Sunday 6 January 2013

பிராமணர்களின் ஒரு பிரிவை ஏன் "வடமா" என்று சொல்லுகிறோம்? - மஹா பெரியவா




 தமிழ் நாட்டு பிராம்மணர்களில் "வடமர்" என்றும் ஒர் பிரிவு இருக்கிறது. 'வடமாள்', 'வடமா' என்கிறோம். "என்ன வடைமாவா, தோசை மாவா?" என்று கேலிகூடப் பண்ணுகிறோம். இது "வடமர்" என்பதே. தமிழ் நாட்டில் ஆதியிலிருந்து வஸித்துவந்த சோழியர்களைத் தவிர பிற்பாடு வடக்கேயிருந்து, குறிப்பாக நர்மதா நதிப் பிரதேசத்திலிருந்து, தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறிய பிராம்மணர்களதான் இந்த வடமர்கள். பெயரே அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று காட்டுகிறது

ஆனால், இப்போது சிலர் நினைக்கிற மாதிரி, "அத்தனை பிராம்மணர்களுமே வடக்கேயிருந்து இங்கே வந்தவர்கள்தான்;தமிழ் தேசத்தில் ஆதியில் பிராம்மணர்களே இல்லை"என்பது தப்பான அபிப்ராயம் என்பதற்கும், "வடமர்"என்ற வார்த்தையே proof -ஆக இருக்கிறது. எல்லா பிராம்மணர்களுமே வடதேசத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றால், தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பிராம்மணர்களுக்குமே "வடமர்"என்ற பெயர் ஏற்பட்டிருக்கும். அப்படியில்லாமல், தமிழ் நாட்டு பிராம்மணர்களில் ஒரு பிரிவுக்கு மட்டுமே "வடமர்" என்று பெயர் இருப்பதாலேயே, பாக்கியுள்ள பிராம்மணர்கள் ஆதியிலிருந்து தமிழ்நாட்டையே சேர்ந்தவர் என்றுதானே அர்த்தமாகும்?அந்த ஆதித் தமிழ் பிராம்மணர்கள் தான் 'சோழியர்கள்'எனப்பட்டவர்கள்.

"வடமர்"கள் நர்மதா தீரத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது. வடமர்கள் மட்டும் இன்றைக்கும் ஸந்தியாவந்தனத்தில்,

நர்மதாயை நம:ப்ராத:நர்மதாயை நமோ நிசி|

நமோஸ்து நர்மதே துப்யம் பாஹி மாம் விஷ ஸர்ப்பத:||

என்பதாக, நர்மதைக்குக் காலையிலும் நிசியிலும் வந்தனம் சொல்லி, தங்களை ஸர்ப்ப பயத்திலிருந்து ரக்ஷிக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.

 'வடமர்கள்' என்று வடக்கேயிருந்து வந்தவர்களில் பலர், தமிழ் நாட்டின் வடபகுதியான பல்லவ ராஜ்யத்திலேயே தங்கிவிட்டார்கள். இவர்களுக்கு 'ஒளத்தர வடமர்'என்று பிற்பாடு பெயர் உண்டாயிற்று. தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்து வந்தபின், தமிழ்நாட்டுக்குள் அதன் "அதன் உத்தர"பாகத்தில் (வடக்குப் பகுதியில் ) தங்கி விட்டதால் "ஒளத்தர"என்று அடைமொழி ஏற்பட்டது. வடமர்களிலும் ஸாமவேதிகள் சிலர் உண்டு.

No comments:

Post a Comment