Friday 19 July 2013

'தனக்கு மிஞ்சி தர்மம்'. இதற்கு ஏதோதோ தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கக்கூடாது- மஹா பெரியவா

'தனக்கு மிஞ்சி தர்மம்'. இதற்கு ஏதோதோ தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லுகிறேன்.


"தனக்கு மிஞ்சி" என்ற இந்த உணர்ச்சி வந்து விட்டால் - பரோபகாரம் என்பது ஈஸ்வரனின் கட்டளையான கடன் என்று புரிந்து கொண்டு விட்டால் - நாம் எத்தனை கஷ்ட தசையிலிருந்தாலும் பரோபகாரத்தை விட்டுவிடாமல் செய்வோம். ''தனக்கு மிஞ்சி தர்மம் என்றுதானே சொல்லியிருக்கு?நீயே ச்ரம தசையிலிருக்கிறபோது மற்றவர்களுக்காக வேறு ஏன் ச்ரமப்படுகிறாய்?''என்று கேட்கத்தான் கேட்பார்கள். அப்போது, ''நான் ச்ரம தசையில் இருக்கிறேன் என்றால் பூர்வ ஜன்மாவில் ஈஸ்வராக்ஞைகளை ஸரியாகப் பண்ணாததற்கு இது தண்டனை என்றே அர்த்தம். போன ஜன்மத்தில் நான் பிறத்தியாருக்கு எந்த உபகாரமும், தொண்டும் பண்ணாததால் இப்போது கஷ்டப்படுகிறேன். அதனாலேயே இப்போதுதான் நிச்சயமாக நான் பரோபகாரம் செய்தாக வேண்டும். தனக்கு மிஞ்சி - போன ஜன்மாவின் (கர்ம) பாக்கியாக, அப்போதைய உடம்பு போன பிறகும் மிஞ்சி - இப்போது வந்து சேர்ந்திருக்கும் இந்தக் கஷ்டம்தான், 'தனக்கு மிஞ்சி'. இது தீருவதற்காகவே தர்மம் செய்தாக வேண்டும். அதுதான் 'தனக்கு மிஞ்சி தர்மம்'. நீர் அதற்கு வேறேதோ தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறீர். இப்போது நான் தன்னையும் மிஞ்சி - அதாவது என் சொந்தக் கஷ்டத்தையும் மிஞ்சி - தர்மம் பண்ணனால்தான் வருங்காலத்திலாவது நன்றாயிருப்பேன்'' என்று பதில் சொல்ல வேண்டும்.

எத்தனையோ கஷ்டத்திலும் இளையான்குடிமாறநாயனாரைப் போலப் பரோபகாரம் பண்ணினவர்களின் ஞாபகம் நமக்குப் போகக்கூடாது.

பரோபகாரம் பண்ண வேண்டுமென்பதே நமக்கு உண்டான ஒரு 'கடன்'தான்! பிதிர்கடன் என்கிறோம். சாஸ்திரத்திலேயே 'ருண த்ரயம்' என்று மூன்று கடன்களைச் சொல்லியிருக்கிறது. பிராம்மண ஜன்மா எடுத்தவன் ரிஷிகளிடமும், தேவர்களிடமும், பித்ருக்களிடமும் கடன்பட்டிருக்கிறானென்றும் வேதாத்யனத்தால் ரிஷிக் கடன் தீர்கிறதென்றும், புத்ர ஸந்ததி உண்டுபண்ணுவதால் பிதிர் கடன் தீர்கிறதென்றும் சொல்லியிருக்கிறது. வேத சாஸ்திரங்களிலேயே சொன்ன பஞ்ச மஹா யஜ்ஞங்களில் 'ந்ரு யஜ்யம்'என்பதாக மற்ற மனிதர்களுக்குப் பண்ணவேண்டியதும், 'பூத யஜ்ஞம்'என்பதாக எல்லா உயிரினங்களுக்குமே பண்ண வேண்டியதும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், மநுஷ்யர்கள் மிருகங்கள் பக்ஷிகள் எல்லாவற்றுக்கும் நாம் ஆற்ற வேண்டிய பரோபகாரத்தையும் 'கடன்'என்றே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நாமாக ஒருத்தனுக்கு தானம் பண்ணாமல் இருக்கலாம். எவனோ கடன் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று சொல்லலாம். ''கொடுத்தா வைத்திருக்கிறீர்?என் பணம். கொடுப்பதும் கொடுக்காததும் என் இஷ்டம்''என்று சொல்லலாம். ஆனால் நாம் கடன் பட்டிருக்கும் போது கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்டால் இப்படிச் சொல்ல முடியுமா?முடிகிறதோ இல்லையோ எப்பாடு பட்டாவது அவனுக்குக் கொடுத்துத் தீர்க்கத்தானே வேண்டும்?இப்படித்தான் நாம் கடன் பட்டிருப்பவர்களுக்காக வேதம் பஞ்ச மஹா யஜ்ஞங்களை விதித்திருக்கிறது. கடன் என்றால் திருப்பித்தானே ஆகவேண்டும்?ஆகவே இதைச் செய்யமாட்டேன் என்று சொல்ல நமக்கு 'ரைட்'டே கிடையாது. நம் போன்ற மநுஷ்யர்களுக்கும், பசு பக்ஷிகளுக்கும் உபகாரம் என்ற ரூபத்தில் யஜ்ஞம் செய்து அவற்றைத் திருப்திப்படுத்த வேண்டியது நம் கடமை. 'கடன்'என்பதிலிருந்தே 'கடமை'என்பது வந்திருக்கிறது. ஈஸ்வரன் இந்தப் பிரபஞ்சத்திலே ஒரு ஜீவனைப் பிறப்பித்து, அந்தப் பிரபஞ்சத்தால் அவன் பலவிதமான ஸெளக்கியங்களை அடைய வேண்டுமென்று வைத்திருக்கிறபோதே அதைச் சேர்ந்த எல்லா வகை ஜீவ இனங்களுக்கும் - பூச்சி பொட்டிலிருந்து ஆரம்பித்து தேவ, ரிஷிகள் வரைக்கும் - தன்னலான தொண்டை அவன் செய்ய வேண்டும் என்று வேதத்தின் மூலம் ஆர்டர் போட்டிருக்கிறான். ஆதலால் இதைக் கடனாக, கடமையாகச் செய்தேயாக வேண்டும். 'கடனே'என்று செய்யாமல் அன்பைக் கலந்து, உபகாரத்துக்குப் பாத்திரமாகிற எல்லாரையும் அந்த ஈஸ்வர ஸ்வரூபாகவே பாவித்து அடக்கத்தோடு பணி செய்ய வேண்டும்.

தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு வெளியிலே வருவதுதான் தனக்கு மிஞ்சுவது. இப்படி வந்து லோகத்துக்கு உபகரிப்பதுதான் ''தனக்கு மிஞ்சி தர்மம்''என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

இது ரொம்ப ஹை லெவலில் (உயர் மட்டத்தில்) . லோயர் லெவலில் (அதற்கு கீழ்ப்பட்ட நிலையில்) பிறருக்கு திரவிய ஸஹாயம் செய்வதற்காகவே தான் மிச்சம் பிடிக்கும் விதத்தில் வரவுக்குள் செலவை அடக்கி, கடன் கஸ்தி இல்லாமல் சிக்கனமாக வாழவேண்டும்.

1 comment:

  1. மஹா பெரியவா அவர்களின் விளக்கம் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete