Saturday 15 December 2012

வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவாளின் வேதனையும், வேண்டுகோளும்


வேதம் நிறைந்த தமிழ்நாடு 


வேதமிருந்தால்தான் லோகம் நன்றாக இருக்கும், ஆத்மாவும் க்ஷேமமடையும் என்பது என் அபிப்ராயம். இந்தப் பெரிய மூலதனம் இப்போது வீணாகப் போயிருக்கிற நிலை மாறி, இதை மறுபடி தழைக்கும்படியாகப் பண்ணவேண்டுமென்பதே எனக்கு ஸதா விசாரமாக இருக்கிறது.  நிர்ப்பந்தத்துக்காக இல்லாமல், ஆசையோடு ஆர்வத்தோடு நீங்கள் எல்லோரும் சேர்ந்து இது வேத பூமி என்பதை மறுபடி நிஜமாக்கப் பிரயாஸைப் படவேண்டும். தமிழ்நாட்டுக்கு இதை நான் முக்கியமாகச் சொல்கிறேன்.

வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.

திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திலுள்ள பஞ்ச மஹாயக்ஞங்களைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஒம்பல் தலை.

ராஜநீதி தவறினால் கோ-ப்ராம்மணர்களுக்கு க்ஷீணம் உண்டாகும் என்பது ஒரு முக்யமான வைதிகக் கொள்கை. கோ (பசு) வையும், பிராம்மணர்களையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், கோ தருகிற நெய், பால், சாணம் முதலியனதான் யக்ஞ திரவியங்களில் முக்யமானவை;யாகத்தைப் பண்ணுகிற அதிகாரம் பெற்றவர்களோ பிராம்மணர்கள்- என்பதுதான். இதே மாதிரி கோ-பிராம்மணர்களைத் திருவள்ளுவர் குறிப்பிட்டு, அரசின் நீதித் தண்டம் தவறினால், இந்த இருவராலும் கிடைக்கிற லோக உபகாரம் வீணாகிவிடும் என்கிறார்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

'ஷட் கர்ம நிரதர்'என்று பிராம்மணர்களுக்கு உள்ள வைதிகமான பெயரை, அப்படியே மொழிபெயத்து "அறு தொழிலோர்"என்கிறார். அத்யயனம்-அத்யாபனம் (தான் வேதம் ஒதுவது-பிறருக்கும் ஒதுவிப்பது) ; யஜனம்-யாஜனம் (தான் வேள்வி செய்வது-பிறருக்கு வேள்வி செய்விப்பது) :தானம் - ப்ரதிக்ரஹம் (வேள்வியில் தானே தக்ஷிணை தருவது;இம்மாதிரி செலவழிப்பதற்கு வேண்டிய மூலதனத்துக்காகவே பிறத்தியாருக்கு சிக்ஷை  சொல்லி முடித்தபின் அவர்களிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொள்வது) என்ற ஆறும் தான் பிராம்மணனுக்கு உரிய ஷட்கர்மாக்கள். இது மநுஸ்மிருதியில் சொன்னது. தர்ம சாஸ்திரங்களில் இன்னொன்றான பராசர ஸ்மிருதியில் வேறு தினுசாக ஆறு கர்மாக்களை பிராம்மணனின் நித்யப்படியாக (daily routine -ஆக) சொல்லியிருக்கிறது.

ஸந்த்யா-ஸ்நானம் ஜபோ ஹோமம் தேவதானாம் ச பூஜனம்|
ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட்கர்மாணி தினே தினே|

ஒன்று ஸந்தியாவந்தனம்;அதை ஸ்நானத்தோடு செய்ய வேண்டும். ப்ராம்மணன் பச்சைத் தண்ணீரில் முழுகப் பயப்படவே கூடாது. எப்போது பார்த்தாலும், தினமும் இரண்டு மூன்று வேளையும் ஸ்நானம் செய்யவேண்டும். ப்ராத ஸ்நானம் (விடியற்காலை) , மாத்யான்னிக ஸ்நானம் (பகல்) ஸாயங்கால ஸ்நானம் என்று பண்ண வேண்டும். இப்படி மூன்று வேளையும் ஸ்நானம் பண்ணியே அந்தந்த வேளைக்கான ஸந்தியா வந்தனம், அப்புறம் ஸ்நானம் என்று சொன்னதால், ஸந்தியா வந்தனம் பண்ணிவிட்டுப் பிறகு ஸ்நானம் செய்யவேண்டும் என்று குயுக்தி பண்ணக் கூடாது...

