Thursday 20 June 2013

கடமை தவறியவனுக்கு, பரோபகாரம், விபரீத பலனே தரும். -மஹா பெரியவா


''தன் கையே தனக்கு உதவி'' தன் கை பிறருக்கும் உதவியாகப் பரோபகாரப் பணிகளைச் செய்யத்தான் வேண்டும். ஆனால் தன் கை தன் கார்யத்துக்கு உதவியாக இல்லாமல், தன் கார்யத்துக்கு அகத்தின் மற்ற மநுஷ்யர்களின் கையை எதிர்பார்த்துக்கொண்டு அவர்கள் கையில் நம் கார்யப் பொறுப்பை போட்டுவிட்டு, நாம் ஊருக்கு உபகாரம் பண்ணுவது என்பது தப்பு. 

ஊருக்குப் பண்ணினால் நாலு பேர் நம்மைக் கொண்டாடுவார்கள். வீட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்காக, வீட்டார் நம்மைக் கொண்டாடமாட்டார்கள்தான். வீட்டுக்குப் பண்ணாமல், தன் சொந்தக் கார்யத்தைப் பண்ணிக்கொள்ளாமல், ஊருக்கு ஒருத்தன் பண்ணுகிறான்;அதற்கு இடைஞ்சலாகச் சொல்கிறார்களே என்று வீட்டுக்காரர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் அவனுக்கு வாஸ்தவமான தொண்டு உள்ளமே இல்லை, பேர் வாங்குவதற்காகத்தான் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணுகிறான் என்றே அர்த்தம்.

தொண்டு உள்ளத்துக்கு லக்ஷணம் அன்பும் அடக்குமும்தான். ''தொண்டர் தம் பெருமை''என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக மற்றவர்கள் கொண்டாடலாமேயழிய, தொண்டு செய்கிறவனுக்குத் 'தான் பெரியவன்'என்ற எண்ணம்லவலேசங்கூட இருக்கக்கூடாது. தான் ரொம்பவும் சின்னவன் என்ற எண்ணமே இருக்க வேண்டும். பேருக்கு ஆசைப்பட்டுக் கொண்டு தொண்டு செய்வதென்றால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணினதாகத்தான் அர்த்தம். அடக்கமும் அன்பும் இருந்தால் வீட்டிலே இருக்கிறவர்களை எதிர்த்துக் கொண்டும் அவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டும் எவனும் வெளியிலே தொண்டு செய்யப் போகமாட்டான்.

தான் பிறர் பாரத்தைத் தாங்குகிறவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தன் பாரத்தை இன்னொருவரிடம் தள்ளினால் அது தனக்கு அவமானம்;தன் கை பிறருக்கு உதவுவதாக இருக்க வேண்டுமேயழியத் தானே இன்னொரு கையை உதவிக்கு எதிர்பார்த்தால் அது தனக்கு ரொம்பவும் கௌரவஹீனம் என்ற உணர்ச்சி பரோபகாரத்தில் ஈடுபடுகிற எவனுக்கும் basic -ஆக ஏற்பட்டுவிட்டால் இப்போது கம்ப்ளெய்ன்ட் வந்தது போலக் கோளாறாக ஆகவே ஆகாது. லோக ஸேவைக்குப் போகிறவர்கள், ' என் கார்யம் பூராவையும் நானே பார்த்துக் கொண்டுதான் பொதுத்தொண்டுக்குப் போவேன் ' என்று பிரதிக்ஞை பண்ணிக் கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாய்விடும்.

தன் கார்யம் என்பதில் தன் வீட்டுக் கார்யம், மாதா-பிதா-பத்னி-புத்ரர்-ஸஹோதரர் முதலான வீட்டு மநுஷ்யர்களின் கார்யம் அடக்கந்தான்.

