Tuesday 19 March 2013

கூட்டாக பொதுத்தொண்டு செய்வதே உத்தமம்




செல்வந்தரிடம் நன்கொடை கேட்டு ஏன் தொல்லை பண்ணக்கூடாது.,நன்கொடை கேட்டு போவதில் பெரியவா கூறும் 'ட்ரிக்கு'கள்., கூட்டாக பொதுத்தொண்டு செய்வதே உத்தமம் போன்றவற்றைப் பற்றி மஹா பெரியவா 

செலவுக்கு என்ன செய்வதென்றால், பணக்காரனைத் தான் நம்பிக் கொண்டிருப்பது என்றில்லாமல், அவனவனும் ஒரு காலணாவாவது கொடுக்க வேண்டும். பணக்காரனும் சரீரத்தால் உழைக்க வேண்டும்; ஏழையும் திரவியத்தால் துளி உதவி பண்ண வேண்டும். இதுதான் நிஜமான த்யாகம். பணக்காரனை அதிகப் பணம் கேட்கவே கூடாது என்று எனக்கு அபிப்ராயம். காரணம் சொல்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் பணக்காரன் பாடுதான் ரொம்ப கஷ்டம் என்று தோன்றுகிறது. அந்தஸ்து (status) , பேர் இவற்றுக்காக அவன் அநேக கார்யங்களை இஷ்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்யவேண்டியதாக இருக்கிறது. இது ஒவ்வொன்றுக்காகவும் தண்டம் அழவேண்டியிருக்கிறது. பெரிய மநுஷன் என்று தெரிய வேண்டுமானால் அதற்கு அநேக 'கிளப்'களில் மெம்பராக வேண்டும். அதற்காக 'ஸப்ஸ்கிருப்ஷன்' செலவுகள். அப்புறம் ஏதாவது இரண்டு ஸ்கூல், காலேஜிலாவது எண்டோமென்ட் வைத்து ப்ரைஸ் கொடுக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கப்புறம் டைட்டில், கிய்ட்டில் வாங்குவதற்காக (நேரே அப்படித் தெரியுமால்) பல தினுஸுகளில் செலவு செய்ய வேண்டும். கார், பங்களா டிரஸ், பொழுதுபோக்குச் செலவுகள் வேறு. இவனுடைய கம்பெனியோ பண்ணையோ நன்றாக நடக்க வேண்டுமே, அதை உத்தேசித்து வெளியில் சொல்லக் கூடியதும் சொல்லக் கூடாததுமாகப் பலவிதங்களில் செலவு செய்ய வேண்டும். இது ஓரளவுக்குக் கடமை மாதிரியே ஆகிவிடுகிறது. 

இதெல்லாம் போதாது என்று (அரசியல்) கட்சிகள் வேறு டொனேஷனுக்கு வருகின்றன. அதிலும் இவனுக்கு வாஸ்தவத்திலேயே ஒரு கட்சியிடந்தான் அபிமானம், அது இருந்தால்தான் தனக்கு நல்லது என்று தோன்றினால்கூட அதற்கு மட்டும் டொனேஷன் கொடுப்பதோடு போக மாட்டேன் என்கிறது. இவனுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஒரு ஸமயத்தில் யாரிடம் நிர்வாஹம் இருக்கிறதோ, அவர்கள் இவன் தலையில் கை வைக்காமலிருப்பதற்காக அந்தக் கட்சிக்கும் நிறையக் கொடுத்துத் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது! இன்னும் அகத்தில் கல்யாணம், கார்த்திகை, ஃபீஸ்ட், அது இது என்றும் வாரிவிட வேண்டியிருக்கிறது. வரிகள் வேறு! செலவு செய்வதற்கும், தானம் ( gift ) பண்ணுவதற்கும் கூட வரி கொடுக்க வேண்டியிருக்கிறது. 

இந்த நிலையில் பாவம், மனஸார இவன் எந்த நல பணிகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறானோ, அதற்குத்தான் ரொம்பக் குறைச்சலாகக் கொடுக்கும்படியாக ஆகிறது. பேர், புகழ், மாதிரியான ஸமாசாரங்கள், ''பிஸினஸ் இன்டரஸ்ட்'' முதலானதுகள் அத்யாவசியமாகி விடுகின்றன. இப்படி இருக்க வேண்டாமே!' என்று நாம் சொல்லிப் பிரயோஜனமில்லை. நாமே அந்தப் பணக்காரனாக இருந்தாலும் இப்படித்தான் செய்வோம். இம்மாதிரி வேண்டாததற்குச் செலவழித்துவிட்டு, வேண்டியதற்குச் செலவு செய்ய முடியாதபோது, அவனுக்கே guilty -யாகத் தான் இருக்கும். 'இந்த ஸமயத்தில் நாம் வேறு போய் அவனிடம் யாசகம் கேட்டு அவனைக் கஷ்டப்படுத்துவானேன்? தனக்குப் பிடித்த கார்யத்துக்கே மனஸாரக் கொடுக்க முடியாத பரிதாபமான ஸ்திதியில் அவனைக் கொண்டுபோய் நாம் வைப்பானேன்?' என்று எனக்குத் தோன்றுகிறது.

ஸமூஹக் கார்யங்கள் என்றால் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் இந்தக் கார்யங்களுக்கு பேட்ரனாக இருக்கக்கூடிய பணக்காரர்கள் யார் என்று பார்த்தால் ஒவ்வொரு ஊர் அல்லது பேட்டையிலும் ஒரு பத்து, பன்னிரண்டு பேர்தான் இருப்பார்கள். இவர்களிடமே ஒவ்வொரு கார்யத்துக்கும் ரசீதுப் புஸ்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினால் அவர்களுந்தான் என்ன செய்வார்கள்? ஒன்று, வேண்டா வெறுப்பாகக் கொடுப்பார்கள். அல்லது விருப்பம் இருந்தும்கூட நிறையக் கொடுக்க முடியவில்லையே என்று துக்கப்படுவார்கள்.

நமக்கும் யோசனை வருகிறது; அந்தப் பணம் கணக்கில் வந்ததா, வராததா; கணக்கில் வராதது என்றால் அந்த மாதிரிப் பணத்தை தர்மத்துக்குப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாமா என்றெல்லாம் யோசனை வருகிறது.

ஆனதால், பணக்காரர்களை நம்பித்தான் ஸோஷல் ஸர்வீஸ் என்று வைத்துக் கொள்ளவே கூடாது. அவர்களாகவே காதில் விழுந்து கூப்பிட்டுக் கொடுத்தால் தாராளமாகவே வாங்கிக் கொள்ளலாம். நாமாகப் போய் பிடுங்கி எடுக்கக் கூடாது என்று தோன்றுகிறது.

இதில் இன்னொன்றுகூட. சில பணக்காரர்களே அதிகப் பங்கு செலவு ஏற்கிறார்கள் என்றால் அதனாலேயே அவர்களுக்கு ஸங்கத்தில் அதிக 'ரைட்'உண்டாகிவிடும். அவர்களுக்கு மற்றவர்கள் பவ்யப்படும்படியாக ஆகும். எதிலும் அவர்கள் சொல்லுவதுதான் முடிவு என்றாகிவிடும். இது கூடாது.

பொதுவாகவே பணத்தின் 'டச்' (ஸ்பரிசம்) வந்து விட்டால் அதோடு ஒரு காரியத்தில் அநேகக் கெடுதல்களும் வந்துவிடும். பொதுத்தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நல்ல ஆதரவு திரவிய ஸஹாயமாகவும் நம் கார்யத்துக்குக் கிடைத்தால்கூட அதனால் over-enthusiastic ஆகி (அதீத உத்ஸாஹம் அடைந்து) , இப்போது இந்தியா கவர்மென்ட் செய்கிற மாதிரி ambitious planning (அதி ஆசைத் திட்டம்) போட்டுப் நிறையப் பணம் 'கலெக்ட்'பண்ண ஆரம்பிக்கக் கூடாது. இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. இதனாலே பரோபகாரம் என்கிற அன்பு எண்ணத்தையும், அதில் அங்கமாகச் செய்கிற தேவாலய கைங்கர்யங்களின் பக்தி எண்ணத்தையுங்கூட 'வசூல் எண்ணம்'முழுங்கிவிடும். எப்போது பார்த்தாலும் ரசீது புஸ்தகமும் கையுமாக அலைவதும், 'பேப்பர்காரர்களைப் பிடித்து அப்பீல் பண்ணலாமா, அட்வர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா?'என்பதே சிந்தையாகத் தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும். 

