Sunday 12 May 2013

' இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' - (பகுதி 2 - ஆவி பிரியும் காலத்தில்)



ஆத்மா என்ற மாறாத ஸத்யத்தின் நிலையிலிருந்து பார்க்கிறபோது சரீரமும் சாவும் துச்சம்தான்; அவை ஒன்றுமே இல்லை. ஆனால் நாம் மாறாத ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாகத்தானே இருக்கிறோம்? நமக்குத் தெரிந்தது மாறிக்கொண்டே இருக்கிற இந்த மனஸும், மாறிக்கொண்டே இருக்கிற இந்த ப்ரபஞ்சமும்தானே? சாவு உண்டாகி அடுத்த ஜன்மா ஏற்படுகிறபோது இந்த ஜன்மாவிலே இந்த ப்ரபஞ்சத்திலே நமக்கு இருந்த தொடர்புகளெல்லாம் துண்டித்துப்போய், வேறு புதுத் தொடர்புகள் உண்டாகின்றன. இதே இடத்தில் இதே குடும்பத்தில் நாம் மறுபடியும் பிறந்தால்கூட நமக்கு அது தெரியப்போவதில்லை. ஆனால் இப்படி இங்கேயேதான் பிறப்போம் என்று சொல்ல முடியாது. வேறே சூழ்நிலையில், வேறு தினுஸான மதத்தில், நாகரிகத்தில், ஸம்ப்ரதாயத்தில் போய்ப் பிறந்தாலும் பிறப்போம்.

ஆத்மா மாறாதது என்றாலும் நமக்கு அது தெரியாத விஷயம். மனஸின் ஆட்டங்கள்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம். அந்த மனஸின் வளர்ச்சி - அது நல்ல வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி, கெட்ட வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி - பெரிய அளவுக்கு சூழ்நிலையினால் உருவாக்கப்படுகிறது. இந்த ஆயுஸ் பூராவும் நாம் ஒருமாதிரி சூழ்நிலையில் பழகி வளர்ந்து விட்டோம். குறிப்பிட்ட ஸம்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு விட்டோம். குறிப்பிட்ட ஸம்ப்ரதாயங்களை அநுஸரித்து அவற்றில் ஒட்டிக் கொண்டு விட்டோம். இதெல்லாம் சாவோடு கத்தரித்துப் போகிறது என்பதைப் பார்க்கிறபோது, (சாவு ஆத்மாவைக் கொஞ்சம்கூட பாதிப்பதில்லை என்றாலும்) ஆத்மாவாக இருக்கத் தெரியாத நம்மை ரொம்பவும் பாதிக்கத்கதானே செய்கிறது?'அடுத்த ஜன்மாவில் எந்த மாதிரிப்பிறவி ஏற்படுமோ? எந்த மாதிரிச் சூழ்நிலையில் பிறப்போமோ?' என்று பெரிய கேள்வியாகத்தானே இருக்கிறது? ' இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' என்று பெரிய பெரிய மஹான்களே பயப்பட்டிருக்கிறார்களே!

இதனால் பகவான் ஒரு ஜீவனுடைய தொடர்புகள் அடியோடு மாற இருக்கிற அந்த மரண ஸமயத்தில் ''ஐயோ, பாவம்! இந்த ஜீவன் மறுபடியும் ஜன்மா இல்லாமல் பண்ணிக்கொள்ளாமலேயே உயிரை விடுகிறது. இப்பொழுது முழுக்க வேறு தினுஸான சூழ்நிலையில் பிறந்து, 'அடியைப் பிடிடா பாரதபட்டா' என்று ஆத்மாபிவிருத்திக்கான கார்யத்தை இது ஆரம்பித்தாக வேண்டும். இந்த ஜன்மாவின் கர்மாதான் அடுத்த ஜன்மாவிலும் துரத்திக்கொண்டு வரும் என்பது வாஸ்தவமானாலும், அடுத்த ஜன்மாவில் சூழ்நிலை வேறுதானே? அதிலே இது பழைய கர்மாவைக் கழித்துக்கொண்டு மேலே போகுமா அல்லது இன்னும் கெட்ட கர்மாவைப்பண்ணி வீணாகுமோ?' என்று பரம கருணையோடு நினைப்பான போலிருக்கிறது. இப்படி பகவானே இரக்கப்பட்டுத்தான் ரொம்பவும் பெரிய மனஸோடு, ''ஸரி, இந்தச் சாகிற ஸமயத்தில் இது நம்மை நினைத்துவிடட்டும். அது போதும். இதற்கு மறுபடியும் ஜன்மா இல்லாமல் நாமே எடுத்துக்கொண்டு விடலாம்''என்று பெரிய 'கன்ஸெஷன்' தந்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப்பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீக்ஷை வைத்துக் கொள்ளலாம்.

