் இளகிவிட்டது. தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை(பெண் புறா) விட்டு விட்டான்.

'விருந்தோம்பல் என்றால் முக்யமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்து விட்டுப் பட்டினி கிடந்தால் அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்' என்று பெண் புறா நினைத்தது.

அவனுடைய ஆஹாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆஹாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம ஸந்தோஷத்தோடு, அந்த அக்னியில் தானே விழுந்து ப்ராணத்தாயகம் பண்ணி விட்டது. நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புஜிக்கட்டும் என்ற உத்தம சிந்தை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பக்ஷியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது.

'' என்பும் உரியர் பிறர்க்கு '' என்ற மாதிரி இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபகரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரதங்களிலெல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.

ஏகாந்தியாக இருப்பவன் ஸமூகத்துக்கு பிரயோஜனம் இல்லாதவனா?




யோகம், ஞானம் என்று ஜனங்களையே விட்டுவிட்டு எங்கேயோ குகையில் உட்கார்ந்துகொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறானே அவன் கதை என்ன? 'இப்படிப்பட்டவனுக்கு பிக்ஷை போடாதே. அவன் ஸோஷல் ஸர்வீஸ் என்ன செய்கிறான்? ஸமூஹத்தைப் பிடுங்கி தின்கிறான் (parasite) என்றெல்லாம்கூட இந்த நாளில் கோஷம் போடுகிறார்கள். ஆண்டி, பண்டாரம், ஸந்நியாஸி என்று கிளம்பியிருப்பவர்களில் வேஷம் போடுபவர்களும் இருப்பார்கள்தான். அது வேறு விஷயம். ஆனால் வாஸ்தவமாகவே ஒருத்தன் ஆத்ம அபிவிருத்தி அடைவதற்காக ஏகாந்தமாக, ஸமூஹத்தை விட்டு, ஒரு தொழிலும் செய்யாமல் இருக்கிறான் என்றால் அவன் ஸமூஹத்துக்குப் பிரயோஜனம் இல்லாதவன்தானா?

இப்படி நினைப்பது முழுப் பிசகு. ஒவ்வொரு ஜீவனும் தன் மனஸை சுத்தப்படுத்திக்கொண்டு, அதை ஈஸ்வரனோடு ஈஸ்வரனாகச் சேர்த்துக் கறைக்கிற அளவுக்கு உயர்வதற்காகப் பாடுபடத்தான் வேண்டும். மற்ற ஜீவராசிகளுக்குச் செய்கிற பரோபகாரங்கூட அவர்களையும் கடைசியில் இப்படி ஆத்மார்த்தமாக உயர்த்தாவிட்டால், அத்தனை உபகாரத்தாலும் ப்ரயோஜனம் ஒன்றுமில்லை. ஆகையினால் நம்மில் ஒருத்தன் அப்படி உயரப் பாடுபடுகிறான் என்றால் அதுவே நமக்கு ஸந்தோஷம் தரத்தான் வேண்டும். நம் மாதிரி ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டு கஷ்டப்படாமல், இதிலிருந்து தப்பிக்கிறதற்கு ஒரு தீரன் முயற்சி பண்ணுகிறான் என்றால் அவனைப் பார்த்து நாம் பெருமைதான் படவேண்டும். அவனுடைய சரீர யாத்திரை நடப்பதற்கு அத்யாவச்யமான ஸஹாயத்தை நாம் செய்து கொடுக்கத்தான் வேண்டும். அப்புறம் அவன் நல்ல பக்குவம் அடைந்து யோக ஸித்தனாக, அல்லது பூர்ண ஞானியாக ஆகிவிட்டான் என்றால், அதன்பின்னும் அவன் கார்யத்தில் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணவே வேண்டாம். தன்னாலேயே அவனிடமிருந்து ஜனங்களின் தாபங்களையெல்லாம் தீர்க்கிற சக்தி வெளிப்படும்; radiate ஆகும். ஜனங்களின் மனஸுக்குத் தாப சாந்தி உண்டாக்குவதை விடப்பெரிய ஸமூஹ ஸேவை எதுவும் இல்லை.

ஒரு மஹானின் தர்சனத்தால் கிடைக்கிற இந்த சாந்தி, விச்ராந்தி தாற்காலிகமாக இருந்தால்கூட, அது பெரிய ஸோஷல் ஸர்வீஸ்தான். அப்படிப் பார்த்தால் எந்த ஸோஷல் ஸர்வீஸ்தான் சாச்வதமாயிருக்கிறது? எல்லாமே தாற்காலிகம்தான். தர்ம ஆஸ்பத்திரி வைத்து ஒரு வியாதிக்கு மருந்து கொடுத்து ஸரி பண்ணினாலும் அப்புறம் இன்னொரு வியாதி வரத்தான் வருகிறது. அன்ன சத்திரம் வைத்து ஒருவேளை சாதம் போட்டால், அடுத்தவேளை பசிக்கத்தான் பசிக்கிறது. அதனால் இந்த லோகத்தில் எல்லாமே தாற்காலிகம்தான்.

ஒருத்தன் பூர்ணத்வம் அடைந்துவிட்டால் மற்றவர்களின் மனஸின் கஷ்டத்தைப் போக்குவது, அதை சுத்தப்படுத்துவது தவிர, அவன் அவர்களுடைய லெளகிகமான வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றுகிற அநுக்ரஹ சக்தியும் பெற்றுவிடுகிறான்.

எந்த விதி (rule) இருந்தாலும், அதற்கு ஒரு விலக்கு ( exception ) இருக்கத்தான் செய்யும். அம்மாதிரி அத்யாத்ம மார்க்கத்தில் போகிறவர்களை - பக்தி, யோகம், ஆத்ம விசாரம் என்று தீவிரமாக இருக்கிறவர்களை - ஸோஷல் ஸர்வீஸில் இழுக்கக்கூடாது; அவர்களை 'பாரஸைட்'என்று திட்டக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.