நிறையப் பணம் சேர்ந்து அதைக் கையாள வேண்டியிருக்கும்போது நாமே எப்படி மாறிப் போய்விடுவோமோ என்ற பயம் ஸதாவும் இருக்கணும். அதுவுமில்லாமல், ரொம்பவும் பணம் சேர்ந்தால் ஊரிலிருப்பவர்களுக்கும் அது ஸரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற ஸந்தேஹம் எழும்பும். இதோடுகூட, சற்றுமுன் சொன்ன மாதிரி, இஷ்டமில்லாதவனையும் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதும், இப்படி வாங்கிவிட்டதால் அப்புறம் அவனிடம் பவ்யப்பட்டு நிற்பதும் நம் பணியையே அசுத்தம் செய்துவிடும். ஆனதால் எந்த நல்ல காரியமானாலும் 'அதி'யாக அதைக் கொண்டுபோய்விடாமல் அவசியத்தோடு நிறுத்திக்கொண்டு, செட்டும் கட்டும் சிக்கனமுமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வஹிக்க வேண்டும்.

பொதுத் தொண்டுக்கு மூல பலம் பணம் இல்லை, ஐக்யப்பட்ட மனம்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். பணம் கொடுத்தவன் என்று எவனையும் பிரகடனப்படுத்தி, அதனால் அவனுடைய புண்யபலன் போய்விடும்படியாகச் செய்து விடக்கூடாது. திருப்பூந்துறை அய்யனார் கோயிலில் குளம் வெட்டினபோது பணம் வசூலித்து, கூலி கொடுத்து, 'காமகோடி'பத்திரிகையிலும் நன்கொடைக்காரர்களின் பெயரைப் போட்டு விட்டார்கள். அடுத்த 'இஷ்யூ'விலேயே நான் கொட்டை எழுத்தில், ''இனிமேல் இப்படிப் பண பலத்தில் பண்ணாமல், ஆட்களின் அன்பு பலத்திலேயே பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் போட்டோம்'' என்று நாசூக்காக மன்னிப்பு, பச்சாத்தாபம் தெரிவிக்கிற மாதிரி 'பப்ளிஷ்' பண்ண வைத்தேன்.

திரவியம், தேஹம் இரண்டாலும்

கால் காசு ஐவேஜியில்லாமல்தான் சிவன் ஸமீபத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அவர் பெயரிலேயே அன்னதான என்பது ஒட்டிக்கொள்கிற மாதிரி, மஹா க்ஷேத்திரங்களில் நடந்த மஹோத்ஸவங்களிலெல்லாம் லக்ஷக்கணக்கான ஜனங்களுக்கு முட்ட முட்ட விருந்துச் சாப்பாடு போட்டிருக்கிறார். பரம த்யாகியாக இருந்து கொண்டு, கட்டின துண்டோடு ஊர் ஊராகப் போய் இவர் தனிகர்களை, மிராஸ்தார்களை, பண்ணையார்களைப் பார்த்து, ''இத்தனை மூட்டை அரிசி அனுப்பு; இத்தனை தூக்கு புளி அனுப்பு'' என்று சொன்னால் அதை ஒரு பாக்யமாக, ஆக்ஞையாக நினைத்து அவர்களும் அனுப்பி விடுவார்கள். உத்ஸவத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் வயிறார அன்னதானம் பண்ணி விடுவார். ஆனால் அவர் தாம் மாத்திரம் இந்த விருந்துச் சாப்பாட்டைத் தொடவே மாட்டார். ஏதோ கொஞ்சம் பழையதைததான நாலு வாய் உருட்டிப் போட்டுக் கொள்வார். அதனால்தான் அவர் சாமான்களைக் கொடுத்த தனிகர்களுக்கு பவ்யப்படாமல் இருக்க முடிந்தது. அவர்கள் இவரிடம் கை கட்டிக்கொண்டு நின்றார்கள். பரோபகாரம் என்று வரும்போது பணத்தைக் காட்டி ஒரு ஸுபீரியாரிடி ஏற்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்பவும் அவச்யம் என்பதற்காகச் சொன்னேன்.

