Saturday 7 February 2015

'யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே' - தன்னை பற்றி மஹா பெரியவா கூறும் விளக்கம்...

'சுவாமிகளை இந்த மாதிரி ராப்பகல் போட்டு பிடுங்கப்படாது' என்று மடத்து காரர்களும் என்னை சுற்றி இருக்கிறவர்களும் ஜனங்களை கோபித்துகொள்கிறார்கள்.

'சுவாமிகளுக்கும் சரீரம் இல்லையா? அதற்கு சிரமம் இருக்காதா? என்று சொல்லி (குறை சொல்லிகொள்ள வருகிறவர்களை) தடுக்கிறார்கள், விரட்டிக்கூட அடிக்கிறார்கள்.

இது சரிதானா? என் ஒருத்தனுக்கு சரீர சிரமம் ஏற்படும் என்பதற்காக இத்தனை பேர் மனசில் இருக்கிற ஸ்ரமத்தை, கொதித்து கொண்டு இருக்கிற தவிப்பை சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு தாபசமனம் அடைவதை தடுப்பது நியாயம் ஆகுமா?

நான் எதற்காக இருக்கிறேன்? இந்த வாழ்க்கை - வாழ்நாள் எதற்காக ஏற்பட்டு இருக்கிறது? ஜனங்களுடைய கஷ்டங்களை கேட்டு ஆறுதல் சொல்வதற்காகத்தான் இந்த வாழ்க்கை ஏற்பட்டு இருக்கிறது. 

ஜனங்கள் ராவும் பகலும் படுகிற துக்க பாரத்தை லேசாகுவதற்கு தான் இந்த சரீரம் ராவும் பகலும் தன்னால் ஆன உபகாரத்தை செய்ய வேண்டும் என்று ஏற்பட்டு இருக்கிறது.

நான் லேசாக்குகிறேன் அதற்காக ஏதோ பண்ணுகிறேன். பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறது - என்றெல்லாம் இல்லை. ஜனங்கள் தாங்களே தங்களை லேசாக்கி கொள்வதற்கு என்னை ஒரு கருவியாக வைத்து இருக்கிறது என்று சொல்லுகிறேன்.

காரியத்தில் நான் பரிஹாரம் பண்ணினாலும், பண்ணாவிட்டாலும், வாய் வார்த்தையாக ஆறுதல் சொல்லி விட்டாலே கஷ்டப்படுகிறவர்களுக்கு ரொம்பவும் நிம்மதியாகி விடுகிறது.

'யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!' என்று திருமூலர் சொன்ன வாயுபகாரம் தான் நான் பண்ணுவது.

No comments:

Post a Comment