Thursday 21 January 2016

"பாமதி'யும்,'பரிமள'மும்" - மஹா பெரியவா

ஸ்ரீமடம், கும்பகோத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த காலம்.

மகாப் பெரியவாள் பிரும்மஸூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஏராளமான வித்வான்களும்,சந்யாசிகளும் கேட்டுப்
பரவசப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வித்வான் இடையில் சந்தேக விளக்கம் கேட்டார்.

பெரியவாள் ஐந்து நிமிஷம்போல் பதில் சொல்லி விட்டு,  
" ..'பாமதி'யிலோ,   'பரிமளத்'திலோ இதற்கு
விஸ்தாரமான பதில் இருக்கு.அதைப்படிச்சால் போதும்... மடத்து லைப்ரரியிலே அந்தப் புஸ்தகம் இருக்குமே! பார்த்துவிடலாமே?" என்றார்கள்.

புத்தகசாலைப் பொறுப்பாளர் ராமமூர்த்தி சாஸ்திரி,

"யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருக்கார்... இப்போ லைப்ரரியில் இல்லை!" என்றார்.

அந்த சமயத்தில் தெருப்பக்கத்தில் பேரிச்சம்பழக்காரன் குரல் கணீரென்று கேட்டது.

"பழைய புஸ்தகங்களைப் போட்டுவிட்டு, சிலபேர் பேரிச்சம்பழம் வாங்கியிருப்பா, உடனே போய், அவனிடம் இருக்கிற 
புஸ்தகங்களையெல்லாம் விலை பேசி வாங்கிக்கொண்டு வா" என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.

அவர் ஒரு கட்டு புஸ்தகங்களுடன் வந்தார். 

அபூர்வமான சம்ஸ்க்ருத புத்தகங்கள்! புத்தகக் காகிதம் பழுப்பு நிறமாகிவிட்டிருந்தது. 

"சாஸ்திரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ..."என்று
உத்திரவாயிற்று.

சாஸ்திரிகள் ஒவ்வொரு புஸ்தகமாக எடுத்து தலைப்பை சொல்லிக் கொண்டு வந்தார். அந்தக்கட்டில், 'பாமதி'யும்,'பரிமள'மும்
(அத்வைத விளக்க நூல்கள்) இருந்தன.
------------------------------------------------------------------------
'பாஷ்ய பாடம் நடக்கும் நேரம் பார்த்து
பேரிச்சம் பழக்காரன் வருவானேன்?
அவனிடம் புஸ்தகங்கள் இருப்பானேன்?
அவைகளை விலைக்கு வாங்கும்படி
பெரியவாளே உத்திரவு இடுவானேன்?
(கீழே உள்ள கதையைப் படியுங்கள் விளக்கத்திற்கு)
-------------------------------------------------------------------------------------
அம்பிகாபதி கதை :(இதனை  "அம்பிகாபதி" திரைப்படத்தில் கூட பார்த்து இருப்போரும் உண்டு. )

கல்விச்சக்ரவர்த்தி கம்பருடைய மகன் அம்பிகாபதியும், குலோத்துங்க சோழனின் மகள் அமராவதியும் ஒருவரையொருவர் விரும்புவதைத் தெரிந்து கொண்ட ஒட்டக்கூத்தர், சோழனிடம் இதைப்பற்றி கொளுத்தி விட்டார். அரசன் நம்புவதற்காக, கம்பரையும் அம்பிகாபதியையும் மட்டும் தனியான விருந்துக்கு அழைக்கச் சொல்லி, அவர்களுக்கு அன்னம் பரிமாறும் வேலையை இளவரசியான அமராவதி செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடு பண்ணினார்.

விருந்துக்கு அம்பிகாபதி வரப்போவதை அமராவதிக்கும், அமராவதி அன்னம் பரிமாறப் போவதை அம்பிகாபதிக்கும் சொல்லக் கூடாது என்று கூறினார். அப்போதுதான் அவர்களுடைய அன்பை கண்கூடாக அரசனால் காண முடியும் என்றும் கூறினார்.

அதன்படியே ஒட்டக்கூத்தர், அரசன், கம்பர், அம்பிகாபதி நால்வரும் விருந்துண்ண அமரவும், அமராவதி அன்னவட்டிலைத் தூக்கிக் கொண்டு வந்ததும், இருவருக்குமே பெருத்த ஆஸ்சர்யமும், ஆனந்தமும் உண்டானது! 

அம்பிகாபதியும் பெரிய கவியில்லையா? அமராவதியை எதிர்பாராமல் அங்கு பார்த்த ஆனந்தத்தில், கவிதையும் துள்ளிக் கொண்டு வந்தது! தான் எங்கு இருக்கிறோம், என்ன பின்விளைவு என்பதெல்லாம் மறந்தது இருவருக்கும்!

"இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க 
வட்டில் சுமந்த மருங்கசைய......."

என்று அம்பிகாபதி ஆரம்பித்ததும், அமராவதியின் பாதம் கொப்பளித்ததோ இல்லையோ....அரசனின் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது! கம்பரும், மைந்தனின் தகுதியில்லா அன்பால், நிலைகுலைந்து போனார்! விட்டால்....பிள்ளை இன்னும் எதையாவது பாடி, மன்னன் அவனுக்கு அங்கேயே ஸமாதி கட்டி விடுவானோ? என்ற பயத்தில், வாக்தேவியான வாணியை சரணடைந்தார்! பிள்ளை ஆரம்பித்த கவிதையை, தான் முடித்து வைத்து, அவனையும், இளவரசியையும் சுதாரித்துக் கொள்ள வைத்தார்.

"இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க 
வட்டில் சுமந்த மருங்கசைய.......
கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று 
கூவுவாய் நாவில் வழங்கோசை வையம் பெறும்...!" என்று முடித்தார்.

ஒட்டக்கூத்தரோ, மன்னருக்கு தூபம் போட்டு, அம்பிகாபதி பாடியது அமராவதியைப் பார்த்துதான், என்றதும், "கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியின் குரல் கேட்டுத்தான் என் மகன் பாடினான்" என்று கம்பர் சொன்னதும், அரசன் ஆட்களை அனுப்பி, வீதியில் கொட்டிக்கிழங்கு விற்கும் பெண் யாராவது இருந்தால் உடனே கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

சதா தமிழ் என்னும் அழகால் தன்னை மேலும் அழகு படுத்தும் தன்னுடைய பக்தனான கவிச்சக்ரவர்த்தியை, கலைமகளான ஸரஸ்வதி தன் அனுக்ரஹ அழகால் அக்ஷணமே காப்பாற்றினாள்.

ஆம்! கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாக ஸாக்ஷாத் ஜகன்மாதாவான ஸரஸ்வதியே வந்துவிட்டாள் !

காவலர்கள் அவளை அழைத்து வந்து, மன்னன் முன் நிறுத்தியதும்,
"கம்பனின் கவிதைக்கு எதைத்தான் தரக்கூடாது? கொட்டிக்கிழங்கு தரட்டுமா?" என்று அவள் கூறியதும், மன்னன் ஒட்டக்கூத்தரை ஓரங்கட்டி விட்டுவிட்டு, தன் சந்தேஹம் ஆதாரமற்றது என்று அப்போதைக்கு நம்பினான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
வாக்தேவியை நாவில் நர்த்தனமாடவிட்ட கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி 'கொட்டிக்கிழங்கு' விற்க வரும்போது,- ஸாக்ஷாத் 'இந்த்ர ஸரஸ்வதி' யான நம் பெரியவா ஸங்கல்பித்தால், அம்பிகை ஏன் பாமதி, பரிமளத்துக்காக, 'பேரீச்சம்பழம்' விற்க மாட்டாள்?

1 comment:

  1. தீர்க்க தரிசனம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete