Sunday 20 January 2013

வரதக்ஷிணைக்கும், பாபுலேஷனுக்கும் என்ன சம்பந்தம்?


இப்போது குடும்பக் கட்டுப்பாடு என்று அஸங்கியமாகப் பல காரியங்களை தண்டோரா போட்டுக் கொண்டு பண்ணுகிறார்களே, இதற்கு அவசியமே இல்லாமல், தன்னால் இயற்கையாகவே குழந்தைகள் பிறப்பது ரொம்பவும் மட்டுப்படும். முடிந்த மட்டில் சமைத்த ஆஹாரங்களுக்குப் பதில் பழங்களைச் சாப்பிடுவது, சாஸ்திரப்படி நிஷேதனமான (விலக்கப்பட்ட) நாட்களில் பிரம்மச்சரியத்தோடு இருப்பது என்பதாக தம்பதிகள் இருக்க ஆரம்பித்து விட்டால், ஆர்டிஃபீஷியலாக (செயற்கை முறைகளில்) குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது.


இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்ல என்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். 

வரதட்சிணைப் பிரச்சனைக்கு 'ஸொல்யூஷன்' (தீர்வு) தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதட்சிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? 

பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதட்சிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சாஸ்திரப்படி, குறைச்சலாக உள்ள சரக்குக்குத்தான் கிராக்கி ஜாஸ்தி. இதன்படி, பாபுலேஷனில் புருஷப் பிரஜைகள் குறைவாகி, பெண்கள் அதிகமாக ஆரம்பித்தபோதுதான், பெண்களுக்கு ஸம எண்ணிக்கையில் பிள்ளைகள் இல்லாததால் பெண்ணைப் பெற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரதக்ஷிணை கொடுக்கிற பழக்கம் ஏற்பட்டது. 
இது ஸமீபகால வழக்கந்தான். இது ஏற்பட்ட சந்தர்பத்தை நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், வெள்ளைக்கார ஆட்சி ஏற்பட்டு பிராம்மணர்கள் குமாஸ்தாக்களாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெறும் பேனாவால் உழுகிற sedantry வேலைகளை ஆரம்பித்த பின்தான் இந்த நிலை உண்டானதாகத் தெரிந்தது. அதாவது உடல் வருந்த இவன் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணின காலம் போய் உட்காரந்து உத்தியோகம் பண்ண ஆரம்பித்த பின்தான் இவனுக்குப் புருஷ பிரஜைகளைவிட அதிகமாகப் பெண் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. கடைசியில் அதன் விளைவாகப் பிள்ளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு வரதட்சிணை என்கிற பெரிய களங்கம் உண்டாகி விட்டது. 

யக்ஞம் மட்டுமில்லாமல், 'பூர்த்த தர்மம்'என்ற பெயரில் முன் காலங்களில் பிராம்மணன் ஸோஷல் ஸர்வீஸ் செய்த போது வெட்டுவது, கொத்துவது, உழுவது முதலான காரியங்களிலும் மற்றவர்களோடு ஒரளவு பங்கு எடுத்துக் கொண்டு சரீர சிரமம் நிறையப்பட்ட வரையில் அவனுக்கு ஆண் பிரஜையே அதிகமாகப் பிறந்தது.

இப்படி நான் சொல்வதற்கு பலன் தருவதாக இன்னொன்றும் சொல்கிறேன். முன்பு பிராம்மணர்களிடம் மட்டுமிருந்த வரதட்சிணை வழக்கம் மெதுவாக இப்போது மற்ற சில ஜாதியார்களிடமும் ஏற்பட்டு வருகிறதல்லவா? இவர்கள் யார் என்று பார்த்தால், அநேகமாக இவர்களும் சரீர உழைப்பை விட்டுவிட்டு, உட்கார்ந்து வேலை பார்க்கிற முறைக்குத் திரும்பினவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனபடியால் இப்போது ஆபீஸ்களில் வேலை செய்கிறவர்களும், லீவ் நாட்களிலாவது குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோவிலுக்கு மதில் கட்டுவது முதலான ஸோஷல் சர்வீஸ்களை உடல் வருந்தப் பண்ணினால் ஆண் பிரஜைகள் அதிகம் பிறந்து, முடிவில் வரதட்சிணைப் பழக்கம் தொலையும் என்று நினைக்கிறேன். 

அதோடு, கூடுதலாக நம்முடைய மத சாஸ்திரம் செய்திருக்கிற வியவஸ்தை என்ன என்றால்: ஸ்திரீ ரிதுவான தினம் முதல் நாலு நாட்களில் ஸங்கமம் செய்யக்கூடாது. அப்புறம் பன்னிரண்டு தினங்கள் மட்டுமே செய்யலாம். அப்புறமும் அடுத்த முறை ரிதுவாகும் வரையில் கூடாது. நடுவே சொன்ன பன்னிரண்டு நாட்களிலும் அமாவாஸ்யை மாதிரியான சில திதிகள், சில நக்ஷத்ரம் முதலியவற்றில் கூடாது. இதையெல்லாம் தள்ளி மிச்ச நாட்களில்தான் கர்ப்பாதானம் செய்யலாம் என்று விதி. இதை அநுஸரித்தால் தம்பதிகளின் தேக-மனோ புஷ்டிகள் என்றைக்கும் குறையாது என்பதுடன், குறைவற்ற உடல் சரீர உழைப்பும் சேர்ந்து கொண்டால், ஆண் சந்ததிக்கு குறைவிருக்காது.

No comments:

Post a Comment