அதாவது:

அன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. 'நித்யப் பிரளயம்' என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் 'சாகிற'போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு 'சாக' முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸவாமியோ, முருகனோ - எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், 'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?' என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறேங்கேயாவதுதான் போய் விழும்; அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடமால் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.

ஆக வாழ்நாள் பூராவும் எதிலே ரொம்பவும் ஈடுபாடு இருக்கிறதோ, அதுதான் அந்திமத்திலும் ஒருத்தனை இழுக்கும். வாழ்நாள் முழுவதும் பகவத் சிந்தனையோடு இருந்தால்தான் கடைசியிலும் அது ஸித்திக்கும். ஸரி, அது தானாகவே ஸித்தித்துவிட்டுப் போகிறது. ஒருவன் ஜீவியகாலம் முழுவதும் ஈஸ்வர பக்தி பண்ணிக்கொண்டேயிருந்தால், கடைசியில் இவன் படுக்கையில் விழும்போதும் தானே, 'ஆடோமாடிக்'-ஆக அதே ஸ்மரணந்தான் இருக்கப்போகிறது. ஆனதால் ''ஸர்வகாலத்திலும் என்னை நினை'' என்று சொன்ன க்ருஷ்ண பரமாத்மா ''அந்திமத்திலும் என்னை நினை'' என்று ஒன்றைச் சேர்த்திருக்க வேண்டாமே? ஸர்வகால ஸ்மரணை தானாக அந்திமத்திலும் வந்துவிட்டுப் போகிறது!

இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி ( short-cut ) சொன்னமாதிரி இருக்கிறது. 'ஒருத்தன் அந்திமத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்' என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.

யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே களேவரம்
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித :

இப்படிச் சொல்கிறபோது, வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் ஸரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப்பின் அடைந்து விடுவான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் இருக்கிறது.

வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுவரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால் இப்படியில்லாமல், அஸாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று ப்ரணன் போகிறபோது நினைப்புக்கு வந்துவிட்டால்? இப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு ஸ்வாமி கொடுத்துவிடுகிறார். 'இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!' என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்யத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.

வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற ஸமயத்திலே ஈஸ்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப 'ஷார்ட்-கட்'தானே?

ஆனால் வாழ்நாள் முழுக்க நினைத்ததுதானே அந்திமத்தில் வரும்? அதெப்படி வேறு ஒரு நினைப்பு அப்போது வரும்? இது எப்படி 'ஷார்ட்-கட்'? சும்மாவுக்காக 'ஷார்ட்-கட்' மாதிரி பகவான் ஏமாற்றுகிறாரா?

இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது; அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்!

இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது-அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால் அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா "சுரீல்" என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்; அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ''ஹர ஹர மஹாதேவா'', ''ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே'' என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலைபாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால், அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான ( effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட, நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ? உயிர்கொண்டு போம் பொழுது?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்(கு) உற்றார் ஆர்உளரோ ?

என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective -ஆக ''கடைசியில் எதெதை நினைத்தாலும் அத்தை அடைகிறான்'' என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.

எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

கடைசிகால ஈஸ்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால் கூடப் பாவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்; நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.

புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா?இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.

இந்த மஹா பெரிய தர்மத்தை, ஈடில்லாத உபகாரத்தை, முதலில் சொன்னேனே, வாவழிபாடு, ஜீவாத்ம கைங்கர்யம், மற்ற பரோபகாரங்களுக்காக ஸங்கமாகச் சேரவேண்டும் என்று, இந்த ஸங்கத்துக்காரர்கள் தவறாமல் செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment