Thursday 10 January 2013

அதிக ஸெளகர்யம் கூடாது - பரமாச்சாரியார்




இப்போது ஆசைப்படுகிறபடி எல்லோருக்கும் ரொம்ப வசதி, ஸெளகர்யம் பண்ணித்தருவது என்பது முடிவே இல்லாமல் துராசைகளைப் பெருக்கி விடுகிற ஏற்பாடுதான். எல்லோருக்கும் கார், பங்களா, ரேடியோ, டெலிபோன் இருக்கிற அமெரிக்காவில் ஜனங்கள் திருப்தியடைந்து விட்டார்களோ. 

இல்லை. அங்கேதான் நம்மைவிட ஜாஸ்தி அதிருப்தி, அதனால் ஜாஸ்தி கொலை அல்லது தற்கொலை, மயக்க மருந்து சாப்பிட்டுவிட்டுத் தன்னை மறந்து கிடப்பது என்று இருக்கிறது. எல்லோருக்கும் கார் என்றாலும், இன்றைக்கு இருக்கிற கார் நாளைக்கு இல்லை. புதுப்புது மாடல்கள் இன்னும் ஜாஸ்தி ஸெனகர்யங்களோடு வந்தபடி இருக்கின்றன. எனவே இப்போது சேர்ந்துள்ள டாலர் போதவில்லை. அந்தப் புது மாடலுக்காக இன்னும் ஸம்பாதிக்க வேண்டும். அப்புறம் அதைவிட விலை ஜாஸ்தியாக, இன்னும் ஜாஸ்தி ஸெளகர்யங்களோடு இன்னோரு மாடல் வரும். அப்புறம் வீட்டுக்கு வீடே பறப்பதற்குகூட பிளேன்கள் வந்தாலும் வரும். 

இப்படியேதான் முதலில் வெறும் குடிசை. அப்புறம் ஒடு போட்டது. அப்புறம் சிமென்ட் சுவர். ஒட்டுக் கட்டிடம். அதற்கப்புறம் சிமென்டிலேயே நைஸ் ரகங்கள். சாணி போட்டு மொழுகின தரை காரையாகி, ஸிமென்டாகி, அப்புறம் மொஸைக், அதைவிட இன்னும் வழுவழுப்பான ரகம் என்று மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவே கிடையாது. துணியை எடுத்துக் கொண்டாலும் நாளுக்கு நாள் புதுப்புது தினுசுகள். எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டும். இப்போது இருப்பதே ஸொகூர்யமாக இருந்தாலும் நம்முடைய புத்தி சாதூர்யத்தால் இதைவிட சொகர்யமான சாதனங்களைக் கண்டுபிடித்துக் கொண்டேபோய், எப்பொதும் நாம் இருப்பது அஸொகர்யம்தான் என்று ஆக்கிக் கொண்டு, அதைவிட ஸொகர்யத்திற்காக தவித்தபடி இருப்போம். திருப்தியோ, நிம்மதியோ இல்லாமல் மேலே மேலே ஸம்பாதனம் பண்ணிக் கொண்டேதான் போவோம். 

நெருப்பிலே பெட்ரோலை விட்டு அணைத்துவிடலாம் என்று நினைக்கிற மாதிரிதான், புதுப்புதி சாதனங்களைக் கண்டுபிடித்து ஆசையைப் பூர்த்தி செய்து விடலாம் என்று நினைப்பது.

இது நம் பூர்விகர்களான மஹரிஷிகளுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் மநுஷ்யனின் அத்யாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுவதற்குப் போகவேகூடாது என்று வைத்தார்கள். ஸமீக காலத்தில் காந்தி இதையேதான் வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் ஒரு மாதிரி டாம்பீக வாழ்க்கைக்கு ஆசைப்பட வைப்பது என்ற இந்த நூற்றாண்டில் முன்னேற்றம் எனப்படுகின்ற முயற்சிகள் இருக்கிற வரையில், தனியாக எவனுக்கும் திருப்தி இராது. சமூக ரீதியிலும் போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் போகவே போகாது. வர்ணாச்ரம தர்மப்படி எகானாமிகல் லெவலில் (பொருளாதாரத்தில்) பிராம்மணனும் மற்றவனும் ஸமம்தான். ஜாதி வித்தியாசமின்றி அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான எளிய வாழ்க்கையைத்தான் சொல்லியிருக்கிறது. இப்படி எளிமையில் ஸமமாக இருப்பதுதான் ஸாத்யமுமாகும். இந்த நிலையில் தன் ஜீவனும் திருப்தி அடைகிறான். ஆத்ம க்ஷேமம் அடைகிறான். ஸமூஷத்திலும்ஒருத்தனைப் பார்த்து இன்னொருத்தனும் வயிற்றெரிச்சல் இல்லாமல் போகிறது.

பணமும் வசதியும் எந்தத் தொழில்காரருக்கும் அதிகம் இருக்கக் கூடாது. இவற்றைவிட முக்கியமானது இவை எவற்றை உத்தேசித்து ஏற்பட்டனவோ,

ஆனால் இவற்றாலேயே ஏதை நேராகப் பெற முடியவில்லையோ, அந்த ஆத்ம திருப்திதான், மன நிறைவுதான் மனிதனுக்கு வேண்டியது, திருப்தனாக இருந்தால்தான் ஆனந்தமாக பகவத் தியானம் பண்ண முடியும். அப்படிப் பட்ட மனசில்தான் பரம சத்தியமான வஸ்து எதுவோ அது தெரியும். அதனால்தான் நம் சாஸ்திரப்படி ரொம்பவும் எளிய வாழ்க்கையை விதித்திருக்கிறது. 

ஓரளவுக்கு மேல் ஸொகர்யங்கள் அதிக மாகி விட்டால் அப்புறம் இந்திரிய சுகத்துக்கு மேலான விஷயங்களுக்குப் போகவே முடியாது. அதே மாதிரி, உழைப்பு இல்லாமல், சிரமமே படாமல் சுக ஜீவியாக இருந்தாலும் புத்தி கண்டதை நினைத்துக் கெட்டுதான் போகும். ஆகையினால் ஆத்மிகமாக உயர வேண்டுமானால் அஸெனகர்யமும், சிரமமும் கடும் உழைப்பும் வேணத்தான் வேண்டும். என்ன நிலைமையையும் ஸெனக்கியமாக பாவிக்கிற மனப்பான்மை அப்போதுதானே வரும்?

No comments:

Post a Comment