Tuesday 12 March 2013

ஏகாந்தியாக இருப்பவன் ஸமூகத்துக்கு பிரயோஜனம் இல்லாதவனா?




யோகம், ஞானம் என்று ஜனங்களையே விட்டுவிட்டு எங்கேயோ குகையில் உட்கார்ந்துகொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறானே அவன் கதை என்ன? 'இப்படிப்பட்டவனுக்கு பிக்ஷை போடாதே. அவன் ஸோஷல் ஸர்வீஸ் என்ன செய்கிறான்? ஸமூஹத்தைப் பிடுங்கி தின்கிறான் (parasite) என்றெல்லாம்கூட இந்த நாளில் கோஷம் போடுகிறார்கள். ஆண்டி, பண்டாரம், ஸந்நியாஸி என்று கிளம்பியிருப்பவர்களில் வேஷம் போடுபவர்களும் இருப்பார்கள்தான். அது வேறு விஷயம். ஆனால் வாஸ்தவமாகவே ஒருத்தன் ஆத்ம அபிவிருத்தி அடைவதற்காக ஏகாந்தமாக, ஸமூஹத்தை விட்டு, ஒரு தொழிலும் செய்யாமல் இருக்கிறான் என்றால் அவன் ஸமூஹத்துக்குப் பிரயோஜனம் இல்லாதவன்தானா?

இப்படி நினைப்பது முழுப் பிசகு. ஒவ்வொரு ஜீவனும் தன் மனஸை சுத்தப்படுத்திக்கொண்டு, அதை ஈஸ்வரனோடு ஈஸ்வரனாகச் சேர்த்துக் கறைக்கிற அளவுக்கு உயர்வதற்காகப் பாடுபடத்தான் வேண்டும். மற்ற ஜீவராசிகளுக்குச் செய்கிற பரோபகாரங்கூட அவர்களையும் கடைசியில் இப்படி ஆத்மார்த்தமாக உயர்த்தாவிட்டால், அத்தனை உபகாரத்தாலும் ப்ரயோஜனம் ஒன்றுமில்லை. ஆகையினால் நம்மில் ஒருத்தன் அப்படி உயரப் பாடுபடுகிறான் என்றால் அதுவே நமக்கு ஸந்தோஷம் தரத்தான் வேண்டும். நம் மாதிரி ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டு கஷ்டப்படாமல், இதிலிருந்து தப்பிக்கிறதற்கு ஒரு தீரன் முயற்சி பண்ணுகிறான் என்றால் அவனைப் பார்த்து நாம் பெருமைதான் படவேண்டும். அவனுடைய சரீர யாத்திரை நடப்பதற்கு அத்யாவச்யமான ஸஹாயத்தை நாம் செய்து கொடுக்கத்தான் வேண்டும். அப்புறம் அவன் நல்ல பக்குவம் அடைந்து யோக ஸித்தனாக, அல்லது பூர்ண ஞானியாக ஆகிவிட்டான் என்றால், அதன்பின்னும் அவன் கார்யத்தில் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணவே வேண்டாம். தன்னாலேயே அவனிடமிருந்து ஜனங்களின் தாபங்களையெல்லாம் தீர்க்கிற சக்தி வெளிப்படும்; radiate ஆகும். ஜனங்களின் மனஸுக்குத் தாப சாந்தி உண்டாக்குவதை விடப்பெரிய ஸமூஹ ஸேவை எதுவும் இல்லை.

ஒரு மஹானின் தர்சனத்தால் கிடைக்கிற இந்த சாந்தி, விச்ராந்தி தாற்காலிகமாக இருந்தால்கூட, அது பெரிய ஸோஷல் ஸர்வீஸ்தான். அப்படிப் பார்த்தால் எந்த ஸோஷல் ஸர்வீஸ்தான் சாச்வதமாயிருக்கிறது? எல்லாமே தாற்காலிகம்தான். தர்ம ஆஸ்பத்திரி வைத்து ஒரு வியாதிக்கு மருந்து கொடுத்து ஸரி பண்ணினாலும் அப்புறம் இன்னொரு வியாதி வரத்தான் வருகிறது. அன்ன சத்திரம் வைத்து ஒருவேளை சாதம் போட்டால், அடுத்தவேளை பசிக்கத்தான் பசிக்கிறது. அதனால் இந்த லோகத்தில் எல்லாமே தாற்காலிகம்தான்.

ஒருத்தன் பூர்ணத்வம் அடைந்துவிட்டால் மற்றவர்களின் மனஸின் கஷ்டத்தைப் போக்குவது, அதை சுத்தப்படுத்துவது தவிர, அவன் அவர்களுடைய லெளகிகமான வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றுகிற அநுக்ரஹ சக்தியும் பெற்றுவிடுகிறான்.

எந்த விதி (rule) இருந்தாலும், அதற்கு ஒரு விலக்கு ( exception ) இருக்கத்தான் செய்யும். அம்மாதிரி அத்யாத்ம மார்க்கத்தில் போகிறவர்களை - பக்தி, யோகம், ஆத்ம விசாரம் என்று தீவிரமாக இருக்கிறவர்களை - ஸோஷல் ஸர்வீஸில் இழுக்கக்கூடாது; அவர்களை 'பாரஸைட்'என்று திட்டக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

No comments:

Post a Comment