Wednesday 2 March 2011

ஆதிசங்கரர் குமாரிலபட்டருக்கு அருளியது

வேதம் சொல்கிறபடி அவரவரும் கர்மாவை, கடமையைச் செய்தால்தான் லோகஷேமம் உண்டாகும். ஆனால்,  கர்மா உள்ளவரை அதன் பலனை அநுபவிக்க ஜன்மா  எடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்பதால், ஜன்மா முழுவதும் துக்கம் இல்லாமல் நிறைந்திருக்க எவராலாவது முடியுமா? அது தரும் ஆனந்தம் தற்காலிகமே; ஆதலால், அவரவர்களுக்கு பரமப்பிரோஜனம் ஏற்பட, கர்மாநுஷ்டானத்தால் சித்த சுத்தி உண்டானபின், கர்மாவை விட்டு ஆத்மா விசாரம் பண்ணி, தியான யோகத்தில் இறங்கி அதன் முடிவில், தான் எங்குமாக நிறைந்து ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிற ஆத்மாவே என்று அநுபவிக்கிறபோதுதான், நிறைந்த நிறைவு, பூரணத்துவம், சாசுவத சௌக்கியம் உண்டாகும்.

இத்தனை கர்மாவும் அந்தக் காரியமற்ற  நிலைக்குக் கொண்டுவிட ஏற்பட்டவையே.  ஏன் கர்மாவை செய்து சித்த சுத்தி அடைய வேண்டும்? நேரிடையாகவே யோகா அப்பியாசங்கள் செய்து மனசை ஒருநிலைப்படுத்தி, ஞானம் அடைய முடியாதா என்றால், அரிச்சுவடி படிக்காமலேயே அறிஞ்ன் ஆக முடியாதான்னு கேக்கறமாதிரிதான் இதுவும். ஒரு நிலை வரைக்கும் வேத விதிப்படி லோக க்ஷேமார்த்தமாக கர்மா (கடவுள் வழிபாடு, பூஜை, ஸ்தோத்திரம், நாமபஜன், த்யானம், யோகம் என்றெல்லாம்) செய்து செய்துதான்,மனஸைக் கண்டபடி திரியாமல் தர்மத்தில் கட்ட முடியும். 

கர்மம், பக்தி, ஞானம் என்றுதான் படிப்படியாக போக முடியும். முடிவில் சித்த கத்திக்கு கர்மாதான் முக்கியம். முடிவில் ஞானம்தான் முக்கியம். ஆரம்பத்தில் ஞானம் இல்லாமல் கர்மா செய்தாலும் போதும். முடிவிலே கர்மாவே இல்லாத ஞானம் வந்து விடும். கர்மம் பண்ணுவது லோக க்ஷேமத்துக்காக, ஸ்வாமிதான் வேதத்தின் மூலம் கடமைகளை விதித்து பலன் தருகிறார்.

ஈசுவர பக்தி இல்லாமல் வறட்டுக் கர்மம் செய்வது பிசகு. சிலர் ஆயுள் முழுவதும்,தங்கள் மட்டத்தை -லெவலை- அறியாமல், பக்திக்கும், ஞானத்துக்கும் வராமல், பரம் ஞானத்தை துளிக்கூட அனுபத்தில் கொண்டுவர முடியாத சாமானிய மனிதர்களாகவே, வெறும் கர்மாவோடு நின்று விடுவார்கள்,

கர்மாவே பலன் தருவதில்லை. கர்மம் என்பது ஜடம். அது தனக்குத் தானே பலன் தந்து கொள்ள முடியாது. அதனாலேயே, கர்மாவில் ஏதுனும் குறை ஏற்பட்டால் கூட, க்ஷமித்துக் கைதூக்கிவிட ஈசுவரனே பலதாதாவாக வருகிறான் என்பதாலேயே,   கடனே என்று இல்லாமல், சொந்த ஆசைக்காக இல்லாமல், குறை வராமல் கர்மா செய்யும் சக்தியையும் சிரத்தையையும் பெறவும், அவரையே பிராத்தித்து,  நிஷ்காம்யமாக (பற்றில்லாமல்) பகவான் பிரீதிக்காகச் செய்கிறோம் என்கிற பாவம் வந்தால்தான், கர்மமெல்லாம் ஈச்வரார்ப்பணம் செய்யப்பட்டு, பக்தியிலும், அந்த பக்தி ஈசுவரனோடு இரண்டறக் கலந்து, ஞானத்தில் கொண்டுவிடுவதற்குத்தான் என்று புரிபட ஆரம்பிக்கும்..

No comments:

Post a Comment