ஆறு தொழில்களில் முதலாவது ஸந்த்யா-ஸ்நானம். இரண்டாவது ஜபம் - அநேக மஹாமந்திரங்களை, அவரவர் குலதேவதை இஷ்டதேவதை முதலியவற்றின் மந்திரங்களை ஜபிப்பது. மூன்றாவது ஹோமம், அதாவது யக்ஞம். நாலாவதாக தேவதா பூஜனம் - கந்த, புஷ்ப, தூப, தீப, நிவேதனங்களால் ஈச்வரனை வழிபடுவது. ஐந்தாவதாகச் சொன்ன ஆதித்யம் என்றால் அதிதியை உபசரிப்பது.. அதாவது விருந்தோம்பல். கடைசியில் வைச்வ தேவம். பஞ்சமனும், நாய் முதலான ஜந்துக்களும் உள்பட ஸகலப் பிராணிகளுக்கும் பலி போடுவது வைச்வதேவம்.

இப்படிப் பண்ணுபவர்களைத்தான் 'அறுதொழிலோர்'என்று ரொம்பவும் பெரியவரான வள்ளுவர் சொல்கிறார். கெட்ட ராஜ்யத்தில் பிராம்மணர்கள் வேத அத்யயனம் பண்ண மாட்டார்கள், வேதத்தை மறந்து விடுவார்கள் என்கிறார் - அறு தொழிலோர் நூல் மறப்பர். பிராம்மணர்கள் வேதத்தை மறக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்ட நல்ல ராஜ்யம் ஏற்படவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது.

தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது.

தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. 'யஜனம், யக்ஞம்' என்பனவற்றுக்கு 'வேட்டல், வேள்வி'என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. 'சயனம்'என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் 'பரப்பு'என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது. 

இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் 'கிறிஸ்துவ வேதம்' என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால் வேத யக்ஞத்தைத் தவிர வேறே 'வேள்வி'என்று ஒன்று கிடையவே கிடையாது. 'வேள்வி' என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே 'மறை'என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.

இந்த 'மறை' என்ற வார்த்தை ரொம்பவும் ஆழமான, பொருத்தமான பொருள் கொண்டதாகும். வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்கிறது;உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக 'உபநிஷதம்'என்று குறிப்பிட்டிருக்கிறது. வேதியர்கள் தங்களுக்குள்ளயே ஜாக்ரதையுடன், கொஞ்சமும் அம்பலப் படுத்தி விடாமல் மறைவாக ரக்ஷிக்க வேண்டிய சில பாகங்களை மட்டுமே வேத, உபநிஷத்துக்கள் இப்படிச் சொல்கின்றன. தமிழ் இன்னம் ஒரு படி மேலே போய் வேதம் முழுதையும் 'மறை' என்று சொல்லிவிட்டது!

'மறை'என்றால் மறைத்து ரஹஸ்யமாகக் காப்பாற்றப்பட வேண்டியது என்று அர்த்தம். வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர்களிடம் மட்டும் பேசிற்று. 'இன்னின்ன பாகங்களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள் என்று அதிகாரிகளுக்குச் சொல்லிற்று. தமிழ் பாஷை வேதியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஸமஸ்த ஜன சமூகத்தையும் எடுத்துக் கொண்டு பேசும்போது, எப்படி வேதமானது பிராம்மணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக ரட்சிக்க வேணடும் என்கிறதோ, அதே மாதிரி ஸகல வர்ணத்தாரையும் எடுத்துக் கொள்கிறபோது வேதம் முழுதையும் அதில் அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமில்லாதவர்களிடமிருந்து ரஹஸ்யமாக ரட்சிக்க வேண்டும் என்று கருதியே, முழு வேதத்துக்கும் "மறை" என்று பேர் கொடுத்து விட்டது!அதை எல்லாருக்கும் என்று democratise பண்ணிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் ஜனங்களின் தொன்று தொட்ட அபிப்ராயம் என்பது "மறை"என்ற இந்த வார்த்தையிலிருந்தே தெரிகிறது.

இன்னொரு விதத்திலும் 'மறை' என்று பெயர் பொருத்தமாயிருக்கிறது. வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது. ஆத்யாத்மிகமாக அதனால் அடையப்படும் பிரயோஜனங்கள் இப்போது மறைந்திருந்து பிற்பாடுதான் வெளிப்படும். இதனால் வேதமானது 'அதிருஷ்ட பலனை'ச்சொல்வது என்பார்கள். திருஷ்டியில் தெரியாதது தான் அதிருஷ்டம். தெரியாதது என்றால் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?எதன் பலன் இப்படி மறைந்திருக்கிறதோ அதை "மறை" என்றே சொல்லி விட்டார்கள்.

நம் மதத்துக்கு வேதம் வேர். பக்தி, கோவில், தியானம், ஞானம் எல்லாவற்றுக்கும் மூலம் அது. மூலம் என்றால் வேர் என்றே அர்த்தம். கோவில், பக்தி, பூஜை முதலான மற்றதெல்லாம் வெளியே தெரிகிற அடிமரம், கிளை, பூ, காய், பழம் என்றால் வேதம் வேர். அதனால்தான் அடிமரம் முதலானவை இருக்கின்றன. வளர்கின்றன. ஆனால் வேர் இவற்றைப் போல் வெளியில் தெரியாமல் பூமிக்குள்ளேதான் ஒடிக்கொண்டு மறைவாக இருக்கிறது. இவ் விதத்திலும் மறை என்ற பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.

'ஒத்து'என்றும் வேதத்துக்கு அழகான, அர்த்த புஷ்டியுள்ள தமிழ்ப் பேர் இருக்கிறது. எது எழுதப்படாமல், வாய்மொழியாகவே, அதாவது ஒதப்பட்டே அப்யஸிக்கப் படவேண்டுமோ அதுதான் "ஒத்து". திருக்குறளில் இந்தப் பேர் இருக்கிறது. வடார்க்காடு ஜில்லாவில் திருவோத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஞானஸம்பந்தர் அங்கே ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றினார். திருஒத்து-ஊர் என்பதே திருவோத்தூர் என்பது. வேதங்கள் பரமேச்வரனைப் பூஜை பண்ணின க்ஷேத்ரமாதலால் இப்படி பேர் ஏற்பட்டது. ஸம்ஸ்கிருதத்தில் அதற்கு 'வேதபுரி' என்று பெயர் இருக்கிறது.

மறை, ஒத்து, என்பது போல் "ஆரணம்" என்ற பெயரும் வேதத்துக்கு தமிழ் பாஷையில் இருக்கிறது. "ஆரணன்காண்"என்று அடிக்கடி திருமுறைகளில் வரும். 'வேத வாக்கோ!' என்று கேட்பது, தர்மசாலையை 'சத்திரம்' என்பது, முதலாளியை 'யஜமான்'என்பது, 'ஸாங்கோபாங்கம்'என்பது - இப்படி நடுவே நடுவே நான் சொன்ன ¢நேக விஷயங்களும், வைதிக அநுஷ்டானங்கள் தமிழ் தேசத்தில் எப்படி வேரோடியிருக்கிறது என்று காட்டுகின்றன. எழுதி வைக்காமல் குரு-சிஷ்யன் என்று தலைமுறை தத்துவமாகக் காதால் கேட்டே பாடம் பண்ணப்பட வேண்டிய வேதத்துக்கு 'ச்ருதி'என்று ஸம்ஸ்கிருதத்தில் பேர் இருக்கிறதென்றால், தமிழிலோ 'எழுதாக் கிளவி' என்று இன்னம் அழுத்தமான பேர் இருக்கிறது. 'ச்ருதி என்றால் 'கேட்கப்படுவுது'. இப்படி சொல்வதாலேயே 'எழுதப்படக்கூடாதது'என்று ஊகித்துக் கொள்ளும்படியாக விட்டு விட்டார்கள்.

ஆனால் தமிழிலோ வேதத்தை எழுதக்கூடாது என்று வெளிப்படையாக தெரியும்படியாக 'எழுதாக் கிளவி' என்று பேர் வைத்திருக்கிறது. வேதம் அதற்குள்ள நியமப் படியே ரக்ஷிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசத்துக்கு அவ்வளவு உறுதியிருந்திருக்கிறது!

சங்க காலத்துக்கு அப்புறம் பார்த்தாலும், சேர சோழ, பாண்டிய, பல்லவ ராஜாக்கள், எங்கே பார்த்தாலும் பிராம்மணர்களுக்கு 'இறையிலி'யாக (வரியில்லாததாக) நிலம் கொடுத்து ரட்சித்திருக்கிறார்கள். கடிகை என்றும், பாடசாலை என்றும் நிறைய வைத்து, ஏராளமாக மான்யங்கள் தந்து வேத வித்யைகளை வளர்த்திருக்கிறார்கள். தமிழ் மறைகளாக முறையே சைவர்களும், வைஷ்ணவர்களும் கொண்டாடுகிற தேவாரத் திருமுறைகளையும் திவ்வியப் பிரபந்தங்களையும் பார்த்தாலோ, ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது.

திவ்யப் பிரபந்தத்திலும் அநேக இடங்களில் ஒரு பெருமாள் க்ஷேத்திரத்தை வர்ணிப்பதானால், யக்ஞத்தில் எழும்புகிற ஹோமப் புகையே மேகங்கள் மாதிரி ஆகாசம் முழுதையும் அடைத்துக் கொண்டிருக்கிற ஊர் என்று அதை வர்ணித்திருக்கும். இங்கேயும் ஜாதி வித்யாஸம், ஜாதி த்வேஷங்கள் இல்லாமல், அப்ராம்மணர்களான ஆழ்வார்களும் வேதங்களின் பெருமையைப் பாடியிருக்கிறார்கள். பிராம்மணரில்லாதவரான திருமங்கையாழ்வார்தான் பெருமாளையே,

சந்தோகன், பௌழியன், ஐந்தழலோம்பு
தைத்திரீயன், சாமவேதி!

என்று வேத சாகைகளைச் சொல்லி அவற்றால் துதிக்கிறார். அப்பர் 'முக்தீ'யைச் சொன்னார் என்றால், இவர் இன்னும் சூக்ஷ்மமாக வைதிக ஆசரணைகளைத் தெரிந்து கொண்டு, பிராம்மணர்களிலேயே ரொம்பவும் விஷயம் தெரிந்தவர்கள் அந்த மூன்றோடு ஸப்யம், ஆவஸத்யம் என்ற வேறு இரண்டு அக்னிகளைச் சேர்த்துப் பஞ்சாக்னி வளர்ப்பதை 'ஐந்தழல் ஒம்புவது' என்கிறார். ஒமாம்புலியூரைத் தேவாரத்தில் சொன்ன மாதிரியே திருநாங்கூர், திருநறையூர் முதலான க்ஷேத்திரங்களை இவர் வேத விதி வழுவாத பிராம்மணர்களின் ஊர் என்பதற்காகவே திரும்பத்திரும்பப் போற்றிப் பாடியிருக்கிறார்.

தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லி, "இப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றிஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது.

'நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது;வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்'என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்?அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் - அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை;யதார்த்த ஞானமும் இல்லை. 

ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, "பகுத்தறிவு, பகுத்தறிவு"என்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், இப்படி பிரத்யக்ஷத்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது!ஒரு பக்கத்தில்  'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம், ஆதிகாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட ஸநாதனமான ஸமாசாரங்களைக்கூட எப்படியாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை என்று நினைக்கிறோம்!

மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிருந்து காவேரி வருகிறது, வெளிதேசத்திலிருந்து உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து வருகிறது என்றால், அதெல்லாம் வேண்டாம்; உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்;உள்ளூர் மருந்தானால்தான் சாப்பிடுவோம்'என்று உயிரை விடுவார்களா?நமக்குப் பெரிய ரக்ஷையாக இருக்கிற மந்திரங்களில் பாஷையைக் கொண்டுவந்து, அந்நியம் எனறு ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நியமாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான்.

இன்றைக்கு கேரளாவில் ஜாஸ்தி வேதாத்யயனம் இருப்பதற்குக் காரணம், ஆதியில் அது தமிழ் நாடாக இருந்ததுதான். அதே மாதிரி, ஸமீபத்தில் தமிழ் நாட்டைவிட ஆந்திராவில் வேதாத்யயனம் அதிகம் இருந்தாலும்கூட, ஆதியில் ஆந்திரர்களுக்கும் சோழர்களுக்கும் கல்யாண சம்பந்தம் ஏற்பட்டபோது, அந்தத் தெலுங்கு ராஜாக்கள் தமிழ் நாட்டிலிருந்தே ஏராளமான வேத வித்துக்களை அழைத்துக் கொண்டு போய்த்தான் தங்கள் தேசத்தில் வைதிகஸ்ரீயை விருத்தி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஏதோ துர்பாக்கியவசமாகத்தான் இப்போது மற்ற திராவிட மாகாணங்களைவிடத் தமிழ்நாட்டிலேயே வைதிக த்வேஷம் தலை தூக்கியிருந்தாலும், பூர்வத்தில் அந்தச் சீமைகளுக்கும் வேத வித்யை இங்கிருந்துதான் போயிருக்கிறது. ஆந்திராவில் 'த்ராவிடலு'என்று பேர் போட்டுக் கொள்கிற பிராம்மணர்கள், ஆதியில் தமிழ்நாட்டிலிருந்து போன குடியினர்கள்தான்.

தமிழ்நாட்டில் ஆதிகாலத்திலிருந்து இருந்து வந்திருக்கிற மதம் உள்பட , சைவம், வைஷ்ணவம், சாக்தம் முதலிய ஷண்மதங்கள்; ஸாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் முதலிய ஸித்தாந்தங்கள்;மந்திர தந்திர ஆகமங்கள் எல்லாமே வேதத்தை ஆதாரமாகக் கொண்டவைதான்;வேதப் பிராமாண்யத்தை ஒப்புக் கொள்கிறவைதான். நவீன ஆராய்ச்சிக்காரர்கள் வேதம் வடக்கிலிருந்து வந்ததாகவும், தென்னாட்டில் வேறு மதமும் வேறு முதல் நூல்களும் இருந்தததாகவும் சொல்லி, அவர்கள் ஆரியர்கள், இவர்கள் திராவிடர்கள் என்று பெயர் கட்டிவிட்டுச் சண்டையைக் கிளப்பிவிட்டிருப்பதற்கெல்லாம் உண்மையாக ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களையும், தமிழின் பழ நூல்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆதாரமேயில்லை. சாஸ்திரங்களை மூடநம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு ஏமாந்து போகக்கூடாது என்று இந்த நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கடைசியில், இப்போது ஏற்பட்டிருக்கிற நிலைமை என்ன என்றால், இவர்கள் தாங்களே பகுத்தறிவோடு, ஸயன்டிஃபிக்காகச் சொல்கிறோம் என்று அடித்துச் சொல்லிவிட்டதால், அநேக ஜனங்கள் இவர்கள் சொல்வதையே ஆராய்ச்சி பண்ணாமல், 'இதுதான் சரி'என்று வெறும் நம்பிக்கையின் மேலேயே ஏற்றுக்கொண்டு நிஜமென நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின் மீதே அனுஸரிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

அவற்றை அறிவால் ஆராயக் கூடாதுதான். ஆனால் அவற்றில் நன்றாக பகுத்தறிவோடு ஆராய்ந்து பார்க்கிற பகுதிகளும் உண்டு. அதோடு சேர்த்துச் சேர்த்து நம் தாய் பாஷைகளில் உள்ள ஆதி நூல்களையும் அலசி அலசிப் பார்த்தாலோ, இந்த ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிற race theory (ஆரிய திராவிட இன பேதக் கொள்கை) , தமிழ் மதம் வேறே என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அடிபட்டுப் போய்விடுகிறது. இப்படியெல்லாம் நம் தேசத்தில், நல்லதற்கில்லாமல் அநேக தப்பபிப்ராயங்கள், த்வேஷம், சாஸ்திரத்தில் அவநம்பிக்கை ஆகியன ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. இதெல்லாம் போய் இங்கே ஸமஸ்த லோகங்களுக்கும் ஸமஸ்தப் பிராணிகளுக்கும் க்ஷேமத்தைத் தரக்கூடியதான வேத மரபு மறுபடி நன்றாக தழைக்கவேண்டும். இதுதான் நாம் பரமேச்வரனிடம் எப்போதும் செய்துகொள்ள வேண்டிய பிரார்த்தனை.

இப்போதே அநேத வேதசாகைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. மற்றவையும் அழியும்படி விடவே கூடாது. இதைவிடப் பெரிய ட்யூட்டி, கடமை எதுவும் நமக்கில்லை. நமக்கிருக்கிற புத்தி பலம், திரவிய பலம், கூட்டுறவு சக்தி எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நாம் பண்ணவேண்டிய காரியம், தற்போது எங்கெங்கேயோ கொஞ்சம் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருக்கும் வேத சாகைகள் எல்லாம் அழிந்து போய்விடாதபடி, அவைகளுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உயிரூட்டுவதுதான்.

No comments:

Post a Comment