இதெற்கெல்லாம், basic -ஆக ஒரு ஞானம் இருந்துவிட்டால் போதும். அதாவது நம்முடைய லோக ஸேவையால்தான் லோகம் நடக்கிறது என்ற பிரமை ஒருகாலும் இருக்கக்கூடாது. மரம் வைத்தவன் தண்ணீர் விடுகிறான். லோகத்தைப் பண்ணின ஒருத்தன் இருக்கிறானே அவனே அதை ரக்ஷித்துவிட்டுப் போவான். அதற்கு நாம் ஒரு கருவிதான். நம்முடைய பாப கர்மா கழியவே பரோபகாரமே தவிர நாமில்லாவிட்டால் அந்த உபகாரம் லோகத்துக்குக் கிடைக்காமல் போய்விடாது என்ற ஞானம் இருந்தால் அளவோடு நிற்போம். 

ஜீவனத்துக்கு அவச்யமான சொந்தக் கார்யங்கள், குடும்பக் கடமைகள் இவற்றைப் பண்ணிக் கொள்வதிலும் கர்மநாசம், சித்த சுத்தி ஏற்படத்தான் செய்யும். ஈஸ்வராநுக்ரஹத்தில் இப்படிப்பட்ட பொறுப்புகள் அதிகமில்லாதவர்கள் நிரம்பப் பரோபகாரப் பணிகளில் ஈடுபட்டே ஆத்மாவைப் பரிசுத்தி பண்ணிக்கொள்ள வேண்டும்;அப்படிப்பட்டவர்களுக்கு இதுவே ட்யூட்டி ஆகிறது. டொமெஸ்டிக் ட்யூட்டிபோல ஸோஷல் ட்யூட்டியும் உண்டுதான். எத்தனை டொமெஸ்டிக் ட்யூட்டி இருந்தாலும், அதைப்பண்ணிவிட்டு, அதைப் பண்ணின அப்புறந்தான் ஸோஷல் ட்யூட்டியும் செய்ய வேண்டும். ரொம்ப அதிகம் குடும்பப்பொறுப்பு இருக்கிற ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோருக்குமே நியாயமான சொந்தக் கடமைகளைப் பண்ணிவிட்டும் ஸமூஹக் கடமை பண்ண அவகாசம் இருக்கவேசெய்யும். 

என் கடமையில் தப்பாமல், குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டே உன் குடும்பமான - வஸுதைவ குடும்பகம் : லோகமெல்லாம் ஒரு குடும்பம் என்கிறபடி - ஸகல மக்களுக்கும் என்னாலான பணியைச் செய்ய அருள் பண்ணப்பா''என்று ஈஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டால் அவன் அப்படி அனுக்ரஹம் செய்வான். அதுதான் நாம் பண்ணிக்கொள்ள வேண்டிய வேண்டுதல்.

எப்படியானாலும் தன் காரியத்தைப் பிறர் கையில் விட்டுவிட்டும், அகத்து வேலையைக் கவனிக்காமலும் ஊர்க் காரியம் என்று போவதில் பிரயோஜனமில்லை. இப்படிப் போனதில் அந்தப் பையன், வீடு என்றாலே எரிச்சல் படுகிறான் என்றார்கள். இப்படிக் கோபமும் தாபமும்தான் பரோபகாரம் பண்ணினதில் ஒருத்தனுக்கு மிஞ்சினது என்று ஏற்பட்டால் அது சித்த சுத்திக்குப் பதில் சித்த அசுத்திக்குத்தான் வழி பண்ணியிருக்கிறது என்றே ஆகிறது. அதாவது பரோபகாரம் நல்ல பலன் தராதது மட்டுமில்லாமல், விபரீத பலனே உண்டாக்கியிருக்கிறது!சாஸ்த்ர ரீதியான கடமையை விட்டதற்காக இப்படி நல்லதே தண்டனையாக ஆகிறது!

2 comments:

  1. //நாம் ஒரு கருவிதான்...//

    உணர வேண்டிய கருத்துக்கள் பல... நன்றிங்க ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி ! :-)

      Delete