பணக்காரர்கள் பரம த்யாகிகளாக, trustees (தர்மகர்த்தாக்கள்) மாதிரி, தங்கள் பணத்தை ஸமூஹக் காரியங்களுக்காகத்தான் ப்ரயோஜனப்படுத்த வேண்டும் என்பதே நம் தர்மம். மநு, திருவள்ளுவர் நாளிலிருந்து காந்திவரை இப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். இது வாஸ்தவத்தில் நடந்தால் கம்யூனிஸம், ரெவல்யூஷன் எதுவுமே இல்லாமல் லோகமெல்லாம் ஸந்தோஷமாக சாந்தமாக இருக்கும். இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போகவில்லை. ஆனாலும் அவர்கள் தாங்களாக தர்ம சிந்தையை வளர்த்துக்கொண்டு, பிரியப்பட்டு உபகாரம் செய்யத்தான் நாம் தூண்டுதலாகப் பிரசாரம் செய்ய வேண்டுமே தவிர அவர்களைப் போய் நிர்ப்பந்தப்படுத்த வேண்டாம். என்று தோன்றியதால் சொன்னேன். பாதி ஸீரியஸாகவும் பாதி விளையாட்டாகவும் சொன்னேன்.

இன்னொன்றுகூட நான் விளையாட்டாகச் சொல்வதுண்டு. பொதுக் கார்யம் செய்கிறவர்கள் இப்போது முதலில் இன்னின்னார் நிறைய உதவக்கூடும் என்று 'லிஸ்ட்' போட்டுக்கொண்டு அந்த வரிசைப்படி கலெக்ஷ்னுக்குப் போகிறார்கள் அல்லவா? இதில் அநேகமாக ஏமாற்றங்கள்தான் உண்டாகின்றன. நாம் ரொம்பவும் தாரளாமாகக் கொடுப்பான் என்று நினைக்கிறவனுக்கு ஏதாவது ச்ரமமிருக்கிறது. அல்லது மனஸில்லை. கையை விரித்துவிடுகிறான். அல்லது மூக்கால் அழுதுகொண்டு சுஷ்கமாகக் கொடுக்கிறான். உடனே நமக்குப் பணியிலேயே உத்ஸாஹம் குறைந்துவிடுகிறது. அந்த ஆசாமியைத் தூற்ற ஆரம்பிக்கிறோம். 

இதற்குப் பதிலாக நான் என்ன சொல்கிறேன் என்றால், யாரார் நன்கொடை தர மாட்டார்கள் என்று தோன்றுகிறதோ அவர்களை ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள், முதலில் இப்படிப்பட்டவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்கள் கையை விரித்து விட்டால் அதற்காக நமக்கு மனஸ் தளரப் போவதில்லை. ஏனென்றால் இது நாமே எதிர்பார்த்தது தானே? மாறாக அவர்கள் ஏதோ கொடுத்தாலும் கொடுக்கலாம்,

சில சமயம் அள்ளியும் கொடுக்கலாம். இப்படிக் கொடுக்க நேரிட்டால் நமக்கு உத்ஸாஹம் கரைகடந்துவிடும்! பணியில் இன்னும் தீவிரமாக இறங்குவோம். இப்படி என் வார்த்தைப்படி, கொடுக்காமல் இருக்கக்கூடியவர்களின் லிஸ்டைப் போட்டுக்கொண்டு முதலில் அவர்களிடம் வசூலுக்குப் போய், அப்புறம் கொடுக்கக் கூடியவர்களைப் பார்த்தவர்கள், பிற்பாடு என்னிடம் வந்து 'ஸைகலாஜிக'லாக இதில் தங்களுக்கு ரொம்பவும் த்ருப்தியும், உத்ஸாஹமும் உண்டானதாகச் சொல்லியிருக்கிறார்கள். யாசகக் கலையில் இப்படிப் பல 'ட்ரிக்கு'கள் இருக்கின்றன!

நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஏழையோ, பாழையோ, ஸமூஹத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரு காலணா அரையணாவாவது போட்டு எல்லோருமாகச் சேர்ந்தே பொதுக் காரியங்களுக்கான செலவுகளை ஏற்க வேண்டும். பணக்காரன் பணம் மட்டும் கொடுத்துவிட்டு, சரீரத்தால் உழைக்காமலிருந்தான் என்று இருக்கக்கூடாது; ஏழை சரீரத்தால் மட்டும் உழைத்து விட்டுப் பணம் கொடுக்காமலிருந்தான் என்றும் இருக்கக் கூடாது. பணக்காரன் ரூபாய் தருவதும், ஏழை சரீர கைங்கர்யம் செய்வதும் பெரிய த்யாகமில்லை. பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும்; ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக காலணா டொனேஷன் கொடுக்க வேண்டும். அதுதான் பெரிசு. ஸோஷல் ஸர்வீஸ் பண்ணும்போதே பண்ணுகிறவர்கள் மனஸில் உயர்ந்து வளர வேண்டுமானால் செலவு, உழைப்பு இரண்டிலுமே ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்க வேண்டும். ச்ரமதானத்துக்கு பலஹீனர்கள் மட்டும் எக்ஸெப்ஷன் (விதிவிலக்கு) .
எனக்கு தெரிந்த ஒரு ப்ராம்மணர். இரண்டே இரண்டு தென்ன மரம் உள்ள பூமிதான் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அதில் தானே மண்வெட்டி பிடித்து வேலை பண்ணினார். சாஸ்தரப் பிரகாரம் பண்ண வேண்டியது எதையும் இதற்காக விட்டுவிடவில்லை. காலையில் எழுந்து அக்னி ஹோத்ரம், பூஜை எல்லாம் செய்வார். அப்புறம் மண்வெட்டியும் கையுமாகப் போய் வேலை ஆரம்பித்து விடுவார். அந்த வேலை முடிந்த அப்புறம் மாத்யான்ஹிக ஸ்நானம் செய்து, பாக்கி கர்மாநுஷ்டானங்களும் பண்ணிவிட்டுச் சாப்பிடுவார். இப்படி தன் கையாலேயே உழைத்து இரட்டைத் தென்ன மர பூமியைத் தென்னந் தோப்பாகவே மாற்றிவிட்டார் பசங்களுக்கு இப்படி நல்ல பூ ஸ்திதி தேடி வைத்தார். நல்ல விருத்தாப்யம் வந்த பிற்பாடும், எண்பது எண்பத்தைந்து வயஸு வரைக்கும்கூடத் தோப்புக்குத் தினமும் போய்த் தன் கையால் வெட்டி கொத்தி வேலை செய்வதை அவர் நிறுத்தவில்லை. இப்போது திரவிய ஸெனகர்யம் ஏற்பட்டு, இவர் உழைத்துத்தான் ஆக வேண்டும் என்று இல்லாவிட்டாலுங்கூட, ''இந்தக் கார்யம்தானே நமக்கு இத்தனை அபிவ்ருத்தியைத் தந்தது? இதை விடப்படாது'' என்று சரீர உழைப்பில் பக்தி விச்வாஸம் வைத்து சாகிறவரை பண்ணி வந்தார்.

அவர் சொந்த நிலத்தில் வேலை செய்து அடைந்த ஸந்தோஷத்தைவிட ஜாஸ்தியாகவே பொதுத்தொண்டுகளில் சரீரத்தை சிரமப்படுத்தி வேலை பண்ணுவதில் நிறைவு கிடைக்கும். பண்ணிப் பார்த்தால் தெரியும்.

கொஞ்ச நேரமாவது குளம் வெட்டுவது, ஆலயத்தில் நந்தவனம் வைப்பது என்கிற மாதிரி ஏதோ ஒன்றில் தேஹத்தை ஈடுபடுத்த வேண்டும். கொஞ்சம் காசாவது இம்மாதிரி கார்யங்களுக்குச் செலவழிக்க வேண்டும். ஏழை வித்யார்த்திக்கு ஒரு பலப்பம் வாங்கிக் கொடுக்கலாம்; நாலு பிச்சைகாரர்களுக்குக் கூழ் வார்க்கலாம்; மோர்த் தண்ணியாவது நம் செலவில் கொடுக்கலாம்.

எந்த ஆஃபீஸானாலும் ஃபாக்டரியானாலும் வாரத்தில் ஒருநாள் லீவ் இருக்கிறதல்லவா? பள்ளிக்கூடம், கோர்ட் முதலியவற்றில் வாரத்துக்கு இரண்டு நாள் லீவ்கூட இருக்கிறது. இந்த லீவ் நாட்களெல்லாம் பொதுத் தொண்டுக்கு என்றே பகவான் கொடுத்திருப்பது என்று நினைத்து, கூட்டாகச் சேர்ந்து ஸேவை செய்யவேண்டும். மனஸ் மட்டும் இருந்துவிட்டால், செய்வதற்கு எத்தனையோ பணிகள் இருக்கின்றன.

No comments:

Post a Comment